Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 12, 2008

உங்களுக்கு பேச்சாற்றல்,மொழி அறிவு உண்டா? -ஓர் ஜோதிட ஆய்வு

(கொஞ்சம் நிண்ட பதிவு)

மனித இனம் ஜாதி, மதம் மற்றும் மொழி என அனைத்திலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் செயல் நிலை ஒன்றாக இருக்கிறது என்பதை உணரலாம்.
இதில் ஜாதி, மத வேறுபாடு தோன்றலுக்கு முன்பாகவே மொழி என்பது உண்டானது. மொழி என்பதை பற்றி கூற வேண்டுமானால் பல கருத்துகளை கூறிகொண்டே போகலாம். அரசியல் மற்றும் இலக்கியம் என பேசுபவர்கள் மொழி மேல் பற்றுடனும் , இன்னும் சிலர் வெறி உடனும் இருப்பதை பார்க்கிறோம்.

மொழி என்பது செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் ஓர் ஒலி வடிவம் என்பதை தவிர்த்து அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒருவரிடம் நேரடியாக கருத்துக்களை பரிமாற்றம் செய்ய மொழியானது ஒலி வடிவிலும், நேரடியாக இல்லாத பொழுது வரிவடிவிலும் பயன்படுகிறது. வரி வடிவம் பெரும் மொழி இலக்கணம் இலக்கியம் எனும் கட்டுப்பாட்டில் அமைந்துவிடுகிறது.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணியின் அசைவுகளையும், தேவைகளையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? அதே போல தனது நன்றியையோ மகிழ்ச்சியையோ அந்த பிராணிகளும் உங்களுக்கு உடல் அசைவால் புரியவைக்கும். இதுவும் ஓர் மொழிதான். மொழி என்பது இயற்கையானது.

காரணம் மொழி என்பதை உருவாக்கியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தமிழை எடுத்து கொண்டால் கல்தோன்றி மண் தோன்றா காலம் என்போம். இதே போல அனைத்து மொழிக்கும் உருவாக்கியவர்கள் இல்லை என்பது ஓர் பொதுவான ஒற்றுமை. இதற்கான காரணத்தை முண்டக உபநிஷத் சொல்லுகிறது. பிரபஞ்சம் அனைத்தும் உருவக்கபட்டதும், அந்த பிரபஞ்ச இயக்கத்திற்கும் ஒலி வடிவமான இறைவன் “நாத பிரம்மம்” காரணமாக இருக்கிறது. இதை ப்ரணவம் அல்லது ஓங்காரம் என்கிறோம்.

இறைவன் எனும் சித்தாந்ததில் இருவேறு கருத்துகளுடன் மனிதர்கள் இருப்பார்கள். ஆத்தீகம் மற்றும் நாத்தீகம் எனும் இந்த பிரிவுகள் உலகில் பல காலகட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. நான் சில நேரங்களில் இப்படி வேடிக்கையாக சொல்லுவதுண்டு, “நீங்கள் நாஸ்திகரோ, ஆஸ்திகரோ எப்படி வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் இருவரையும் அந்த கடவுள் கொள்கையிலிருந்து மாறாமல் காக்கட்டும்”. அதுபோல தமிழ் இலக்கியத்தில் இரு பிரிவுகளில் அறிஞர்கள் இருந்தாலும் தமிழ் எனும் ஓர் மொழி இவர்கள் அனைவரையும் இணைத்துவிடுகிறது.

பாரதியை போல நான் கண்ட மொழிகளில் தமிழ் மொழியை போல என நான் கூறவிரும்பவில்லை. அனைத்து மொழிக்கும் ஓர் சிறப்புண்டு. எத்தனையோ உணவு வகை இருந்தாலும் , நமக்கு பிடித்த உணவு என ஒன்று இருக்கிறதே அதை மறக்க மாட்டோம் அல்லவா? அது போலதான் பாரதியின் நிலை. அதற்காக பிற உணவில் சுவையில்லை என சொல்லிவிட முடியாது. உணவை பற்றி சொல்லும் பொழுது அம்மாவின் கையால் சாப்பிட்ட உணவு என்பது பலருக்கும் மறக்க முடியாத சுவையாக இருக்கும். அம்மாவின் கைமணத்தை மனைவியின் சமையல் ருசியிடன் ஒப்பிடும் பொழுது பலருக்கு திருமண வாழ்வில் ஏழரை துவங்குவது அனைவருக்கும் தெரிந்தது. மொழியும் உணவும் இங்கு ஒப்பிடபட காரணம் அதுவே. உங்கள் தாய் மொழியும் அம்மாவின் கைப்பக்குவம் போன்றது

