Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, June 29, 2009

வாங்க விரதம் இருக்கலாம்

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

சுபவரம் ஆன்மீக இதழில் ஜூன் மாதம் வந்த கட்டுரை.

குருகீதை வலைதளத்தில் புதிய இடுக்கை : நீயா ? நானா?

Friday, June 26, 2009

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..!

மக்களின் மூடநம்பிக்கைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் அதில் முதலில் நிற்பது மரணம் பற்றி யாரு ஒருவர் சொல்லும் செய்தி. மனிதன் நல்ல செய்தியை விட கெட்ட செய்தியை அதிகமாக நம்புவதற்கு அவனின் மனோபலம் (பலவீனம்) காரணம். குடுகுடுப்பைக்காரன் நல்ல செய்தியை சொன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மக்கள் கெட்ட செய்தியை சொன்னால் மனதில் பயம் ஏற்பட்டுவிடும்.

செய்வினை பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படும் பொழுது நான் கூறுவதும் இது தான். இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை, ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.

உலகின் அனேக மதங்கள் மனிதனை பயத்தின் பிடியின் வைத்து அவனை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் இந்த யுக்தி எல்லா காலத்திலும் பயன்படாது. மனிதன் தனது ஆன்மீக நிலையில் முன்னேறிவிட்டான் என்றால் அவனிடம் இது செல்லாது.

கைக்குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது நீங்கள் மூணுகண்ணன் வரான் என சொல்லலாம். அவன் இருபது வயது இளைஞன் ஆனதும் அவனிடம் மூணுகண்ணன் என்றீர்கள் எனில் அவன் உங்களை மருத்துவ மனையில் சேர்க்க வாய்ப்பு உண்டு. மதங்கள் மறைமுகமாக செய்த பயமுறுத்தலை சிலர் “யோகிகள்” என்ற பெயரில் நேரடியாக செய்கிறார்கள்.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் அதை “FAITH" என்கிறார்கள். ஆனால் ஞானி, யோகி என கூறிக்கொள்ளும் சிலர் இதை செய்யும் பொழுது முற்றிலும் மனிதன் நம்பிக்கை இழக்க நேரிடும்.

ஒரு தனிநபரை பின்பற்றும் யோக கழகம் மாதப்பத்திரிகை ஒன்று நடத்துகிறது. அந்த தனி நபர் மீதும் அவரின் செயல் மீதும் எனக்கு எப்பொழுதும் அபிமானம் உண்டு. ஆனால் விஷயமோ அதில் சென்ற மாதம் வந்த கட்டுரை பற்றியது.

அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் சாரம் என்னவெனில் “2012ல் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும். இதை நாசா விஞ்ஞானிகளுக்கு தெரிந்தும் வெளியிடாமல் இருக்கிறார்கள். பூமியிலிருந்து இடம் பெயர்ந்து செவ்வாய் கிரகத்திற்கோ, சந்திரனுக்கோ செல்ல விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். உலகம் அழிய இன்னும் சில வருடமே இருக்கிறது என்பதால், புண்ணியம் செய்யுங்கள். எனது யோக முறை உங்களை நல்வழிப்படுத்தும்”.

யோகிகள் என்பவர்கள் யார் என அடையாளம் இன்னும் மக்களிடயே சென்றடையாததால் இப்படி பட்ட முட்டாள்களின் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறது. அவருக்கு ஆன்மீகமோ, நாசா பற்றியோ துளியும் தெரியவில்லை என்பது அவரின் கட்டுரையே சாட்சி. நவீன வானியலில் நாசாவிடம் பட்டம் பெற்றவனும், அவர்களிடம் பழகியவனும் ஆகிய எனக்கு அவர்களின் செயல் நன்றாக தெரியும். உலகுக்கு ஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்குமெனில் அதை தீர்க்க ஆராய்வதை காட்டிலும் மக்களிடையே பரப்பி பீதியை உண்டு செய்வார்கள். காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு ஆராய்ச்சிக்கான பணம் கிடைக்கும்.

ஆனால் அந்த 'யோகி' சொல்கிறார் பல வருடங்களுக்கு முன்னே நாசா விஞ்ஞானிகளுக்கு
தெரியுமாம். ரகசியமாக ஆய்வு செய்தார்களாம். இவருக்கு மட்டும் அந்த ரகசியத்தை எந்த விஞ்ஞானி சொன்னாரோ...! என்ன கொடுமை இது?

பூமியின் வான்மண்டலத்தில் ஒரு வித காப்பு படலம் உண்டு. நேரடியாக எந்த வான் பொருளும் உள்ளே நுழைய முடியாது. பூமியின் சுற்றும் வேகத்திற்கு (30KM/hr) சுழன்று கொண்டே பூமியை சுற்றினால் வேண்டுமானால் தரை இறங்கலாம். எத்தனையோ செயற்கைகோள்கள் இவ்வாறு பூமியை அடையாமல் வான் வெளியில் சென்றதுண்டு. மேலும் விண் கற்கள் என எதுவும் விழுவதில்லை என்பதன் காரணமும் இதனால் தான். வான்காப்பு படலம் இல்லை என்றால் 24 மணி நேரமும் தலைகவசத்துடன் தான் நாம் உலா வர நேரிடும்.

ஏதோ வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மாயன் கலாச்சார நாள்காட்டியை பார்த்து 2012ல் ஏதோ அசம்பாவிதம் என கிளப்பிவிட்டது தான் உருமாறி இப்படி அலைகிறது. இதை கருத்தில் கொண்டுதான் நான் சிறுகதை வடிவில் மேற் சொன்ன கருத்தை பகடி செய்து எழுதினேன். வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களின் கற்பனை திறன் அலாதியானது. எகிப்து,இந்தியா மற்றும் சீனா பற்றி அவர்கள் சொன்ன கற்பனை கதைகள் ஏராளம். அவர்கள் சொன்னது தான் சரி என்பதை போன்ற வாதத்தை வைப்பார்கள்.

யுவான்சுவாங் போல ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தனது பயணகட்டுரையில் இவ்வாறு எழுதினார். இந்தியாவின் தென்பகுதியில் பயணம் செய்யும் பொழுது ஒரு விசித்திரமான தண்டனை பெற்ற மக்களை பார்த்தேன். அவர்கள் ஆறு குளங்களின் அருகே இருக்கும் பாறைகளை துணியால் பிளக்க முயற்சி செய்தார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தென் இந்திய மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் அறிவு திறனும்...!


முழுமையான ஞானம் பெற்றவர் என கூறிக்கொள்பவர் இவ்வாறு அறைகுறை விஞ்ஞானிகளின் பின் பற்றி இத்தகைய பிரச்சாரம் செய்வது வெட்கக்கேடானது.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு ஆன்மீக அமைப்பில் இணைந்திருந்தான். 2000 வருடம் ஆரம்பித்தவுடன் உலகம் அழிந்து சத்திய யுகம் என ஒன்று துவங்கும். அதில் புண்ணியம் செய்தவர்கள் மஹாராஜா, ராணியாக வாழ்வார்கள் என ஆன்மீக அமைப்பை சார்ந்தவர்கள் சொன்னதை கேட்டு தினமும் புண்ணியம் செய்கிறேன் பேர்வழி என படிப்பை விடுத்து வேறு பணிகளை செய்தான். கடைசியில் உலகம் அழியவில்லை. அவனின் படிப்பு தான் அழிந்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் புண்ணியம் செய்கிறார்களா என தெரியவில்லை. அவர்களுக்கு சத்திய யுகத்தில் என்ன பதவி கிடைக்கும்?

இங்கே யாரையும் புண்படுத்தவோ கிண்டல் செய்யவோ இக்கருத்தை கூறவில்லை. மக்களை நல்வழிபடுத்த ஆயிரம் வழிகள் உண்டு. உங்களுக்கு ஏன் இந்த வழி என்பதே எனது கேள்வி. ஏதோ ஒரு மாதபத்திரிகையில் வந்த விஷயம் என இதை ஒதுக்க முடியவில்லை. காரணம் முதல் பத்தியில் சொன்னதை போல இத்தகைய விஷயங்கள் தான் விஷம் போல பரவும். உங்களிடம் இக்கருத்து வந்தால் சிந்தியுங்கள்.

இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய காத்திருங்கள்...!
------------------------------------
யோகி என்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவைகளையும் அந்த ஷணம் மட்டுமே வாழ வழிகாட்டுபவன். அவனுக்கு அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒரு ஜென்கவிதை நினைவுக்கு வருகிறது....

நான் சுவாசத்தை உள்ளிழுக்கும்
பொழுது உலகம் உருவாகிறது.

வெளியிடும் பொழுது உலகம் அழிகிறது.

இடைபட்ட நேரத்தில் நான் இருக்கிறேன்.

Thursday, June 25, 2009

வாருங்கள் குருவினை ஆராதிப்போம்

குரு பூர்ணிமா விழா ப்ரணவ பீடத்தில் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் குரு பூர்ணிமா ஜூலை மாதம் 6ஆம் தேதி திங்கள் கிழமை அமைகிறது. அன்று மாலை 6 மணிக்கு ப்ரணவ பீடத்தில் சிறப்பு தியானம் மற்றும் ஆராதனைகள் உண்டு. குருவருள் பெற குருவினை அன்று தியானிப்போம்.

(படத்தின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கலாம் )

கோவை நகரத்தின் மையத்தில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் கிளையில் விழா நடைபெறும். இந்த அழைப்பை ஏற்று அனைவரும் இதில் கலந்து கொள்ள உளமார அழைக்கிறோம்.


குருபூர்ணிமா சிறப்புகள் அறிய இங்கே அழுத்தவும்.

Monday, June 22, 2009

பழைய பஞ்சாங்கம் 22 -ஜூன் -2009

கண் குருடாகும் வர்ண வீடு

தமிழ் நாட்டில் சில பழக்கம் மக்களிடையே பரவி வருகிறது. அதில் முக்கியமானது கண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும்.


ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.

இந்த ந(ச)வநாகரீகத்தை பற்றி விசாரித்தால் அது 'வாஸ்து' குறைக்காக பூசுவதாக சொன்னார்கள். வாஸ்து குறையால் வீட்டை இடிக்க தயங்கும் சிலர் வாஸ்து தோஷம் போக்க இவ்வாறு பூசுகிறார்களாம். பிறரின் திருஷ்டி படாமல் இது தடுக்குமாம். ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?

நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு வாஸ்துவில் மட்டும் குறை இருப்பதாக தெரியவில்லை..!

---------------
வண்டி வண்டியாய் பேச்சு


சொற்பொழிவுக்கு என்னை அழைப்பவர்கள் எப்பொழுதும் என் மேல் அதிக எதிர்பார்ப்பு வைத்துவிடுவார்கள். எனது பேச்சில் அல்ல எனது வாழ்க்கை முறையில்...!

ஆன்மீகத்தில் மட்டும் அல்ல எனக்கு சுற்றுசூழலிலும் நாட்டம் இருப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் விஷயங்களை முற்றிலும் தவிர்ப்பேன். அதில் முதன்மையானது வாகனம். அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனம் மற்றும் சூழலை பாதிக்காத வாகனத்தில் எப்பொழுதும் எனக்கு நாட்டம் உண்டு.

இக்கருத்தால் நான் கார் பயன்படுத்தவோ வைத்துகொள்ளவோ நினைப்பதில்லை. சிறிய இருசக்கர வாகனத்தில் எனது அத்தியாவிசிய பயணங்களை செய்வேன். சைக்கிள் எனக்கு பிடித்த வாகனங்களில் ஒன்று. அப்படித்தான் ஒரு நாள் சொற்பொழிவுக்கு கூப்பிடவர்கள் எனக்கு கார் ஏற்பாடு செய்தார்கள். சொற்பொழிவு அரங்கமோ நான் வசிக்கும் இடத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருந்தது. அமைப்பாளர்களிடம் எதற்கு கார் என கேட்டேன்?. அப்பொழுது தான் ஒரு மதிப்பு இருக்கும் என்றார்கள். சரி காரை கொண்டு செல்லுங்கள் அது மதிப்புடன் சொற்பொழிவு ஆற்றட்டும் என்றேன்.
-----------------------
எழுத்தில் வீச்சு

சென்ற பழையபஞ்சாங்கத்தில் வாசிப்பு அனுபவத்தை பற்றி சொல்லி இருந்தேன் அது போல என் மேல் இன்னொரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. எனது பேச்சில் இருக்கும் வீச்சு எழுத்தில் இல்லை என்பதே. நான் சொற்பொழிவுகளிலும் இயல்பாகவும் பேசும் பொழுது ரசிக்க தக்கதாக இருப்பதாக அனேகர் சொல்லி கேட்டிருக்கிறேன். சென்ற சித்திரை ஒன்றாம் தேதி கூட 'ஜோதிடம் மூடநம்பிக்கையா அறிவியலா' என்ற தலைப்பில் பேசினேன். அதை கட்டுரையாக மாற்றும் பொழுது சில கருத்துக்களை எடுக்க வேண்டி இருந்தது. அதனால் வலைப்பதிவர் சஞ்சய் கூட பின்னூட்டத்தில் 'பேசும் பொழுது இருந்த மாதிரி இல்லை' என கூறினார்.

பிறந்து சில வருடங்களில் பேச
துவங்கிவிட்டேன். ஆனால் எழுத துவங்கி சில காலம் தானே இருக்கும் அதனால் இருக்குமோ என நினைத்தேன்..

ஆகயால் இனிமேல்.... வாயில் கிராம்பையோ , ஏலக்காயையோ போட்டுகொண்டு பேசலாம் என இருக்கிறேன். இனி பேசும் பொழுதும் ‘வீச்சு' இருக்காது.
----------------
ஞானி

இடைவிடாத நீர் ஒழுக்கு
மடைதிறவா அணை
அணையா விளக்கு

முற்றுப்பெறாத சொல்
மாசற்ற இசை
மனமற்ற திரை

தெளிவற்ற இயல்பு
முழுமையான சுயம்
.

Saturday, June 20, 2009

குரு பூர்ணிமா பகுதி - இரண்டு

குருபூர்ணிமா அன்று குரு தீட்சை பெற்ற சாதகன் அந்த பிறப்பில் தனது ஆன்ம உயர்வை பெற முடியாவிட்டாலும் அடுத்துவரும் பிறப்புகளில் முக்தி அடைய குருவின் அருள் தானாகவே தொடர்ந்து வருகிறது.

குருவானவர் யார், எப்படிப்பட்டவர் என பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளேன். இன்னும் விளக்கினாலும் திருப்தி ஏற்படாது. குரு வரையறைக்குள் அடங்காதவர், பரம்பொருள் என்பது நிதர்சனம். ஆனால் சிஷ்யனாகவே குருவை பின்பற்றுபவர் சில வரையறையில் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பரம்பரையும், குருவை நாடிச்செல்லும் செயலும் பல வருடங்களாக விடுபட்டதால் நமக்கு எவ்வாறு குருவிடம் அணுகவேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. குரு உங்களின் உள்ளே இருக்கும் சக்திதான், ஆனால் அதற்கு போலியான மரியாதை தருவதோ அதே சமயம் அலட்சியப்படுத்துவதோ மாபெரும் பாவச்செயலாகும். ஆன்ம உயர்வுக்கு பாடுபடும் சாதகன், குருவிடம் எப்படி நடந்துகொள்ளகூடாது என்பதை ஓர் கதை மூலம் காணலாம்.

ஒரு வயதான முனிவர் ஊரின் எல்லையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவந்தார். அவருக்கு மகா சோம்பேறியான சிஷ்யன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு இருவரும் படுக்கைக்கு சென்றார்கள். குரு கூறினார் " சிஷ்யா, வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன். நமது ஆடைகள் நனைந்துவிடும். அதை எடுத்துக்கொண்டு வா" என்றார். சோம்பேறி சிஷ்யன் "இப்பொழுது ஆசிரமத்திற்குள் வந்த பூனையை தொட்டுப் பார்த்தேன், அதன் மேல் ஈரம் இல்லை எனவே வெளியே மழை பெய்யவில்லை குருதேவா" என்றான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் குரு சிஷ்யனை பார்த்து கூறினார் " கதவை மூடிவிட்டு வா, தூங்கலாம்" என்றார். "நாம் என்ன செல்வந்தர்களா குருவே, திருடர்கள் வந்து அபகரிக்க, கதவை திறந்துவைத்தாலும் இழப்பதற்கு என்ன இருக்கிரது நம்மிடம் ?" என்றான் சிஷ்யன். மீண்டும் குரு கூறினார், "அந்த விளக்கையாவது அனைத்துவிட்டு வா" என்றார். "குருவே, இரு வேலைகளை நான் செய்தேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய்யக்கூடாதா?" என்று கேட்டான் சோம்பேறி சிஷ்யன்.

நவீன கால சிஷ்யர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தாங்கள் ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோ ம். ஆனால் குரு தங்களுக்கு வாரி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்படிபட்டவரா நீங்கள் ? அப்படியென்றால் உடனே மாறிவிடுங்கள். இல்லையென்றால் திருமூலர் போல குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழியில் விழ வேண்டிவரும். சரி சிஷ்யன் எப்படித்தான் இருக்கவேண்டும் என கேட்பது புரிகிறது. இதற்கும் ஒரு கதை மூலம் விளக்கம் பெறலாம்.

குருவை அடைய ஒருவன் ஒருசில குணங்களை பெற்றவனாக இருக்கவேண்டும். அதேபோல சில குணங்களை களைந்தவனாக இருக்கவேண்டும். இன்னும் விளகமாக சொல்ல வேண்டுமானால் கீழ்படிதல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை குருவை பூஜிக்கும் தன்மை எனும் குணங்களை கொண்டவனாகவும், பிறரை துன்புறுத்துதல், சந்தேகம், ஆணவம், பொருளாசை என துன்பங்களை ஏற்படுத்தும் குணங்களற்றவனாகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவர் சிஷ்யனுக்கோ அவர் மேல் சந்தேகம். தன்னைப் போலவே வாழும் இவர் எப்படி ஞானியாக இருக்க முடியும் ? என தன்னிறைவு அற்று இருந்தான். இருவரும் ஒரு நாள் வேறு ஊருக்கு பயணமானார்கள். பயணத்தின் இடையே வன பகுதி குறுக்கிட்டது. சிஷ்யன் கேட்டான், "குருவே தாங்கள் முக்காலும் உணர்ந்த ஞானி என கூறிகிறார்கள். இதை சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவை" . அவனை புன்முறுவலுடன் பார்த்த குரு "தாராளமாக சோதனை செய்" என்றார்.

நடைபாதையில் இருந்த சிறிய செடியை காண்பித்து சிஷ்யன் கேட்டான் " குருவே இதன் எதிர்காலத்தை கூறமுடியுமா?" என்றான். அந்த சிறு செடியை கூர்ந்து பார்த்த குரு கூறினார். "இந்த செடி வளர்ந்து பிரம்மாண்டமான விருட்சமாக மாறும்" என்றார்.

வில்லங்கமான சிரிப்புடன் குருவை பார்த்த சிஷ்யன் அந்த சிறு செடியை வேறுடன் பிடிங்கி தூர எறிந்தான். " இப்பொழுது எப்படி இந்த செடி முளைக்கும் குருதேவா?" என குருவை தோற்கடித்த மகிழ்ச்சியில் கேட்டான். பதில் எதுவும் கூறாமல் ஞானி பயணத்தை தொடர்ந்தார். சென்ற இடத்தில் எல்லாம் நான் குருவை தோற்கடித்தேன் என கூறி மகிழ்ந்தான் சிஷ்யன். பல வருடங்கள் கழிந்தன. குருவும், சிஷ்யனும் மீண்டும் தங்களின் ஆசிரமத்திற்கு பயணமானார்கள். அதே வனப்பகுதியை கடக்கும் பொழுது சிஷ்யன் அந்த செடியை பார்த்தான். சிஷ்யன் வேருடன் பிடுங்கி எறிந்த இடத்தில் சாய்வாக வேர் விட்டு மரமாக வளர்ந்திருந்தது அந்தசெடி. அவனின் முகத்தை புன்னகையுடன் பார்த்த குரு எந்த வார்த்தைகளும் கூறாமல் சிஷ்யனை கடந்து சென்றார்.

எனது மாணவர்களில் சிலர் நான் கூறும் கருத்தில் சந்தேகம் அடைவதுண்டு. அவ நம்பிக்கை கொண்ட மாணவருக்கு மேற்கண்ட கதையை சொல்லும் போது அந்த மாணவர் சொன்னார் " அந்த சிஷ்யன் ஒரு அறிவுகெட்டவன், நானாக இருந்தால் அந்த செடியை துண்டு துண்டாக அல்லவா ஆக்கியிருப்பேன்" என்றார். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர்களின் அறியாமையை கண்டு ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இவர்களின் புத்திசாலித்தனத்தில் தொங்குபவர்கள்.

முழுமையான நிலையில் இருபவர்கள் செய்யும் தவறு கூட நன்மையை மட்டுமே தரும் என்கிறது வேதம். குரு செய்வது தவறு என தெரிந்தாலும் அதன் மூலம் ஏற்படும் நன்மையை ஆய்பவனே சிறந்த சிஷ்யனாக இருப்பான். உண்மையில் குருவிற்கு நன்மை மற்றும் தீமை என்பது கிடையாது. அறியாமையால் காண்பவருக்கே அது நன்மை அல்லது தவறு என கற்பிதம் ஏற்படுகிறது. குரு தன்மையில் இருப்பவர்களுக்கு தனக்கென செயல்களோ, கர்ம வினையோ இருப்பதில்லை. தங்கள் உடலையும், மனதையும் கருவிகளாக்கி இறைவனின் இயக்கத்தை வெளிப்படுத்துவார்கள். இறைவனின் செயல்கள் அவர்கள் மூலம் வெளிப்படுத்துவதால் அவர்கள் எவ்வாறு நன்மையோ, தீமையோ செய்யமுடியும் ? ஒலி பெருக்கியில் ஒலி வருவது ஒலி பெருக்கியால் அல்ல. ஒலியை மைக் மூலமாக யார் பேசினார்களோ அவர்கள் மூலம் தான்.

ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஓர் செவி வழி கதையுண்டு. ஓர் நாள் கோபியர்கள் எங்கு தேடியும் பகவானை காணவில்லை. வெகு நேரம் கழித்து ஸ்ரீ கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் வந்தார். பரம புருஷரை பார்த்த கோபிகள், " கிருஷ்ணா! எங்களிடம் உனக்கு ஏற்பட்டதை விட பன்மடங்கு பரம சந்தோசத்தில் இருக்கிறாயே, எங்களை விட பக்தி செலுத்தும் வேறு கோபிகைகளுடன் சென்றாயோ?" என கேட்டனர். "கோபிகளே! யமுனை ஆற்றின் மறுகரையில் எனது குருநாதர் துர்வாசர் வந்தார். அவரை தரிசித்துவிட்டு வருகிறேன்" என்றார் வசுதேவ புத்திரன். "கேசவா! எங்களை விட பரமசுகம் அளிக்கும் உனது குருவை நாங்கள் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நாங்கள் இனிப்புகளை தயார் செய்து கொண்டு வருகிறோம். எங்களுக்கு குருவின் இருப்பிடத்தை அடைய வழி சொல்லு பரமாத்மா" என்றனர் கோபிகைகள்.

அந்த காலத்தில் குரு மற்றும் ஆன்மீக பெரியார்களை சந்திக்கும்பொழுது பழம் அல்லது இனிப்புகளை வாங்கி செல்வார்கள். மகான்கள் சிறிது இனிப்பை எடுத்துக்கொண்டு அவற்றை பிறருக்கு பகிர்ந்தளிப்பார்கள். அதை பிரசாதமாக ஏற்றுக்கொள்வது மரபு. தற்சமயம் கலியுகமல்லவா? அதனால் குருமார்கள் இனிப்புடன் சிஷ்யர்களை துரத்துகிறார்கள்.