தான்.தாய் மொழியும்-அம்மாவின் கைமணமும் ருசியாக இருக்க காரணம் உங்கள் சிந்தனை ஆற்றல் செயல்படும் முன்னறே உங்களுக்கு ஊட்டப்படுவதால் தான். சிந்தனை வளர வளர பிற மொழிகளை தாய் மொழியுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தாய் மொழி சிறந்ததாக இருக்கிறது. ஒப்பீடு இல்லாமல் பாத்தால் பல மொழிகள் சிறப்பாக இருப்பதை உணர முடியும்.

தாய் மொழியை வளர்க்கிறோம் பேர்வழி என கடையின் பெயர்பலகையில் மொழியை எழுத சொல்லுவது, கட்டாய கல்வி புகட்டுவது என பல முட்டாள்த்தனங்கள் செய்கிறார்கள். கர்நாடகாவிலும், ஒரிசாவிலும் பத்து நாட்க்கள் பயணித்து பாருங்கள் மொழி வெறியர்களால் அனைத்து இடங்களிலும் மொழி தினிக்கப்பட்டிருக்கும். பேருந்துகள், ஊரின் பெயர்பலகை என அனைத்திலும் அவர்களின் தாய் மொழி இருக்கும். யாரிடமாவது வழி கேட்டால் அவர்களின் தாய் மொழியிலேயே பதில் சொல்லுவார்கள். அப்பொழுது புரியும் தாய் மொழி வளர்ச்சி எனும் பெயரில் இந்த முட்டாள்தனம் தேவையா என்று.

உங்கள் தாயை நீங்கள் வளர்த்த தேவையில்லை, உங்கள் தாய் தான் உங்களை வளர்த்த வேண்டும். நீங்கள் வளர்ந்த பிறகும் தாய்யை நீங்கள் பாதுகாக்க மட்டுமே முடியும். அப்பொழுதும் அவளை வளர்த்த முடியாது. மொழியை நாம் பாதுகாக்க செய்ய வேண்டிய ஒரே வேலை அந்த மொழியை சிறப்பாக பயன்படுத்துவது தான். வேற்று மொழி கலக்காமலும், அதிகமான செய்தி

ஊடகங்களில் மொழியை பயன்படுத்துவதன் மூலம் அம்மொழியானது தனது சிறப்பை இழக்காமல் மெருகுடன் இருக்கும். நவீன நாகரீகம் எனும் பெயரில் மொழியை ஊடங்களில் பரிமாற்றம் செய்யும் தன்மை குறைந்து வருகிறது. இதற்கு என்ன சான்று என நீங்கள் கேட்கலாம்.

முன்பு எல்லாம் வார மாத பத்திரிகைகள் அதிகமாக விற்றுவந்தன. தற்சமயம் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, குளியல் சோப் என அனைத்தும் கொடுத்தால் தான் வார பத்திரிகையை வாங்குகிறார்கள்.தினமும் காலையில் ஆங்கில நாளிதழை விட்டுக்கு வெளியே அனைவரும் பார்க்குமாறு படிப்பவர் ”அறிவாளி” என மதிக்கப்படுகிறார். எத்தனையோ அலுவலகங்களின் வரவேற்பு அறையில் அச்சுமனம் மாறாத, கசங்காத ஆங்கில நாளிதழை நீங்கள் பார்த்திருக்கலாம். தற்சமயம் செய்தி ஊடகம் என்பது மக்களுக்கு செய்தியை கொடுப்பதை தவிர்த்து மேலும் பல தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்து செல்லுகிறது.

சென்னையில் பயணிக்கும் பொழுது ஓர் சாலையில் போக்குவரத்து சமிக்சைக்காக காத்திருந்தேன். எனக்கு அருகில் ஆடம்பரமான நான்கு சக்கர வாகனத்தில் ஒருவர் காத்திருந்தார். வாகன ஓட்டி வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் உற்கார்ந்து பயணித்தவாறே நாளிதழில் இருக்கும் எண் விளையாட்டை (sudoku) தீர்வு செய்தவண்ணம் இருந்தார். அப்பொழுது அவரிடம் பிச்சை கேட்ட சிறுவனையும், முதியவரையும் அவர் கவனிக்கவில்லை. வாழ்க்கை பிரச்சனை தீர்ப்பதால் ஏற்படும் சந்தோஷத்தை அறியாமல் எண் விளையாட்டில் மூழ்கும் தன்மையை தான் தற்கால செய்தி ஊடகங்கள் ஏற்படுத்துகிறது.

தபால்காரர் வந்து விட்டாரா? அல்லது தபால்காரர் தெருவில் போனால் எனக்கு எதாவது தபால் இருக்கிறதா என கேட்ட காலம் இப்பொழுது இல்லை. மாதா மாதம் சொந்தங்களிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்களை படித்து சேமித்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. தங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி மட்டும் எழுதாமல் பருவ மழை பெய்ததா என்பது முதல் அரசியல் வரை அதில் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பழக்கத்தால் வாசிக்கும் ஆர்வமும், சுவைபட எழுதும் ஆர்வமும் மனிதர்களிடையே மிகுந்து காணப்பட்டது.

தகவல் புரட்சி என்று கூறி இத்தகைய விஷயங்கள் அனைத்தையும் நாசமாக்கும் நவீனயுகத்தில் வாழ்கிறோம். அஞ்சல் மற்றும் எழுதும் தன்மை குறைந்து, ஓர் நெருங்கிய உறவினர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிகிறார்... "'I'il com 2mrow". செய்தி மட்டுமல்ல மனதும்,அறிவும் அனைத்தும் குறுகித்தான் போனது. இது போல பயணித்தால் அறிஞர்கள் சொன்னது போல ”தமிழ் மெல்லச் சாகும்”.


நமக்கு எதற்கு அரசியல்? ஜோதிடத்திற்கு வருவோம். 5ஆம் பாவகம் மொழியறிவைகாட்டுகிறது. 3ஆம் பாவகம் மொழியறிவின் பயன்பாட்டை காட்டுகிறது. 2ஆம் பாவகம் மொழியின் சுவைபட பயன்படுத்துவதை காட்டுகிறது. இந்த பாவகங்களை தனிதனியாக ஆய்வு செய்வோம்.

5ஆம் பாவகம் : ஒருவரின் மொழி அறிவை நிர்ணையம் செய்யும் பகுதி. சிலருக்கு ஒரு மொழி தெரிந்திருக்கலாம். சிலருக்கு பலவகையான மொழி தெரிந்திருக்கலாம். தெரிந்திருப்பது ஓர் மொழியானாலும் அதில் அதீத புலமை வாய்ந்தவராகவும் இருக்கலாம். இவை அனைத்தும் 5ஆம் பாவகம் முடிவு செய்கிறது. 5ஆம் பாவகம் பலகால் ராசியில் தொடர்பு கொண்டால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவராக இருப்பார். 5ஆம் பாவகத்தில் இருக்கும் சூரியன் அல்லது குரு பல மொழிகளில் ஆழ்ந்த அறிவை காட்டும். சந்திரன் மற்றும் செவ்வாய் தாய் மொழியை தவிர பிற மொழி தெரிந்திருந்தாலும், ஆழ்ந்த அறிவி இல்லாமல்- சமாளிக்க தெரிந்தவர் எனலாம்.