கோபியர்கள் பலவகையான இனிப்புகளை தயாரித்து தலையில் பெரும் கூடையின் யமுனை ஆற்றங்கரைக்கு வந்தனர். முரளிதரன், தனது புல்லாங்குழலில் தேவ காந்தாரத்தை வாசித்துக்கொண்டிருந்தார். யமுனை ஆற்றில் வெள்ளம் இயல்பைவிடஅதிகமாக பெருக்கெடுத்து ஓடியது. "முகுந்தா என்ன இது சோதனை? உனது குரு துர்வாசரைக் காண யமுனை தடையாக இருக்கிறதே இதற்கு நீ உதவக்கூடாதா?" என சரண் புகுந்தனர். கள்ள புன்னகை பூத்த காளிங்க நர்த்தனன் "கோபிகைகளே இதற்கு எளிய வழி ஒன்று உண்டு. யமுனையிடம் சென்று, "கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி" என உரக்க மூன்று முறை சொல்லுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். கோபிகைகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மாதவா இது என்ன வேடிக்கை? நீ பிரம்மச்சாரி என சொல்வதே வேடிக்கையானது, என்றும் பிரம்மச்சாரி என கூறுங்கள் என்று சொல்கிறாயே எங்களுக்கு உதவும் எண்ணத்தில் சொல்கிறாயா இல்லை உனது லீலையில் இதுவும் ஒன்றா?" என கேட்டனர்.

கோவிந்தன் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவே அனைவரும் யமுனையிடம் சென்று "கிருஷ்ணர் நித்ய பிரம்மச்சாரி" என மும்முறை கூறினார்கள். உடனே யமுனை இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. கோபியர்கள் உற்சாகத்துடன் மறுகரையில் அமர்ந்திருந்த துர்வாச முனிவரை தரிசித்தனர்.

தாங்கள் கொண்டு வந்த இனிப்பை அவரிடம் கொடுத்தனர். ஆனால் மரபுக்கு மீறி துர்வாசர் அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்டுவிட்டார். இனிப்பு கூடைகள் அனைத்தும் காலியாக இருந்தது. கோபத்துக்கு பெயர்போனவர் துர்வாசர், அவரின் சாபத்திற்கு பயந்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. தரிசனம் முடிந்ததும் யமுனையை கடக்க மீண்டும் அந்த மந்திரத்தை கூறினார்கள் கோபியர்கள், யமுனை வழிவிடவில்லை. கோபிகைகள் துர்வாசரிடம் சென்று "குருதேவா, யமுனையை கடக்க மாதவன் எங்களுக்கு ஓர் வழி கூறினான். அதை மீண்டும் கூறி யமுனையை கடக்க முயற்சித்தோம் முடியவில்லை. பெருக்கெடுத்து ஓடும் யமுனையை கடக்க உதவுங்களேன்" என்றனர்.

கோபியர்களைப் பார்த்த துர்வாச மகரிஷி "கோபிகைகளே! துர்வாசன் நித்ய உபவாசி என கூறுங்கள் யமுனை வழிவிடும்" என்றார். தாங்கள் கொண்டுவந்த பத்துபேருக்கான இனிப்புகள் அனைத்தையும் ஒரே ஆளாக சாப்பிட்டு விட்டு, என்றும் விரதம் இருப்பவர் என சொல்ல சொல்கிறாரே என கோபிகைகள் குழம்பினர். கிருஷ்ணனின் கருத்தையே ஏற்றுக்கொள்ள தயங்கிய கோபியர்களுக்கு துர்வாசரின் கருத்து சற்று மிகையாகவே பட்டது. இருந்தாலும் கிருஷ்ணனின் குருவல்லவா! இவர் சொல்வதிலும் உண்மை இருக்கும் என எண்ணி மூன்று முறை உச்சரித்தனர். யமுனை வழிவிட்டது. மறுகரைக்கு வந்த கோபியர்கள் கிருஷ்ணனை கண்டனர். அவனது பவளவாயில் இனிப்பு தின்ற சுவடுகள் இருந்தது. தங்களை வைத்து ரமணன் லீலை புரிந்ததை கோபியர்கள் உணர்ந்தனர்.

இக்கதை மூலம் ஞானியர்களுக்கு கர்ம தொடர்பு இல்லை என்பதையும், பரமார்த்த சொருபமே அவர்களின் இயக்கத்திற்கு காரணம் என்பதையும் உணருங்கள். மேற்கண்ட ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை படிப்பதன் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உள்ள அவரின் பெயர்களை உச்சரித்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்களை அறியாமலேயே உங்களின் அறியாமையை போக்கும் தன்மை குரு என்ற நிலைக்கு உண்டு.

அவதார புருஷர்களாகிய ஸ்ரீ ராமருக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் தாங்கள் பரமாத்மா என உணர குரு தேவைப்பட்டனர். இறை நிலையாக இருக்கும் குரு நிலை, இறைநிலையை காட்டிலும் மேலானது. குருவை சிந்திப்போம், குருவருள் பெறுவோம்.
-----------------------------------------------

குருபூர்ணிமா

ஜூலை மாதம் 6ஆம் தேதி ஏற்படுகிறது.
அன்று குருவை தியானித்து இருள் விலக்குங்கள்.

Friday, June 19, 2009

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா
- பரமானந்த[ தின்] ரகசியம்.

மனித மனம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது. அதில் தோன்றும் பிம்பங்கள் நிலையற்றது. பிம்பங்களின் இயக்கங்கள் அனைத்தும் நிலையற்றது என்றாலும், அந்த கண்ணாடி பிம்பங்களை பிரதிபலிப்பதை நிறுத்துவதில்லை. மனதும் நிலையற்ற பிம்பங்களை தோற்றுவிக்கும் மாயக் கண்ணாடியாகவே இருக்கிறது. மகிழ்சியின் உச்சம், துயரத்தின் உச்சம் என இரு துருவங்களை மனது அடைந்தாலும் இந்த உச்ச நிலை எனும் அளவு நிலையற்றது.

குழந்தையாக இருக்கும் பொழுது இனிப்புக்கும், வாலிபத்தில் எதிர் பாலினத்திடமும் மத்திய வயதில் பணத்தேடல் என்றும் மனித மனம் மகிழ்ச்சி எனும் ஒன்றை தானே கற்பித்துக்கொண்டு செயல்படுகிறது. இனிப்பை வழங்கியதும் மகிழ்ச்சியடையும் குழந்தை, அதற்குப்பிறகு இனிப்பு வேண்டாம் என சொல்வதில்லை. மேலும் பல இனிப்புகள் மற்றும் வெவ்வேறு சுவைகொண்ட இனிப்புகள் என குழந்தையின் மகிழ்ச்சியின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. மகிழ்ச்சி எல்லை முடிவுற்று விரிவடைவது குழந்தைக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் அதற்கேற்ப அவர்கள் கற்பித்த மகிழ்ச்சிகரமான விஷயத்திற்கும் பொருந்தும். அளவுகடந்த மகிழ்ச்சியை பற்றி குறிப்பிடும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி என குறிப்பிடுவதுண்டு.

உண்மையில் மகிழ்ச்சிக்கு எல்லையோ, எல்லையை கடந்த நிலையோ கிடையாது. மகிழ்ச்சி என்ற உணர்வு தற்காலிகமானது. இதற்கு காரணம் உண்டு. முழுமையற்ற பொருளினால் ஏற்படும் மகிழ்ச்சி தற்காலிகமானது.


முழுமையான பொருளால் ஏற்படும் மகிழ்ச்சி முழுமைபெற்று ஆன்மா வரை நிறைவை அளிக்கும். முழுமையான தன்மையால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஆனந்தம் என்று பெயர். ஆனந்த நிலையை உணரவேண்டுமானால் மாயை அற்ற மனதால் முழுமையான வஸ்துவால் மட்டுமே உணரமுடியும். ஆனந்த நிலை என்பதும் தற்காலிகமானது அல்ல. ஆனந்தம் பூர்ணமான வஸ்துவால் ஏற்படுவதால் ஆனந்தமும் பூர்ணமானதே.


பூர்ணத்துவம் பெற்ற பொருளால் ஏற்படுவது ஆனந்தம் என்றால் பூரணத்துவம் பெற்ற பொருள் எது என்ற கேள்வி எழும். எந்த பொருள் எப்பொழுதும் முழுமையாக இருக்கிறதோ, எந்த பொருள் நமது மாயையால் குறையாகத் தெரிகிறதோ, எந்த பொருள் எப்பொழுதும் தனது முழுமையை இழப்பதில்லையோ அதுவே பூரணமான வஸ்து. நிலவு எப்பொழுதும் முழுமையான நிலையிலேயே இருக்கிறது. நிதர்சனத்தில் தேய்வதோ, வளர்வதோ கிடையாது. பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும்பொழுது சந்திரன் தேய்ந்து மறைவதுபோல் தோன்றுகிறது. பௌர்ணமி நிலவு தெரியும்பொழுது மனதுக்கு இனம் புரியாத ஆனந்தம் ஏற்படுகிறது. முழு நிலவு என்பதற்கு வடமொழியில் பூர்ணிமா என்பர். பூர்ணமான மதி என்பதே இதன் விளக்கம். இந்த சொல் மருவி தமிழில் பௌர்ணமி என வழங்கப்படுகிறது.


நிலவு எப்பொழுதும் முழுமையாகவே இருக்கிறது என்பதை அறிவோம். அவ்வாறு பார்த்தால் தினமும் நமக்கு பௌர்ணமியே என்பது உண்மை. நமது கண்களும், மனதும் மாயத் தோற்றத்தை நம்புவதால் எப்பொழுதும் முழுநிலவு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரிய மண்டலம் என்பதிலும் மனித தன்மை பிரதிபலிக்கிறது. சூரியன் ஆன்மா, சந்திரன் மனம், பூமி உடல் எனும் அமைப்பை ஒத்து இயங்குகிறது. பூமி எனும் உடல் மாயையால் இயக்கப்படுவதால் சூரியன் எனும் ஆன்மாவும், மனம் எனும் சந்திரனும் தோன்றி மறைவதைப் போல் தெரிகிறது. சூரிய - சந்திர கட்டமைப்பை ஆழமாக பார்த்தால் பல வேதாந்த உண்மைகள் தெரியும். சூரியன் என்றைக்கும் சந்திரனுக்கு ஒளி கொடுக்காமல் இருந்ததில்லை. அது போல ஆன்மா என்றும் தனது செயலை [ உண்மை நிலையை ] செய்யாமல் விட்டதில்லை.


ஆன்ம ஒளி எப்பொழுதும் செயல்பட்ட வண்ணம் இருந்தாலும் மாயை அந்த ஒளியை மறைத்து விடுகிறது. இருள் நிலை கொண்ட உள்நிலையை ஒளி உணரவைக்கும் தன்மைக்கு மாற்றுவது குருவின் செயலாகும். உண்மையான பூர்ண வஸ்து, மனதில் பேரானந்தத்தை வழங்கும் செயலை துவக்கி வைப்பவரை குரு என்போம். சத் [ உண்மை ] மூலம் பூர்ண ஆனந்தத்தை சித்தத்தில் [ மனதில் ] வழங்குபவர் சத்சிதானந்த சொரூபமாக விளங்கும் குரு ஒருவரே. அவரைத் தவிர வேறு எதுவும் ஆனந்தத்தை வழங்கமுடியாது. குருவின் கிருபை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் தன்னை குருவிடம் ஒப்படைத்து சரணாகதி அடையும் நிலை மனிதனுக்கு குறைவாகவே இருக்கிறது. தனது கண்கொண்டும், புத்தக அறிவுகொண்டும் குருவை முடிவு செய்பவர்களே அதிகம். தங்களின் புத்திசாலித்தனத்தால் குருவை காணாமல் இருள்நிலையில் இருப்பவர்களின் பட்டியல் தயாரித்தால், உலகின்சுற்றளவை தாண்டிவிடும்.

குருவும் தெய்வநிலையும் வேறு வேறு அன்று. இறை தன்மையே குருவடிவம் தாங்கி நமக்கு அக ஒளியை வழங்குகிறது என்கிறது வேதம். குருவின் செயல், தன்மை, அவரின் வாழ்க்கை போன்றவற்றை ஆராய்வதும், விமர்சிப்பதும் கடவுள் தன்மையை விமர்சிப்பதற்கு ஒப்பாகும். குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் இல்லை, எத்தகைய வழியை நமக்கு காட்டுகிறார் என்பதே முக்கியம்.

ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனை பற்றி தெரிந்ததால், அவனால் திருட்டு தொழிலை செய்யமுடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது என பார்க்கும்பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான்.


வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன், யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும், தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்துகொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும் ? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளை கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டான்.
திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல், சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துகொண்டனர்.

திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத்தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். " ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் " என கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.

ஆசீர்வதிப்பதை போல கைகளை உயர்த்தி, பூசணிக்காய் போல கைகளை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டிவிட்டு கண்களை மூடினார் பூசணி முனிவர். " பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன்" என்பதையே சைகையில் முனிவர் கூறினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார் என்று நினைத்தான். மேலும் "உலகில் எதுவும் இல்லை, அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது " என குரு உணர சொல்வதாக எண்ணிக்கொண்டான்.


சிஷ்யனோ ஆனந்தமாக அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கி விடைபெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சிஷ்யன் ஞானம் அடைந்தார். இந்த கதையின் மூலம் குருவின் தன்மையில் முக்கியமில்லை. குரு உங்களில் என்ன ஏற்படுத்துகிறார் என்பதே முக்கியம் என உணருங்கள்.


முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ". முழுமையை உணர்த்தும் பௌர்ணமி அன்று இருக்கும் உயிர் கூட இறைநிலையை நோக்கி உயர்த்தக் கூடியது இந்த திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும் குரு பூர்ணிமா தனி மனிதன் குருவின் வழிகாட்டுதலை துவங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைகிறார்கள்.


குருபூர்ணிமா அன்று பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் வந்ததாக தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.

குரு பூர்ணிமா உண்மைகளை மேலும் தெரிந்து கொள்வோம்...


(தொடரும்)

Friday, June 12, 2009

யோகி...........போகி........ ரோகி......


மூன்று வேளை உண்பவன் ரோகியாம்
இருவேளை உண்பவன் போகியாம்
ஒருவேளை உண்பவன் யோகியாம்

உணவை வைத்தா யோகியை அளப்பது?

மூன்று காலத்திலும் வாழநினைப்பவன் ரோகி
இரு காலத்திலும் வாழ்பவன் போகி
நிகழ்காலத்தில் இருப்பவனே யோகி

இருப்பு என்ற நிலை தவிர..
நிகழ்காலம் என்று ஒன்று இல்லா காலத்தில்
இருப்பவனே யோகி.

உண்ணாமல் ஜீரணிப்பவன்
தூங்காமல் களைப்பை தீர்ப்பவன்

புணராமல் சந்ததி வளர்ப்பவன்
இல்லாமல் இருப்பவன் எவனோ அவனே யோகி.

யோகியமான யோகியானால் என்ன நடக்கும் ?
என்னில் நடந்தவை உனக்காக..


ரூபமற்ற பெருவெளியில் அந்தமற்ற சமவெளியில்
ஐக்கியமான ஒரு பெருஞ்சோதியில் இருள்விலக கலந்து
பின்பு ...

மற்றதை நீ யோகி ஆனதும் அனுபவி
இல்லையேல் கற்பனை போகியாகி கற்பில்லா யோகியாவாய்.

யோகியாக யோக்கியதை தேவை இல்லை.
போகியாகவும் ரோகியாகவும் நீ முயலுவதில்லையே?
பின் ஏன் யோகியாக முயற்சி செய்ய சொல்லுகிறாய்?

எங்கு சென்றோம் திரும்பி வருவதற்கு ?
எங்கே தொலைந்தோம் நம்மை தேட ?
எங்கே விழுந்தோம் மீண்டும் எழ?

இந்த ஷ்ணத்தில் முழுமையாக வாழு
நீ நீயாக இரு.

யோகியே.......
நீ நீயாக இரு.

Wednesday, June 10, 2009

இளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்

பழைய பஞ்சாங்கத்தில் திருமந்திரத்திற்கான விளக்கம் கேட்டிருந்தேன்.

திருமந்திரத்தில் இருக்கும் 3048 பாடல்களில் எது பிடிக்கும் என பிரிப்பது சிரமம். பூந்தி லட்டுவில் எந்த பூந்தி இனிப்பானது என சொல்லுவதை போல திருமந்திரத்தில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் நிலையும் ஒன்று. இருந்தாலும் அந்த லட்டுவுக்கு இடை இடையே முந்திரி திராட்சை இருந்து அதன் தித்திப்பை அதிகரிக்குமே? அது போன்ற சில பாடல்கள் உண்டு.

திருமந்திரம் ஒரு ஆன்மீக என்சைக்ளோபிடியா. இந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும் வேறு எதையும் கற்றுக்கொள்ள தேவையில்லை. காரணம் அனைத்து ஆன்மீக விஷயத்தின் சாரமே திருமந்திரம்.

திரு மூலரையும் திருமந்திரத்தையும் பற்றி கூறுவது என்பது எனக்கு எவ்வளவு பிடித்த விஷயமோ அவ்வளவு பிடிக்காதது.

பிடித்தது எதுவெனில் திருமந்திரத்தில் இருக்கும் சொற்பிரயோகம், அதன் நேர்த்தி, பல்கோண விளக்கம் மற்றும் வார்த்தையின் அடர்த்தியான பொருள் என நீண்ட பட்டியல் உண்டு.

பிடிக்காதது என்னவென்றால் பிறருக்கு விளக்கம் கொடுக்க துவங்கினால் தேன் கிண்ணத்தில் விழுந்த எறும்பு போல நான் என்னை மறந்து அதில் இறந்துவிடுவேன்.

இப்பொழுது கூட பாருங்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்த நான் எங்கோ மூழ்கிப்போகிறேன்.

திருமந்திரம் பாடல் 1514:

இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீக தன்மைக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கும் பாடல். எளிமையாக சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி. உங்களை சரியாக பிரதிபலிக்கும். சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக விளக்கம் கொடுக்க முடியும். அவற்றில் சில...

ஞான யோக விளக்கம் :

ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.

பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.

பக்தி யோக விளக்கம் :

சக்தி என்பவள் மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ நிலை என்பது மாறாதது. என்றும் இருக்கும் சிவ நிலையானது முதுமையானது. சக்தியானவள் தன்னை எப்பொழுதும் புதுப்பித்து கொள்வாள். அதனால் தான் சக்தியை கன்னிப்பெண்ணாகவும், குமரிப்பெண்ணாகவும் வணங்கும் வழக்கம் நம்மில் உண்டு.

நம்மில் இருக்கும் சிவதன்மையில் சக்தி நிலை ஒன்றிணந்து பரவச நிலைக்கு கொண்டு சேர்ப்பது பக்தியோகத்தின் திருமணம் எனலாம். கோவில்களில் நடக்கும் மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் இவை இதற்கு சான்று.

குண்டலினி யோக விளக்கம் :

குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்குகிறாள். அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி அறியாமையை நீக்கி சகாஸ்ராரத்தை அடைவாள்.

அறிவியல் விளக்கம் :

அனுக்கரு என்பது நிலையான ஒன்று. அனு உருவாக்கத்தில் முதலில் தோன்றுவது அனுக்கரு. அனுவை சுற்றிவரும் எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள் ஆற்றல் நிலையில் இருப்பதால் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். சில அறிவியல் வினையால் (குணம் பல காட்டி) அனுக்கருவான கிழவனை பிளந்து இவற்றுடன் மோதசெய்வதால் வெளிப்படும் ஆற்றல் அளவில்லாதது. திருமணம் எப்படி தனி ஒருவனாக செய்ய முடியாதோ, அனைவருக்கும் தெரிந்து விடுமோ அது போல இந்த செயலும் மறைத்து தனிமனிதனாக செய்ய முடியாது.

எளிய விளக்கம் :

ஆன்மீகம் என்றவுடன் ஏதோ வயதானவருக்கான விஷயம் நமக்கு ஏன் என கேட்பவர்கள் உண்டு. அறுபது வயசுக்கு மேல கிருஷ்ணா ராமானு இருக்கிறது தானே இருபது வயசுல இது தேவையா என சிலர் இளைஞர்களை பார்த்து கேட்பதை பார்த்திருக்கிறேன்.

ஆன்மீகம் என்பது இளம் பெண்ணை போன்றது. ஒரு இளம் பெண்ணை முதிய வயதில் திருமணம் செய்தால் எவ்வளவு சிக்கல் வருமோ அதுபோன்றது அறுபது வயது வரை ஆன்மீக நாட்டம் இல்லாமல் அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.

தக்கவயதில் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சரியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனது விளக்கம்


இதயம் எனும் இருட்டு அறையில் பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன் திகள்கிறது. இருள் எனும் அறியாமையில் இருக்கும் மனதை ஒளிபெறச்செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது பல குண தோஷங்களை நீக்கியும், எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி) மூலமும் 'தான்' எனும் அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக திருமணம் அல்லவா? தான் எனும் அகந்தை அற்று அதனுள் ஒன்றாக இணையும் தெய்வீக திருமணத்திற்கு முயலுங்கள்.

மேற்கண்ட பாடலுக்கு ஓரளவு சரியாக விடை சொன்ன
புதுகை.எம்.எம்.அப்துல்லா
மற்றும் திருப்பூர் சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். ப்ரணவ பீடத்தில் தயாரான தியான ஆசனம் அவர்களுக்கு எனது இதயப்பரிசாக அளிக்கிறேன்.

பி.கு : எனது திருமந்திர விளக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டம் செய்யவும். மேலும் மிக நுட்பமான திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்ல முயலுகிறேன்.


Tuesday, June 9, 2009

பழைய பஞ்சாங்கம் 09-ஜூன்- 2009

எனது சிறுகதை

உரையாடல் :சமூக இலக்கிய அமைப்பு சிறுகதை போட்டி அறிவிச்சவுடன் எனக்கும் சிறுகதை எழுதனும்னு ஒரு வெறி. :) முன்னபின்ன கதை எழுதி பழக்கம் இல்லை. நாம சொல்ல வர செய்தியை கொடுக்க ஒரு மீடியாவா இந்த சிறுகதையை வைச்சுக்கலாம்னு எழுத துவங்கினேன். எந்த வேலை செய்யறதுக்கு முன்னாடியும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட ஒப்பீனியன் வாங்கனும் இல்லையா? அது மாதிரி நம்ம “பிரபல” வலைபதிவாளர் கிட்ட தொலைபேசியில் சிறுகதை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு அடிப்படை தேவை என்னானு கேட்டேன்.

ஒரு அரை மணி நேரம் சும்மா பேசினார் பேசினார் பேசிக்கிட்டே இருந்தார். கடைசியாக் கேட்டேன், நீங்க சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லுங்க. நான் சிறுகதைக்கு ஐடியா கேட்டேன், தொடர்கதைக்கு இல்லைனு சொன்னேன். அதுக்கு அவர் “கதை எழுத வாசிப்பு அனுபவம் ரொம்ப முக்கியம்” என்றார்.