சுக்கிரன் சம்மந்தபட்டால் நகைச்சுவையாகவும், பிறரை கவரும் வண்ணமும் மொழியை பயன்படுத்துவார்கள். 5ஆம் பாவகம் சினிமா, நாடகம் போன்றவற்றையும் குறிக்கும் என்பதால் சுக்கிரன் 5ல் சம்பந்தபட்டு கவர்ச்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருந்து முதல்வர் ஆசை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

புதன் சம்பந்தப்பட்டால் ஓர் மொழியின் வார்த்தையை பல மொழிக்கு சம்பந்தபடுத்தி புனைவை ஏற்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாக தமிழ்
தாத்தா உவேசா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை சொல்லலாம். ஓர் விருந்தில் கலந்துகொண்டதிற்கு பிறகு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார் தமிழ் தாத்தா. விருந்து கொடுத்தவர் தமிழ் தாத்தாவிடம் வந்து “பீடா சாப்பிடுகிறீர்களா?” என கேட்டார். அதற்கு “நான் பீடாவும் சரி அதன் பெண் பாலும் சரி பயன்படுத்துவதில்லை” என்றார் தமிழ் தாத்தா. ஆக புதன் இவ்வாறு மொழிவிளையாட்டு செய்து நகைச்சுவை செய்பவர்களின் 5ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும். ராகு, கேது மிகவும் அபூர்வமான மொழியை கற்றுகொள்ள தூண்டும். சனி பழமை வாய்ந்த சமஸ்கிருதம், கிரீக், லத்தின் போன்ற மொழி புலமையை காட்டும்.

5ஆம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். முன் ஜென்ம விஷயங்கள் இதில் இருப்பதாக சொல்லுவதுண்டு.பூர்வஜென்மத்திற்கும் நமது மொழி அறிவுக்கும் தொடர்பு உண்டு என கூறுபவர்கள் உண்டு. தனிப்பட்ட வகையில் முன்பிறவி போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எனது நண்பரின் வீட்டில் நடந்த சுவையான ஓர் நிகழ்ச்சியை கூற விரும்புகிறேன்.

ஐரோப்பாவை சேர்ந்த எனது நண்பர் பத்துவயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. அவருக்கு அப்பொழுது ஒரு வயதில் தங்கை ஒருவர் இருந்தார். இவர் கையில் ஓர் ஒலி பதிவு செய்யும் கருவியை வைத்து கொண்டு தனது ஒரு வயது தங்கை தன்னை மறந்து விளையாடும் தருணத்தில் உளறுவதை பதிவு செய்தார். காலங்கள் சென்றது. தங்கை திருமண வயதை அடைந்தார். திருமணத்திற்கு அண்ணனின் பரிசாக வித்தியாசமாக கொடுக்க எண்ணி அந்த பதிவு செய்த ஒலி நாடாவையும், தங்கையின் சிறுவயது ஒளி காட்சிகளையும் பரிசாக அளித்தார் எனது நண்பர்.

அவர் தங்கையின் கணவர் ஓர் அரேபியர், இந்த ஒலி நாடாவை கேட்டதும் மிகவும் குழப்பம் அடைந்தார். காரணம் அவரது மனைவி தெளிவான அரேபிய மொழியில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த பாடல் வரிகளை பாடி இருக்கிறார். தனக்கும் தனது மனைவிக்கும் ஏதோ ஓர் முன் ஜென்ம தொடர்பு இருப்பதாக எண்ணுகிறார்.

5ஆம் பாவகம் இது போன்ற கருத்துக்களை உள்கொண்டதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதிற்குள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழி பேசுவதை நான் பார்த்ததுண்டு. இதனால் தான் 5ல் (5ஆம் பாவகத்தில்) விளையாதது ஐம்பதில் விளையுமா என கேட்டார்களோ?

3ஆம் பாவகம் : ஒருவரின் பேச்சாற்றலை 3ஆம் பாவகம் முடிவு செய்யும். 3ஆம் பாவகத்தில் சூரியன், குரு, சந்திரன்அனைத்தும் திறம்பட பேசும் நபர்களை உருவாக்கும். உலக புரட்சியாளர்கள் அதிகமானவர்கள் 3ஆம்பாவகத்தில் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள். பிடரல் காஸ்ட்ரோவின் ஜாதகத்தில் செவ்வாய் 3ஆம் பாவத்தில் சிறப்பக செயல்படுவதை உதாரணமாக சொல்லலாம். அதனால் புரட்சிகரமான செயல் மட்டுமல்ல புரட்சிகரமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