நானும் அவருக்கு மின்னஞ்சலில் இந்த போட்டோவை அனுப்பி இந்த அளவுக்கு வாசிச்சா போதுமானு கேட்டேன். துக்கு அப்பறம் எப்போ போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன்கிறார். சிறுகதைக்கு பின்னூட்டமும் போடலைனா பார்த்துக்குங்க. என்ன கோபமோ... ஒரு எழுத்தாளனை வளரவிட மாட்டாங்களே... :)
---------------

தற்கால MMS

காகிதம் கண்டறியப்படாததற்கு முன் காலத்தில் ஓலையிலும், மரக்கூழ் பட்டையிலும் எழுதுவது என்பது சூழலாக இருந்தது. ஓலை மற்றும் மரக்கூழ் பட்டையில் பூச்சி கரையான் அரிக்க கூடாது என அதில் மஞ்சள் தடவுவது உண்டு. முக்கியமாக முனைபகுதியில்லும் மையத்திலும் தடவுவார்கள். இதை பின்பற்றி பிற்காலத்தில் ஜாதக நோட்டுக்கள், கணக்கு புத்தகங்களிலும் மஞ்சள் தடவ துவங்கினோம். இதற்கு காரணம் மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் மஞ்சள் நிறம் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்மனதை உற்சாகத்தை ஏற்படுத்தும். மஞ்சள் நிறம் குரு என்ற கிரகத்தை குறிப்பதால் சுப நிகழ்ச்சிக்கு அது ஆதாரமாக இருக்கும் என்பது கருத்து. ஒரே நேரத்தில் அனைத்து விஷயத்திற்கும் மஞ்சள் பொடி தீர்வாக இருந்தது.

தற்காலத்தில் இதை அறியாமல் மஞ்சள் ஒரு சடங்காக கொண்டு செயல்படுகிறார்கள். கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜாதக குறிப்பேடுகளில் மஞ்சள் நிறத்தை அச்சுட்டு தருகிறார்கள். மங்களமாக இருக்க வேண்டுமாம்..! தாத்பரியம் தெரியாமல் இவர்கள் செய்யும் கோமாளித்தனத்தை போல அனேக சம்பிரதாயங்கள் இருப்பது வேதனை. நாளை திருமண தகவலை குறுஞ்செய்தியாக அனுப்புபவர்கள் மஞ்சள் நிறத்தில் செய்தியின் முனையில் வண்ணமாக்கி இருப்பார்கள். MMS என்பதை கூட மஞ்சள் மெசேஜ் சர்வீஸ் என சொன்னாலும் சொல்லுவார்கள்.
---------------
தலை எழுத்து மாறுமா?

ஒரு ஜோதிடர் ஆற்றங்கரையில் நடைபயிற்சியில் இருந்தார். அவர் காலில் ஒரு மண்டை ஓடு தட்டுப்பட்டது. அவருக்கு கபாலத்தில் இருக்கும் தலை எழுத்தை படிக்கும் சாஸ்திரம் தெரிந்தவராக இருந்தார் என்பதால் கபாலத்தை எடுத்து ஆராய்ந்தார். அந்த கபாலத்தில் இருந்த தலை எழுத்தில் “இறப்புக்கு பின் இந்த மனிதனின் தலை சுக்குநூறாகும்” என எழுதப்படிருந்தது. அதை ஆராய நினைத்து தனது வீட்டின் முகப்பில் இருக்கும் மரக்கிளையில் வைத்துவிட்டார். தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், வீட்டுக்குள் வரும்பொழுதும் மரக்கிளையில் இருக்கும் கபாலத்தை ஒருமுறை பார்ப்பார்.

இவரின் செயலை தினமும் கவனித்த ஜோதிடரின் மனைவி அவர் மேல் சந்தேகப்பட்டு அடுத்த வீட்டுக்காரியிடம் பேசும்பொழுது இதை பற்றிக் கூறினாள்.அடுத்தவீட்டுக்காரி சும்மா இருப்பாளா?

உன் கணவரின் கள்ளக்காதலி இறந்து போயிருப்பாள் அவளின் கபாலமாகத்தான் இருக்கும் என கூறி அவளின் சந்தேகத்தை வலுப்படுத்தினாள். வீட்டுக்கு வரும்பொழுது மரக்கிளையைல் இருக்கும் கபாலத்தை இல்லாததை பார்த்து குழப்பத்துடன் வீட்டுக்குள் சென்றார் ஜோதிடர்.

மனைவி கோபத்துடன் காப்பியை 'நங்' என வைத்தாள். மனைவி கோபமா இருப்பதை உணர்ந்து அமைதியாக காப்பியை குடித்தார். காப்பி வித்தியாசமான சுவை இருப்பதை உணர்ந்து, கோபமாக இருப்பவளிடம் நேரடியாக் சொல்ல பயந்து, “காப்பி இன்னைக்கு அருமையான டேஸ்ட். அப்படி என்ன இதுல போட்டே?” என்றார். கண்கள் சிவக்க மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மனைவி கோபமாக, “டேஸ்டா இருக்காதா பின்ன? உங்களுக்கு அறிவு வரத்தான் உங்க கள்ளக்காதலியோட மண்டையோட்டை பொடியாக்கி காப்பியில் கலந்தேன்...!” என்றாள்.
---------------
கவிதை கார்னர்

இந்த வாரம் நான் கவிதை எழுதப்போவதில்லை (யாருப்பா அது ...அப்பாடா தப்பிச்சோம் சவுண்ட் கொடுக்கறது?).

திருமூலரின் திருமந்திரத்தில் இருக்கும் நான் ரசித்த ஒரு பாடலை கொடுக்கிறேன். இதை கூர்ந்து படித்து விளக்கம் கொடுக்கவேண்டும். சிறந்த விளக்கத்திற்கு ஒரு பரிசு உண்டு.

இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

Sunday, June 7, 2009

இலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தங்களை பற்றிய ஜோதிட பலாபலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் அனைவருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஜோதிடம் நம்பாதவர்கள் கூட ,” எங்கே சொல்லுங்க நடக்குதானு பார்ப்போம்” என கூறி எதிர்கால பலனை தெரிந்து கொள்வார்கள்.

இந்த வலைதளம் ஆரம்பித்த நாள் முதல் ஏனைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகிறது. ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் பதினைந்து மின்னஞ்சல்கள் வருகிறது. எனது எதிர்காலம் கூறுங்கள் என அவர்களின் வாழ்க்கை சிரமங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி வரும் கடிதங்களை நான் பதில்கூறாமல் தவிர்த்தேன்.

ஜோதிட சாஸ்திரம் சாமானியமான விஷயமாக தற்காலத்தில் நலிவடைந்து விட்டது. ஜோதிடர்களும் தங்கள் சுயலாபத்தால் ஜோதிடம், ஜோதிடர் என்ற வார்த்தைக்கு கலங்கத்தை உண்டாக்கிவிட்டனர்.

முன்காலத்தில் ஜோதிடரை மன்னன் சந்திக்க வேண்டுமானால் ஜோதிடரை காண மன்னன் தான் வரவேண்டும். தகுந்த தூதுவனை அனுப்பி அவரிடம் பார்க்க அனுமதி கேட்க வேண்டும். அல்லது ஜோதிடரை சகல செளகரிய்த்துடன் அரண்மனையில் வைத்திருக்க வேண்டும். மன்னன் ஜோதிடரை ஏன் இவ்வாறு ஆராதிக்க வேண்டும் என நினைக்கலாம். மன்னன் ஜோதிடரை ஆராதிக்கவில்லை. அவனுக்கு உள்ளே இருக்கும் சாஸ்திரத்திற்கு மதிப்பு கொடுத்தார்.

தற்காலத்தில் நமது எண்ணம் நிறைவடைந்தால் போதும் என்ற சுயநலம் மேலோங்கி இருப்பதால் ஜோதிடரை பற்றியோ சாஸ்திரத்தை பற்றியோ கவலைகொள்வதில்லை. எங்கள் ஜோதிட பயிற்சிக்கான விளம்பரங்களை பார்க்கும் சிலர் கூட "tell about my future" என குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு.

அவர்கள் வாழ்க்கையும் மனதும் விசாலமான இருக்குமா? செய்தியின் அளவில் தானே இருக்கும். நான் சொல்லுவது மிகையாக படலாம். எனது ஆரம்ப கால பதிவுகளை சென்று பாருங்கள். அதன் பின்னூட்ட பகுதியில் தங்கள் பெயருடன் சிலர் பலன் கேட்டிருப்பார்கள்.

பண்டைய ஜோதிட நூல்களில் அதன் ஆசிரியர்கள் ஜோதிட விதிகளை கூறும் முன் ஜோதிடரை அனுகும் முறை மற்றும் ஜோதிடர் எப்படி இருக்கவேண்டும் என விவரிக்கிறார்கள். code of conduct என சொல்லலாம். ஜோதிடர், குரு, மருத்துவர் ஆகியோரை வெறும் கையில் சென்று சந்திக்க கூடாது. பழம், பூ, சிறிய துண்டு அல்லது துணி, சிறிது பணம் மற்றும் முடிந்த அளவு தானியம் ஆகியவற்றுடன் சென்று அதை அவரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்ற பின்பு - தான் வந்த காரியத்தை கூறவேண்டும் என்கிறது சாஸ்திரம். இதில் நுட்பமான மனோத்தத்துவம் பொதிந்துள்ளது.

சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள். ஜோதிடரோ கஷ்டபட்டு பலன் சொல்லி பணம் கிடைக்காதோ என்ற குழப்பத்தில் சரியான பலனை சொல்ல முடியாத நிலைக்கு செல்லுவார். சில ஜோதிடர்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு பரிகாரங்கள் செய்ய சொல்லுவதும் இதனால் தான். ஆயிரக்கனக்கான பில்லை பார்த்தவுடன் வந்தவர் “ஐயா நான் சாதாரண ஆள் என்னிடம் இவ்வளவு தான் இருக்கு” என தஞ்சம் அடைய வைக்க ஒரு யுக்தி.

இன்றைய நிலையில் ஜோதிடருக்கும் அவரை சந்திக்க வருபவர்ருக்கும் காசைதவிர வேறு எந்த சிந்தனையும் இருப்பதில்லை. காணிக்கையை முன்பே சமர்பித்துவிட்டால் இருவருக்கும் அதைபற்றிய எண்ணம் இல்லாமல் வாழ்க்கைப் பற்றி பேசத்துவங்குவார்கள்.

ஆகவே ஜோதிடருக்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் ஜோதிடத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஜோதிடருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.

ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம். இலவச பலன் கேட்பதற்கோ கொடுப்பதற்கோ நான் எதிரானவன் அல்ல. இந்த வருடம் தவிர்த்து கடந்த நான்கு வருடங்களாக சித்திரை ஒன்றாம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பலன் கூறும் நிகழ்ச்சியை எங்கள் அறக்கட்டளை செய்துவருகிறது.

நான் இக்கட்டுரையில் கூறவந்தது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் அனுகும் முறையை தெரிந்து
கொள்ளுங்கள் என்பதே. மேலும் நான் பிறருக்கு ஜோதிட பலன் சொல்லுவதை அதிகமாக விரும்பவில்லை. கற்றுக்கொடுப்பதிலும் எனது ஆய்வு பணிகளிலும் ஈடுபட விரும்புகிறேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க விரும்பி ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் தான் அதிகம்.

இவ்வாறு இருக்க இலவச பலன் விரும்புபவர்களை நான் குறையாக சொல்ல வில்லை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். அல்லது உள்ளூரில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் என அனேக காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு பலன் கூறவும். என்னிடம் பலன் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் வழங்கி உள்ளார்.



சுப வரம்” எனும் ஆன்மீக மாத பத்திரிகையில் கடந்த சில மாதங்களாக ஆன்மீக கட்டுரை எழுதி வந்தேன். ஜூன் மாதம் முதல் அதன் 32 பக்க இணைப்பில் ஜோதிட கட்டுரைகள், இலவச பலன்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிகள் என அனைத்தும் எழுதுகிறேன். இந்த மாத இதழ் வாயிலாக நீங்கள் இலவச பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுகான இலவச பலன்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

varamdesk@gmail.com


அதில் பின்வரும் வடிவில் தகவல்கள் இருக்கட்டும்.

பெயர் :
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
பிறந்த இடம் :
கேட்கவிரும்பும் கேள்வி :

[இத்துடன் ஜாதக பிரதி இணைத்து அனுப்புவது நலம்]


உங்களின் கேள்விகள் சுபவரம் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.

இணைய முகவரி : சுபவரம் ஆன்மீக மாத இதழ்
உங்கள் வாழ்க்கை வழிகாட்ட இறைவன் கொடுக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Saturday, June 6, 2009

அந்தமற்ற அந்தாதி


பிறந்தவுடன் எனக்கு என்னை புரியவில்லை.
ஏன் பிறந்தேன் என கேட்டதற்கு பதில்
-உன்னை படைத்தவர் பெயர் கடவுள்.

கடவுள் எங்கே என தேடுதல் துவங்கியதில்
துணிலோ துரும்பிலோ கடவுள் இல்லை.
அவர் இருப்பது அனைத்திலும்.

அனைத்தும் நானாக உணர்ந்தேன்
அப்பொழுது எனக்கு துணை தேவைபட்டது.
அனைத்தும் நானாக இருக்க நானே தான் எனக்கு துணை.

துணை இருந்தால் உலகில் பல செயல்கள் செய்யலாம்.
உலகில் துணையாக இருப்பதே செயல் தானே

எனக்கு செயல் என்பதே பிடிக்காமல் - செயல்படாமல் இருந்தேன்,
செயல்படாமல் இருப்பதும் செயலல்லவா என்ற எண்ணம் வந்தது.

எண்ணங்கள் என்பது உலகை புரட்டிப்போடும் ஆயுதம்
அதனால்தான் நான் அகிம்சையை விரும்புகிறேன்.

அகிம்சையை நான் விரும்புவதில்லை காரணம்
அதிலும் இம்சை எஞ்சி இருக்கிறது.

எஞ்சி இருக்கும் நான் யார் என புரிதல் தொடங்க முயற்சித்தேன்
அங்கே எஞ்சியது வெறுமை

வெறுமையாக இருக்கும் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்..
வா மீண்டும் கடவுளை தேட பிறந்துவிடுவோம்.

பிறந்தவுடன் எனக்கு என்னை புரியவில்லை................

Friday, June 5, 2009

பதிவுலக மேனியா



மேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.


மேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.

யாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.

ஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.

என்ன கேள்வி இது சாமி? முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.

ஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....

அலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா?

தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.

சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்
“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)

இதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.

(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு ?

இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.

இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா?

வலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..

நீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)

எழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..

இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து

ஏமாந்த சாமானியன்

டிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)

டிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.”
என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)

ப்ராண சக்தி - பகுதி 2

ப்ராணா என்பது ஏதோ ஒரு வஸ்து என எண்ணிடலாகாது. அது நமது உயிர்சக்தி என புரிதல்வேண்டும். உலகில் அசையும் பொருளுக்கும் அசையா பொருளுக்கும் ப்ராணனின் இருப்பே வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. உயிரின் மூலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் ப்ராணனை தொடர்ந்தால் சில தகவல்கள் கிடைக்கலாம்.

ப்ராணா என்பது உயிர்சக்தி என்றேன். இந்த உயிர்சக்தியை ரிஷிகளும், வேத சாஸ்திரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். நிலைநிறுத்தும் செயலுக்கு ப்ரதிஷ்டா என பெயர். ப்ராணனை நிலைநிறுத்துதல் என்பதை ப்ராண பிரதிஷ்டா என்றனர்.


ப்ராண சக்தியின் வகைகளை தெரிந்து கொள்ளும் முன் ப்ராணாவின் உண்மை நிலையை கூறும் வேத மந்திரத்தை பற்றி காண்போம். ப்ராணனை ஒரு குறிப்பிட்ட 'இடத்தில்' நிலைநிறுத்த பயன்படும் மந்திரம் ப்ராணாவின் சிறப்பை கூறுகிறது.

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம் விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: ருக் யஜூஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ||
ஸகல ஜதத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார காரிணி ப்ராண ஸக்தி:
பரா தேவதா |


பொருள் :
பிரம்மா,விஷ்ணு சிவனாகவும், வேத மந்திரங்களாகவும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றத்திற்கும், செயலுக்கும், அழிவுக்கும் (ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸ்ம்ஹாரம்) காரணம் ப்ராண சக்தியே.. அதுவே தெய்வ நிலையில் உன்னதமானது.

இதற்கு மேல் ஏதாவது ப்ராண சக்தியை பற்றி சொல்லவேண்டுமா? ப்ராணனின் வகைகளை பார்ப்போம் வாருங்கள்.

உதானன் :

தலை உச்சியிலிருந்து கழுத்து பகுதியின் மையம் வரை உதாணனின் இருப்பிடம். நெருப்புக்கு இணையான சக்தி கொண்டது. நவ கிரகத்தில் சூரியன் இதை ஆட்சி செய்கிறார். அதிகமாக சிந்திக்கும் பொழுதும் கோப உணர்வு ஏற்படும்பொழுதும் தலை பகுதி சூடாவது உதானனின் எதிர்செயலாகும். ப்ராண சக்தியால் உதானனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் நெருப்பின் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தீபம் மற்றும் புனிதவேள்வி நெருப்பு இவர்களை கவரும் செயலில் தளர்வாகவும், பேச்சில் விரைவாகவும் இருப்பார்கள்.


ப்ராணா:


கழுத்தின் மையத்திலிருந்து மார்பு பகுதிவரை ப்ராணனின் இருப்பிடம் . பலர் ப்ராணன் என்பது மூச்சு என தவறாக உருவகிக்கிறார்கள். பிராணன் பிரபஞ்சத்திலிருந்து உடலுக்குள் வருவதற்கும், உடலிலிருந்து வெளியேறுவதர்க்கும் சுவாசத்தை வாகனமாக பயன்படுத்துகிறது. சிலருக்கு இது வியப்பான மற்றும் புதிய தகவலாக இருக்கலாம். மயக்கமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் கொடுப்பதை பார்த்திருக்கலாம் மயக்கமுற்றவர் சுவாசம் எடுக்க முடியாவிட்டாலும் ப்ராணன் வெளியிலிருந்து செயற்கை சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. இதே செயற்கை சுவாசத்தை இறந்த உடலில் பொருத்தினால் ஏன் இறந்த உடல் சுவாசம் எடுப்பதில்லை. காரணம் இறந்த உடலில் பிராணன் இல்லை. இதன் மூலம் ப்ராணன் வேறு, மூச்சு வேறு என உணருங்கள்.


இதை உணர்பவர்கள் இனிமேலாவது ப்ராணாயாமம் என்பதை மூச்சுப்பயிற்சி என மொழிபெயர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பஞ்ச பூதத்தில் காற்றின் செயலை செய்கிறது ப்ராணன். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் புதன் இதை குறிக்கிறது. உடலுக்குள் செல்லும் ப்ராணன் சந்திரனின் ஆதிக்கமும், உடலுக்குள் இருந்து வெளியே செல்லும் ப்ராணன் புதனின் ஆதிக்கமும் கொண்டது. அதிக எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது சுவாசம் அதிகமாக வருவதும், எண்ணங்களற்ற நிலையில் குறைந்து இருப்பதும் ப்ராணனின் செயலை குறிக்கும். காற்றின் மேல் மோகம் கொண்டவர்களாக ப்ராணனின் ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள். நெருக்கமாக இருப்பதும், ஒரே இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எண்ணங்களில் வேகம் கொண்டவர்கள். அலைகடல் மற்றும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் இவர்களை கவரும்.


சமானா :


மார்பின் மையத்திலிருந்து நாபி பகுதிவரை சமானனின் இருப்பிடமாக விளங்குகிறது. நீர் என்னும் பஞ்ச பூதத் தன்மையை சார்ந்தது. நீர் எவ்வாறு சமதளத்தை நோக்கி சென்று சமநிலை அடையுமோ அது போன்ற செயலை உடலுக்கு வழங்குகிறது. உடலின் சுவாசம், ஜீரணம், இன பெருக்கம் போன்ற செயல்கள் சிறப்பாக இருக்க இதன் செயல் பேருதவியாக இருக்கும். அஜீரணம் ஏற்படும் பொழுது செரிக்கப்படாத உணவை உணவுக்குழாய் மூலம் மேல்நோக்கி அதிக விசையுடன் செலுத்தும் பணி சமானனுடையதே ஆகும். செரிக்கப்படாத உணவை உடலைவிட்டு வெளியேற்றி உடலை சமநிலைபடுத்துவது போல பல உடல் செயல்களில் சமானனின் பங்கு உண்டு. நவ கிரகத்தில் சனியின் தன்மையாக செயல்படுகிறது. ப்ராணனில் சமானனின் ஆதிக்கம் கொண்டவர்கள் நேர்மையானவர்களாகவும், யாருக்கும் பாரபட்சமின்றி முடிவெடுப்பவர்களாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அருவிகள் , ஆறுகள் இவர்களை கவரும் இயற்கையான விஷயங்களாகும்.


அபானா:

நாபிப்பகுதியிலிருந்து மர்மஸ்தானத்திற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதிவரை அபானாவின் இடமாகும். பஞ்ச பூதத்தில் மண் தன்மையையும், நவகிரகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் குறிக்கும். நுரையீரல் சுவாசித்தல், உடலில் கழிவுப்பொருட்கள் வெளியேறுதல் போன்றவற்றிற்க்கும் காரணமாக இருப்பது அபானன். இனப்பெருக்கத்திற்காக மனதிலும், உடலும் ஓர் மாற்றத்தை உண்டாக்குவதில் அபானனின் பங்குஅதிகம். மனிதன் பிறந்து வளர்ச்சி அடையும் பொழுது பிற ப்ராணன்களை காட்டிலும் அபானன் அதிக அளவில் செயல்படுகிறது. புதிய சிந்தனை - கவிதை - ஓவியம் நாட்டியம் - சமூக புரட்சி போன்றவை அபானனின் ஆதிக்கம் கொண்டவர்களின் செயல்களாகும். காடுகள் இவர்களை கவரும் இயற்கை தன்மைகள் ஆகும்.

வியானா:

உடல் எங்கும் வியாபித்து இருப்பதால் இது வியானா என அழைகப்படுகிறது. தலை முதல் பாதம் வரை வியானா செயல்படுகிறது. ப்ராணனின் பிற பிரிவுகளுக்கு ஆற்றலை கடத்தும் பொருளாகவும், ப்ராண சக்தியை சமநிலையில் வைத்திருப்பதும் இதன் பணிகளாகும். தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது முதலில் தோன்றும் ப்ராணவகை வியானாவாகும். இதற்கு பிறகுதான் பிற நான்கு பிரிவுகளும் உருவாகிறது. இறக்கும் சமயத்தில் ப்ராணா வெளியேறிய உடன் உடல் செயல் முடிவடைகிறது. இறப்பிற்கு பின் குறைந்தது 48 மணி நேரத்திற்கு பிறகுதான் வியானா வெளியேறும். முதலில் உடலில் நுழைவதும் கடைசியில் உடலை விட்டு நீங்குவதும் வியானாவின் தன்மையாகும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தின் தன்மையும், நவகிரகத்தில் குருவும் வியானாவை பிரதிபலிக்கிறார்கள்.

அமைதியான மனநிலையும், எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றமற்ற மனநிலையும் வியானா ஆதிக்கம் கொண்டவர்களின்நிலையாகும். வியானா முழுமையான செயல் நிலையில் இருப்பவர்கள் உடல் ஒளிரும் தன்மையில் இருப்பதையும் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் ஆனந்தத்தையும் உணர முடியும். வெண்மேகங்கள் இல்லாத நீலவானம், மழைநின்றவுடன் இருக்கும் புதிய சூழ்நிலை போன்றவை வியானாவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த இயற்கை விஷயங்கள்.