செவ்வாய் தைரியத்தை காட்டுவதால் 638 முறை அமெரிக்க உளவாளிகளால் கொல்ல முயற்சி செய்தும் தனிமனிதனாக
தைரியமாக எதிர் கொண்டார். அவரின் அரசியல் வாழ்க்கை ஓய்வுக்கு பிறகும் அவரின் உடன் பிறந்த சகோதரர் ஆட்சி செய்வது, செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் என தெரிகிறது. சில புரட்சியாளர்கள் பேச்சு எனும் கருவியை மூலதனமாக வைக்காமல் ஆயுதம் ஏந்துவார்கள். அவர்களுக்கு செவ்வாய் தொடர்பு 3ஆம் பாவத்தில் இருக்காது. புதன், சுக்கிரன் தொடர்பு மூன்றாம் பாவகம் பெற்றால் அவர்களின் கருத்துக்கள் பல ஊடகங்கள் மூலம் பலருக்கு சென்றடையும்.

மேலும் சாதாரணமாக ஒன்றும் பிறரை கவருவதற்காக ஒன்றும் என இருவகையான பேசும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். சனி 3ஆம் பாவகத்தில் இருந்தால் சிறந்த அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உண்டு எனலாம். பேசவேண்டிய விஷயத்தை ரகசியாமாக மாற்றி, மக்களை திசை திருப்பும் பேச்சு இவர்களுக்கு இருக்கும். சனி ராகு தொடர்பு இருப்பவர்கள் சரிவர பேச முடியாதவராக மாறுவார்கள். கேது குரு சம்பந்தம் உடையவர்கள் ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பர்கள்.


2ஆம் பாவகம் : குரல் வளத்தை நிர்ணயம் செய்வது இந்த பாவகம். புரட்சிகரமான கருத்துகளை மெல்லிய குரலில் சொன்னால் எடுபடுமா? அதனால் தான் 2ஆம் பாவகம் இந்த செய்தி பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் பெருகிறது. குரு மற்றும் செவ்வாய் 2ஆம் பாவகத்தில் ஆதிக்கமானவர்கள் கணீர்குரலுக்கு சொந்தக்காரர்கள்.2ஆம் பாவகத்தில் புதன் பலகுரல் பேசி மகிழ்விப்பவர்களுக்கு இருக்கும். சுக்கிரன், சந்திரன் பாடகர்களுக்கும், சூரியன் உற்சாகமூட்டும் குரல்வளம் கொண்டவர்களுக்கும் இருக்கும். சனி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் குரல்வளத்தை காட்டாமல் இருந்தால் நல்லது.

ராகு பிறர் போல குரலை மாற்றி
பேசுவர்களுக்கும், கேது தனது குரலை மறைத்து இடத்திற்கு ஏற்றாற்போல குரல் மாற்றி பேசுபவர்களையும் காட்டுகிறது.


இந்த இனிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொழி,தொடர்பு கொள்ளும் முறை மற்றும் குரல்வளம் என அனைத்தும் ஜோதிட ரீதியில் அலசினோம். மொழியை பற்றி இவ்வளவு நான் கூற காரணம் என்ன என யோசிக்கலாம். மொழிகலப்பாலும் , மொழிச்சிதைவாலும் ஏற்படும் விபரீதத்தை விளக்கினால் உங்களுக்கு புரியும்.

”வட விருக்‌ஷா” என்றால் சமஸ்கிருதத்தில் ஆலமரம் என்று பெயர். ஆலமரத்திலிருந்து இலை எடுத்து அதை மாலையாக ஆஞ்சனேயருக்கு அணிவுக்கும் முறை முற்காலத்தில் இருந்தது. இதை தமிழ்ப்படுத்தும் பொழுது வட என்பது ”வடையாக” மாறி இப்பொழுது மோசமான எண்ணெயில் செய்த வடை மாலையுடன் ஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார்.நான் சொல்லுவது மிகையாகவோ அல்லது உண்மைக்கு புறம்பாகவோ ஆஞ்சனேய பக்தர்களுக்கு தெரியலாம்.