பஞ்ச ப்ராணன்கள் பற்றிய விளக்கம் உங்களை பல சிந்தனைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். ப்ராணனின் ஆதிக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் குணமும் , செயலும் வேறுபடுவதை உணரலாம். ஆன்ம விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் பஞ்ச பிராணன்களை சமநிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கை சூழ்நிலையான கடல், மலை, வானம் மற்றும் ஆறுகளின் அருகில் வசிப்பதை விரும்புகின்றார்கள். இவர்களுக்கு வியானன் சிறப்பாக செயல்படுவதால் கண்களிலும், உடலிலும் ஒளிவீசும் தன்மை ஏற்படும். இதைக் கொண்டு அவர்களின் ப்ராண நிலை சமநிலையில் இருப்பதை உணரலாம்.


ஹட யோகத்தில் ப்ராணனை நல்வழிப்படுத்தும் பயிற்சியே ப்ராணாயாமம் எனப்படுகிறது. யாமம் என்பதற்கு செம்மையாக்குதல் - நிலைப்படுத்துதல் எனப்பொருள். நாடி, சுத்தி, ஷண்முகி முத்ரா ப்ராணாயாமம் மற்றும் பல உயர்நிலை ப்ராணயாம பயிற்சிகள் ப்ராணனை நெறிப்படுத்த உதவுகிறது. நவக்கிரக தியானம் ப்ராணனை, பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்து உயர்நிலைக்கு உயர்த்துகிறது. என்னிடம் யோக பயிற்சி கற்றவர்கள் ப்ராணனின் தன்மையை சிறிதேனும் உணர்ந்திருப்பார்கள்.

ஹடயோகம் மட்டுமல்ல கர்மயோகமும், பக்தியோகமும் ப்ராணனை நல்வழிப்படுத்தும் சிறந்த வழிகளாகும். ப்ராணனின் நாத வடிவமான ஒளி வடிவமே 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதிலிருந்துதான் பிரபஞ்சமும் நாமும் உருவானோம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ராண சக்தியை பற்றி கூறுவதை காட்டிலும் அதை உணர்ந்தால் பிறவிப் பயனை அடையலாம். அனைத்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் ப்ராண சக்தியை மையப்படுத்தியே இருக்கிறது. ப்ராணாவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதை உணர முயற்சிப்பது. கண்ணில்லாதவன் ஒளியை வர்ணிப்பதாக சொல்லவேண்டும்.

இத்தகைய ப்ராணனை உணர என்ன செய்யவேண்டும்?


" ப்ராண சக்தியை உணர
ப்ரணவ சக்தியை உச்சரி
ப்ராணனும் ப்ரணவமும் உன்னுள் உறைய
ஓம்காரம் எனும் நாதத்தை உணர்ந்த
ஓம்கார நாதனாவாய்"

Wednesday, June 3, 2009

ப்ராண சக்தி

ப்ராண சக்தி
- உயிரின் மூலப்பொருள்.

பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.

ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.

இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும்.


ப்ராணனின் இந்த ஒருங்கிணைவை உணர்ந்தவர்கள் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். ப்ராணன் பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இணைகிறதோ அங்கு உயர் தோற்றம் நிகழும் என்பதை உணரவேண்டும். பூமியை போல பிற பகுதிகளிலும் உயிர்கள் இருக்கலாம். எனும் கேள்வியின் சாத்தியத்தை இது உறுதியாக்கும்.


நமது உடலில் ப்ராண சக்தி எப்பொழுது நிலை தவறுகிறதோ அப்பொழுது உடலில் நோய்களும், மனதில் அழுத்தமும் ஏற்படும். கர்ம வினையின் பதிவால் இயங்கும் நமது பிராண சக்திகள் உடல் செயலுக்கும் மனதின் செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் நமது வாழ்க்கை இயக்கங்கள் நடைபெறுகின்றன. நமது உடல் செயலுக்கு காரணமான ப்ராணசக்தி உடல் செயலால் நிலைத்தன்மை இழக்கும் என்பது உயிர் சக்தியின் ரகசியம். துப்பாகியிலிருந்து புறப்படும் குண்டு இலக்கை தாக்கும் முன்பு துப்பாக்கியில் ஓர் அதிர்வை ஏற்படுத்தும் அல்லவா? பூக்கூடையில் இருக்கும் பூவை எடுத்த பிறகும் அதில் பூவின் வாசம் இருக்கும் அல்லவா? அது போல ப்ராண சக்தியும் உடல் செயல் மூலம் கர்மாவை செயல்படுத்தும் முன்பு அந்த செயலின் அதிர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

பிறருக்கு நன்மை செய்யும் பொழுது அந்த செயல் நடைபெறும் முன்பு நன்மையான ஓர் அதிர்வு உங்களுக்குள் ஏற்படும். பிறருக்கு தீமை செய்யும்பொழுது முதலில் அதில் பாதிக்கப்படுவது நீங்கள் தான் என்பதை உணருங்கள். இதை ரிஷிகள் உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்தால் தான் பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதீர்கள் என்றனர்.

தீர்த்த யாத்திரை செல்வது பிறருக்கு தான தர்மம் செய்வது போன்றவை எவ்வாறு புண்ணியமாக நமக்கு கிடைக்கும் என கேட்பவர்கள் ப்ராண சக்தியின் அதிர்வை புரிந்துகொண்டால் போதுமானது. தீர்த்த யாத்திரை மற்றும் தான தர்மம் செய்யும் சமயம் ஏற்படும் ப்ராண அதிர்வு உடனடியாக உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். இந்த மேன்மையே புண்ணியம் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பிறருக்கு செய்யும் தீமையான செயல் ஏற்படுத்தும் ப்ராண அதிர்வுகள் பாவமான செயலாக கருதப்படுகிறது. இந்த ப்ராண சக்தியின் செயல்கள் அனைத்தும் பாவ - புண்ணிய, கர்ம வினை போன்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்த்தும்.


ப்ராண சக்தியின் அதிர்வுகள் பதிவுகளாக ஆன்மாவில் வடிவமைகிறது. ப்ராண சக்திகள் தனது இணைவுகளை விடுவிக்கும் பொழுது உடலை விட்டு ப்ராணன் வெளியேறுகிறது. ஆன்மா அதில் உண்டான அதிர்வுக்கு ஏற்ப மீண்டும் ஓர் வடிவை எடுக்கிறது. மீண்டும் ப்ராண சக்தியின் செயலும் உடல் செயல்களும் ஓர் தொடர் இயக்கமாக நிகழுகிறது.




பிரம்மாண்டமான படைப்பின் ரகசியத்தை எளிமையான வடிவிலும் உண்மை வடிவிலும் விளக்கியிருக்கிறேன். மேலும் பல ரகசியங்கள் இதில் இருக்கிறது. இயற்கையுடன் ஒன்றுபடும்பொழுது ப்ராண சக்தியின் விஸ்வரூபத்தை கண்டு பிரமிக்கலாம். வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.

ப்ராண சக்தி ஐந்து நிலையில் உடலில் இயங்குகிறது. தலை பகுதில் உதானன், மார்பு பகுதியில் ப்ராணன், வயிற்று பகுதியில் சமானன், மர்ம ஸ்தானம் மற்றும் இடுப்பு பகுதியில் அபானன் உடலின் அனைத்து பகுதியிலும் வியானன் எனவும் ப்ராண சக்தி இயங்குகிறது. ஒவ்வொரு ப்ராண பிரிவையும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்...

Monday, June 1, 2009

எழுத்துப் பிறவி

னது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். “திலி என்ன அவசரம் உனக்கு” என்றால் அருகில் அமர்ந்திருந்த அவனது அலுவலகத் தோழி சரண்யா.

இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான தேகம் கொண்ட இளைஞன் திலீபன். அவனைவிட இரண்டு வயது இளையவள் சரண்யா. இருவரிடமும் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. திலீபன் எங்கே சென்றாலும் அவனுடன் ஒட்டுக்கொண்டு வருவது சரோ என அழைக்கப்படும் சரண்யாவின் பழக்கங்களில் ஒன்று.


“சரோ உனக்கு தெரியாது என்னோட பிரச்சனை. தினமும் ராத்திரி தூங்க முடியறது இல்லை. காலையில ஆபீஸ் வந்தா பாஸ் ஓட பிரஷர். நான் நானாக இல்லை.”


“நீ சொல்லறது விசித்திரமா இருக்கு திலி. ஸ்டில் ஐ காண்ட் பிலீவ் இட்.”


“சொன்னால் புரியாது சரோ. கண்ணை மூடினால் எனக்கு போன ஜென்ம விஷயங்களா தெரியுது. எங்க அம்மா - எனக்கு குழந்தையா தெரியறாங்க. நம்ம பாஸ் போன ஜென்மத்தில் எனக்கு மனைவியா இருந்திருக்காரு. அவரை மனைவியா பார்க்கறதா இல்லை பாஸா பார்க்கறதானே குழப்பம். ஒரே நேரத்தில் ரெண்டு வாழ்க்கை வாழ முடியுமா சொல்லு?”


“திலி இந்த கம்யூட்டர் காலத்தில போன ஜென்மம் இந்த ஜென்மம் எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கியா?”


“எஸ்னு சொல்லறதை தவிர வேற விளக்கம் இல்லை சரோ. என்னை நம்பு. எனக்கே முழுசா ஒன்னும் தெரியல. முழுசா தெரிஞ்சுக்கத்தான் நானும் நீயும் அந்த சாமியாரோட ஆசிரமத்திற்கு போறோம்.”


பச்சை பட்டு விரித்த புல்வெளிகள் வரவேற்க அந்த ஆசிரமத்தில் நுழைந்தது கார்...நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்த ஆசிரமத்தின் நடுவே பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டிருந்தது.
கைகள் கூப்பிய நிலையில் பெரிய கட்-அவுட்டில் சாமியார் சிரித்துக்கொண்டிருந்தார்..

புத்த பிக்‌ஷு போல இருந்த ஒருவர் இன்முகத்துடன் கரம் குவித்து வரவேற்றார். அவரின் தோள்பட்டையில் “In Silence" என எழுதி இருந்தது. அனுமதி சீட்டை பார்த்ததும் மெல்ல பின்தொடருமாறு சைகை காட்டிவிட்டு முன்னே நடந்தார்.

பிரம்மாண்ட கதவுடன் கூடிய ஒரு கருங்கல் கட்டிடத்திற்கு அழைத்து சென்று ஒரு அறையில் அமர்த்தினார். சுவரில் வெண் தாடியுடன் ஆனந்த சிரிப்பில் சாமியாரின் தத்துவங்கள் எழுதிய புகைப்படங்கள் மாட்டப்படிருந்தது. சில மணித்துளிகள் இடைவெளியில் சிறிய சலசலப்பிற்கு இடையே படத்தில் இருந்தவர் ஒரு நீண்ட வெள்ளை தாடியுடன் தரையை உரசும் அங்கியுடன் உள்ளே வந்தார்.

இவர்கள் முன் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். திலீபனும் சரண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மெல்ல கண்களை திறந்து இருவரையும் ஆழமாகப் பார்த்துவிட்டு திலீபன் மேல் கண்களை நிலைபடுத்தினார்.

“தம்பி, போனஜென்ம விஷயங்களால மனசு ரொம்ப சஞ்சலப்படுதா?” என்றார்.


இருவரும் இதை சற்று எதிர்பார்க்கவில்லை. திலீபன் ஆமோதிப்பதை போல தலையாட்டினான்..


அவர் தொடர்ந்தார்...“தம்பி. எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் இருக்கு இல்லையா. எப்பவோ ஒரு செயலை செஞ்சுருக்கீங்க இப்ப அது எதிர் செயலை செய்யுது. உன்னோட போன ஜென்ம கர்மாதான் உன்னை இப்படி சங்கடப்படுத்தும். ஏதோ நிராசை இருக்கு... ” என்றார் அமைதியாக.


“ஒன்னும் புரியலை சாமி. போன ஜென்ம விஷயங்கள் அறைகுறையாத்தான் தெரியுது. ஒருத்தரை பார்த்தா அவங்களுக்கும் எனக்கு போன ஜென்ம பந்தம் என்னானு புரியுது. ஆனா மேற்கொண்டு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள நிகழ்காலத்திற்கு வந்துடறேன். எனக்கு இதிலிருந்து விடுதலைகொடுங்க. பல நாட்களா இதில் சிக்கி இருக்கேன்.”