ஆஞ்சனேயரை தவிர வேறு யாருக்கும் உணவு பொருளை மாலையாக படைப்பதில்லை என்பதையும், இதை செய்வதற்கான புராண சம்பவங்களோ அல்லது காரணமோ இல்லை என்பதை உணருங்கள். தமிழகத்தை தவிர வேறு ஊரில் (முக்கியமாக அதிகம் வழிபடும் வட இந்தியாவில்) ஆஞ்சனேயருக்கு வடையை மாலையாக போடுவதில்லை.மொழிச்சிதைவால் ஏற்பட்ட நிலைப் பார்த்திர்களா? 108 வடைகளை மாலையாக போடும் மூடநம்பிக்கை வரை வந்திருக்கிறது.

தமிழ் எனும் சொல் மொழியின் பெயரை மட்டும் குறிப்பதில்லை. அழகு, பாலகன் என பல அர்த்தம் இருந்தாலும், நான் தமிழை விரும்ப காரணம் ஞானசுரங்கம் திருமூலர். அவரது மந்திரத்தில் கூறினார்,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே-.”

இதைவிட தமிழ் எனும் வார்த்தைக்கு யார் சிறப்பு சேர்க்க முடியும்?


8 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//மொழி என்பது செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் ஓர் ஒலி வடிவம் என்பதை தவிர்த்து அதில் பெரிதாக ஒன்றும் இல்லை.//

மொழிக்கு பொருந்தும் கருத்து. ஆனால் மொழிகளுக்கு பொருந்தாது. இனம் அது பேசும் மொழியை வைத்துத்தான் பிற மொழி பேசுபவர்களிடம் ஆளுமையை வளர்பார்கள். உதாரணத்துக்கு வெள்ளைக்காரன் அவன் ஆண்ட பகுதிகளிலெல்லாம் ஆங்கிலத்தை புகுத்திச் சென்றுவிட்டான்.அவனுடைய மொழி ஆளுமையிலிருந்து எந்த நாடும் விடுதலைப் பெறவில்லை. இன்று தாய்மொழி நிலைத்திருக்கும் நாடுகளைப் பார்த்தால் அவை ஆங்கில ஆதிக்கத்திற்கு உட்படாதவையாக மட்டுமே இருப்பதென்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மொழி ஆளுமையை வலியுறுத்த நிறைய வழிகள் இருக்கிறது,வியாபார மொழி, கணனி மொழி, கடவுள் மொழி...இப்படியெல்லாம் சொல்லப்பட்டு நுழையும் மொழி நாளடைவில் அந்தப் பகுதி மொழிகளின் பழமை இலக்கியங்களின் மீது நாட்டம் கொள்ளவிடாமல் அழிவுக்கு வழிவகுத்துவிடும். எல்லா மொழிகளுமே கல்தோன்றிய காலத்தில் இருந்திருந்தால் ஒரு சில மொழிகளில் மட்டுமே பழைய இலக்கியங்கள் இருப்பது ஏன் ? காரணம் பிற மொழி ஆளுமையை அவர்கள் போராடி வென்றதால் தான்.

இந்தி தெரிந்தால் இந்தியாவைச் சுற்றலாம் என்பார்கள், இந்தி தெரிந்த பாம்பே மிட்டாய்காரன் தமிழகத்தைத் தான் சுற்றுகிறான். என்ன ஒன்று அவனால் இந்தியில் மிட்டாய் விற்க முடியவில்லை. மொழித்திணிப்புகள் கூட கண்டிக்கப்பட வேண்டியவையே வெறும் தகவல் பரிமாற்றத்துக்கு என்றால் அது தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே. எல்லோருக்கும் அல்ல.

கிரேக்கம், லத்தீன் மொழிகளெல்லாம் காணாமல் போனது எவ்வாறு, அந்த மொழிப் பேசும் பகுதியில் அன்னிய மொழிகள் வந்ததால் தான்.

*****

ஸ்வாமி, சில மொழிகள் பேசுவதால் அதிர்வு கிடைக்குதுன்னு சொல்றாங்களே நம்புகிறீர்களா ?

நில நடுக்கம் ஏற்படுவதற்குக் கூட அதுதான் காரணமாக இருக்குமா ?
:)

SP.VR. SUBBIAH said...

///"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே-.”////

முத்தாய்ப்பான வரிகள்.
கட்டுரைக்கு நன்றி சுவாமிஜி!

தியாகராஜன் said...

///உலக புரட்சியாளர்கள் அதிகமானவர்கள் 3ஆம்பாவகத்தில் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள். பிடரல் காஸ்ட்ரோவின் ஜாதகத்தில் செவ்வாய் 3ஆம் பாவத்தில் சிறப்பக செயல்படுவதை உதாரணமாக சொல்லலாம். அதனால் புரட்சிகரமான செயல் மட்டுமல்ல புரட்சிகரமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

செவ்வாய் தைரியத்தை காட்டுவதால் 638 முறை அமெரிக்க உளவாளிகளால் கொல்ல முயற்சி செய்தும் தனிமனிதனாக தைரியமாக எதிர் கொண்டார். அவரின் அரசியல் வாழ்க்கை ஓய்வுக்கு பிறகும் அவரின் உடன் பிறந்த சகோதரர் ஆட்சி செய்வது, செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் என தெரிகிறது.///

ஐயா வணக்கம்.
செவ்வாய் சகோதர காரகன்.
3ம் இடம் இளைய சகோதரஸ்தானம்.
காரகன் தனது பாவகத்தில் இருந்தால் பலனில்லை என்கிறார்களே.
"காரகோ பாவ நாசம்"
என்ற விதிப்படி, சகோதர காரகன் இளைய சகோதரஸ்தானமான மூன்றாமிடத்திலிருக்கும் பிடல்காஸ்ட்ரோ அவர்களுக்கு இளைய சகோதரர் இருப்பது குறித்து விளக்கிட வேண்டுகிறேன்.
அடியேனுக்கு 3ல் செவ்வாய்.ஆதலால் சகோதரம் இல்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


சில வார்த்தைகளை உச்சரிப்பதால் அதிர்வு இருக்கும். உண்மையே. ஆனால் அது பொழி அல்ல. அதிர்வெண் கொண்ட ஒர் ஒலியே.
அதை உச்சரித்து மழை வர வைப்பது வரை நம்பிக்கை உண்டு. :)

கன்னடம் கலந்த மழலை தமிழ் பேசுபவரின் பேச்சே அதிரும் பொழுது, முறையா ஒலி எழுப்பினால் மலையும் சுக்கு நூறாகும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா வாத்தியார் அவர்களே,

உங்கள் உற்சாக டானிக்கான பின்னூட்டத்திற்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன் அவர்களுக்கு,

உங்கள் வரவுக்கு நன்றி.


”காரகோ பாவ நாஷாயா” எனும் வாதம் ஜோதிடத்தில் இல்லை. மேலும் ஜோதிட மூட நம்பிக்கையில் அதுவும் ஒன்று.

உங்களுக்கு சிற்ப வேலை தெரியும் என்றால், கல்லும் உளியும் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

ஓர் கிரகம் தன்னகத்தே சில இயல்பு குணங்களை கொண்டதாக இருக்கிறது. அந்த இயல்பு குணத்திற்கு உரிய இடத்தில் இருந்தால் அதன் திறன் மேம்படும் தானே?.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாயானது மேஷம்,மிதுனம்,சிம்மம் மற்றும் கன்னியா ராசிகளுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.

மேற்கண்ட ராசிகளுக்கு மலட்டு ராசிகள் என பெயர். இந்த ராசிகள் புதிய உறவு முறையை தடுக்கும்.

உங்கள் ஜாதகத்துடன் சரிபார்த்து விட்டு எனக்கு தெரியப்படுத்தவும்.

மதிபாலா said...

தனிப்பட்ட வகையில் முன்பிறவி போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எனது நண்பரின் வீட்டில் நடந்த சுவையான ஓர் நிகழ்ச்சியை கூற விரும்புகிறேன்.

//

பகுத்தறிவு பேசும் ஒரு ஆன்மீகவாதி. அதிசயம்தான் ஸ்வாமி ஓம்கார் அவர்களே.

மொழிகளைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மிக அருமை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதிபாலா,

பகுத்தறிவு என்ற போர்வையில் நாத்திகத்தையும் முடக்குவாதத்தையும் பேசவில்லை. காலத்தை கடந்தால் ஜென்மங்கள் இல்லை. இது கோவியாரின் வலைபக்கத்தை குறிப்பதில்லை :))


உங்கள் வரவுக்கும், கருதுக்கும் நன்றி.