“கவலைப்படாதீங்க. உங்களோட ஜென்மாந்திர பந்தம் என்னானு தெரிஞ்சுக்குங்க அதை பூர்த்தி செஞ்சா போதும். நான் உங்களுக்காக ப்ரார்த்தனை செய்யறேன். என் தகப்பன் இருக்கான் அவன் பார்த்துப்பான்”


பொருமை இழந்தவளாக வேறு திசையில் பார்த்தாள் சரண்யா..


“ஏன்னம்மா என்ன ஆச்சு”?


“சாமி.. இந்த விஞ்ஞான காலத்தில இதெல்லாம் நம்ப முடியல. திலிக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுது? இது போன ஜென்ம சிக்கல் மாதிரி தெரியல மனநிலையில் ஏதோ பிரச்சனையோனு சந்தேகம்.”


“விஞ்ஞான கண்ணோட்டத்தில் இதை எல்லாம் நம்ம முடியாதுமா... மீன் குஞ்சுக்கு யார் நீந்த கத்துக்கொடுத்தா? ஆட்டுக்குட்டி பிறந்தவுடனே துள்ளி ஓடுதே இது எப்படி? எந்த ஒரு பிறப்புக்கும் பிறந்த உடனே சில குணம் இருக்கும். இது எல்லாம் ஒரு ஜென்மத்தில் செஞ்சதை மீண்டும் செய்யுது. அது போல மனித பிறப்புக்கு எதுவும் இல்லை. காரணம் மனுஷன் விழிப்புணர்வோட பிறக்கும் ஜீவன். அவனுக்கு குணம் ஏற்பட்டா அவனால வாழமுடியாது. திலிபனுக்கு விழிப்புணர்வு நிலையில் அவனோட போன ஜென்ம சமஸ்காரம் தடுத்து இழுக்குது. அதனால அவனோட நிகழ்கால வாழ்க்கை பாதிக்குது..”


“சாமி திலீக்கு மட்டும் இது எப்படி தெரியுது? எனக்கு ஏன் தெரியல?”


“நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்னு பகவத்கீதையில் பகவான் சொல்றார். பாகவதத்தில ஒரு உபகதை இருக்கு. ஒரு முனிவர் காட்டில் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். கடைசி காலத்தில ஒரு மான் அவர்கிட்ட அடைக்கலம் ஆகிடுது. மானை பிரியமோட வளர்க்கிறார்.

இறக்கும் தருவாயில அந்த மானை நினைச்சுக்கிட்டே பிறக்கிறதால அவர் அடுத்த ஜென்மத்தில மானாவே பிறக்கிறார். இறக்கும் போது நம்மோட கடைசி எண்ணம் எதுவோ அதுவாவே அடுத்த பிறவி எடுப்போம். இதைத்தான் புராணங்களும் சொல்லுது. நீ மார்டனா வளர்ந்த பொண்ணு அதனால நம்பிக்கை இல்ல...உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா உங்க போன ஜென்மத்தை உங்களுக்கு காட்டறேன்”

தனக்குள் இருக்கும் பிரச்சனைக்கு விடையைத்தேடி ஒரு அமானுஷமான முயற்சிக்கு தயாரானான் திலீபன். சரண்யாவின் தயக்கத்தை பார்த்த திலீபன் கண்களால் கெஞ்சினான்.அவளின் மெளனம் சம்மதமானது.


“சரி சாமி. நாங்க ட்ரை பண்ணரோம்”


சாமியார் இருவரையும் அருகில் இருக்கும் தியான அறைக்கு கூட்டி சென்று கண்களை மூடி அமரவைத்தார்.. சில நிமிடங்கள் அமைதியாக கரைந்தது..

இருவரின் புருவ மத்தியில் தனது விரலால் மெல்ல அழுத்தினார் ..
பல எண்ணங்களால் சிதறி இருந்த அவர்களின் மனம் ஒரு ராட்டினம் போல சுழன்று ஒரு புள்ளியில் அடங்கியது.... அடங்கிய புள்ளி வெடித்து பல்வேறு காட்சிகளாக விரிவடைந்தது....

---------------------------------------------------------------------------

ன்ணா ஒங்களத்தான்... நான் மாடா மனுஷியா காட்டுகத்து கத்தறேன் ஒரு வார்த்த பதில் பேஷரேளா? வீட்டுக்கு வெளிய உங்க நாய் கத்தறது.... இங்கே நான் கத்தறேன் ....அவ்வளவுதான் வித்தியாசம்...எல்லாம் என்னோட தலைவிதி...”

“இப்போ என்னடி என்னை பண்ண சொல்றே?” . வீட்டுக்குள் வந்த நாய் அவன் கால்களை சுற்றி வளையவந்தது.

“இப்போ என்ன பண்ணனும் அத்தான் எல்லாமே பண்ணிட்டேளே.. நல்ல சர்க்கார் உத்தியோகம்னு சொல்லி உங்களுக்கு என்னை கொடுத்தா.. கல்யாணம் ஆன அடுத்த வாரமே...என் தோப்பனார் முகத்தில கரியை பூசினாப்போல ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேள். வீட்டுக்கு ஒரு பைசா கொடுக்க துப்பில்லை. கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு என் ப்ராணனை வாங்கறேள்.. உங்களை கல்யாணம் பண்ணின அஞ்சு வருஷத்தில இதோ இடுப்புல இருக்கே இது ஒன்னுதான் மிச்சம்... மாமனார் காசில சாப்பிடரோம்னு ஒரு தோஷமும் உங்களுக்கு தோனலை. போனமாசம் அவரையும் பகவான் அழைச்சுண்டுட்டான். விடிஞ்சா கடங்காரன் ஒவ்வொருத்தனா வந்து வாசல்ல நிக்கறான்...நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு”


நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு... என்ற கடைசி வார்த்தைகள் தீனதயாளின் காதுகளில் ரீங்காரமிட்டது...


பாதி புகைத்து அணைத்த சிகரெட்டை மீண்டும் எடுத்து பற்றவைத்தான்...


என்ன செய்ய...யுத்த நடக்கறது...பத்திரிகைகளுக்கு காகிதமே பிரிட்டீஷ் அரசாங்கம் ரேஷனில் தான் கொடுக்கறா... இந்த லக்‌ஷணத்தில் என் கதை வெளியிட பத்திரிகை முன் வந்து, பிறகு அவர்கள் சன்மானம் அனுப்பினால் குடும்ப்பத்தை ஓட்டனும். எத்தனை வருடம் தான் இந்த முயற்சியில் இருப்பது? நேற்றுகூட பத்திரிகைகளில் இருந்து கதைகள் திரும்ப வந்துடுத்து. இனி தபால் செலவுக்கு கூட பைசா இல்லை. கல்கி மாதிரி வாரனும்னு திலி என்றெல்லாம் பேரை மாத்தி வைச்சு பார்த்தாச்சு... பச்... என்னத்தை சொல்ல ஒரு மனுஷாள் மதிக்கறாளா? புலவன் வாழ்க்கை புலராதுனு சொல்லுவா அதுமாதிரிதான் இருக்கு..


ஒரு முடிவு எடுத்தவனாக...தனது மேஜையை மேல் தேடினான்... பேனா வைக்கும் பெட்டியில் ஐந்தணா இருந்தது. தனது சட்டையின் கைமடிப்பில் வைத்துக்கொண்டு கடைவீதிக்கு புறப்பட்டான். அவனது நாய் அவனை பின் தொடர்ந்தது..


கொஞ்சம் அரிசியும், வாசம் இல்லாத கெமிக்கல் விஷமும் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அரிசியை விட விஷம் விலை ஜாஸ்தியாக இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்துக்கொண்டான்.


பையை திண்ணையில் அமர்ந்திருந்தவள் முன் வைத்தான்.. “என்ன துரை அரிசியேல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேள்? தெவசத்துக்கு போனா இன்னும் கூட கிடைக்குமே.. சரி இன்னைக்கு கஞ்சியாவது கிடைக்கட்டும்..”


உலை கொதித்துகொண்டிருந்தது... தீனதயாளின் மனமும் தான். தனது குழந்தையை குளிப்பாட்டும் மனைவியை பார்த்தான்.. மனது மேலும் ரணமானது...மெல்ல நடந்து அடுப்புக்கு அருகில் சென்று விஷத்தை கலந்தான்...


எத்தனையோ கதைகள் எழுதி அதை வெளியிட முயற்சி செய்தும் ஒன்னும் பலன் இல்லை...இவளை போல வைர அட்டிகைக்கும் பட்டு சேலைக்குமா ஆசைப்பட்டு எழுதினேன்? சமூக கோவம்... இலக்கியத்தில இருக்கிற ஆசை.. நாலுபேரு என்னை ஒரு கதாசிரியன்னு சொல்லனும்.. இதை தவிர என்ன வேணும்?
சமூகத்தை திருத்த கதை எழுதனும்னு நினைச்சேன். சமூகமே என்னை புறக்கணிக்கும் போது இந்த சமூகத்தில ஏன் வாழனும்...

நங்... கஞ்சியை ஊற்றிய தட்டு இவன் முன் விழுந்தது.....“இந்தாங்கோ இதை குடிச்சுட்டு ஜம்முனு கதை எழுதுங்கோ..”


மனைவியும் குழந்தையும் கஞ்சியை குடிப்பதை பார்த்தான்... தனக்குள் எந்த சலனமும் ஏற்படாதது அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது...


அமுதத்தை குடிப்பது போல மெல்ல மெல்ல ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.... கண்கள் சொருக ஆரம்பித்தது... பார்வை இருண்டது..
கைகளில் இருந்து அந்த தட்டு தவறி கீழே விழுந்தது....வெட்டப்பட்ட காட்டு மரம் போல சரிந்தான்.

சிதறிய கஞ்சியை அவன் வளர்க்கும் நாய் சரோஜினி எனும் சரோ சுவைக்க துவங்கியது...

---------------------------------------------------------

“திலி என்ன ஆச்சிரியம் சண்டே ஆனா குளிக்காம சோம்பேறியா பெட்டுல படுத்திருப்பியே.. வாட் ஆர்யூ டூயிங் மேன்..”

“கதை எழுதறேன் சரோ”

“வாவ்.. என்ன இது. உலக மக்களே இங்கே பாருங்க... சாப்ட்வேர் ப்ரொபெஷனல் கதை எழுதறார்”


“சரோ எப்ப பார்த்தாலும் உனக்கு கிண்டல் தான். இண்டர்நெட்ல உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதை போட்டி வைச்சுருக்காங்க. அதில பார்டிசிபேட் பண்ண போறேன்”


“எனது போட்டியா... யூ ஆர் கிரேஸி திலி ? . முதல்ல எழுத கத்துக்கோ அப்பறம் போட்டிக்கு போகலாம்.”


“ இப்போதான் ஆரம்பிச்சுருக்கேன்.. நான் தான் ஏற்கனவே நிறைய எழுதி பார்த்திருக்கேனே..” என அவளை பார்த்து கண் சிமிட்டினான் திலீபன்.


“திலி...அப்போ நான் என்ன செய்ய எனக்கு போர் அடிக்கிதே..”


“உனக்கு வேணா பிஸ்கட் வாங்கிதறவா ?” என்ற திலீபனை விரட்ட தொடங்கினாள் சரண்யா...


மேஜை மேல்.. “தனது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். ..” என எழுதபட்ட காகிதம் காற்றில் படபடத்தது...


---------------
[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதை போட்டிக்காக எழுதபட்டது]

டிஸ்கி : ஸ்வாமி இது உங்களுக்கு தேவையா? நீங்க கதை எழுதி போட்டிக்கு எல்லாம் போலாமா? என கேட்பவர்களுக்கு விளக்கம் வரும் பதிவில். இப்போதைக்கு கதை எப்படி இருக்கு என்ற நடுநிலையான விமர்சனத்தை கூறவும்.