Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 11, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 6

உடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.

உடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.

எப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.

தினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.

சோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.

கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.

செருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா?

புகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.

ஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா?”
போதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”
மற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்பிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா?”
போதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”

இப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.

விரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...!

இப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது? இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.

இந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.

நாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா?

அதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.

அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.

பலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.

68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.


சபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.

தற்சமயம் நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன். கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள். என்னவென்று சொல்ல?

கட்டுகட்டுவது என்றால் என்ன?

சிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. :))

சபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்?

(சரணம் தொடரும்)

Tuesday, December 7, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 5

நம்மிடையே அனேகர் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் என தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். போலி சாமியார்கள் என பத்திரிகைகளில் பலர் எழுதுகிறார் அல்லவா? ஆனால் போலி பக்தர்கள் பற்றி யாரும் எழுதுவதில்லை. காரணம் பெரும்பான் மையானவர்கள் இத்தகையவர்களே. இவர்களை பற்றி சில கருத்துக்களை கூறினால் இவர்களை நீங்கள் அடையாளம் காண உதவும்.

கொல்லிமலைக்கு போயிருக்கேன், காளகஸ்திக்கு போயிருக்கேன், கைலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சரி இத்தனை கோவில் போனையே அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் கோவில் கோவிலா போனாரு என திருஞான சம்பந்தரை அசிங்கப்படுத்துவார்கள்.

தாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகவும் நினைத்துக்கொள்வார்கள். இன்னும் எளிமையாக சொன்னால், “ஸ்வாமி உங்களை விட நான் கடினமாக முயற்சிக்கிறேன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரலை?” என கேட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னவென்றால் எனக்கே வரலையே உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பதே பொருள்.

சில நேரங்களில் அவர்களின் கடுமையான ஆன்மீக பயிற்சி பற்றி பேசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுமையாக விரதம் இருக்கிறேன் என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காலையில் 4 செவ்வாழையும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா சொன்னீங்களே அது எப்போனு கேட்டால் இவர்களுக்கு கெட்ட கோவம் வரும் :)

பிரதோஷ விரதம் இருக்கிறேன் பேர்வழி என காலை மதியம் சாப்பிட மாட்டார்கள். மாலை 6 மணிக்கு தரிசனம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குள் சென்றார்கள் என்றால் வேறுயாருக்கும் உணவு கிடைக்காது. இதன் பெயர் பிரதோஷ விரதமாம்.

இப்படி விரதம் என்பதே தெரியாமல் உண்மையான விரதத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவர்கள்..! இப்படிபட்ட ஆட்கள் தான் நம்மில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபரிமலை விரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பதை கடந்து உங்களின் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் விரதமாகும். வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவ்விரதத்தை சரியான வழிமுறை அறிந்து பின்பற்றினால் நிச்சயம் உங்களின் வாழ்க்கை அமைப்பில் மாறுதல் இருக்கும்.

பலருக்கு இந்த விரத முறையின் அடிப்படை தெரியாமல் தாங்கள் வகுத்து கொண்டதே விரத முறை என இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானது போல விரதத்தின் அடிப்படையை வளைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் விரதங்களின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் நீர்த்துப்போய்விடுகிறது.

சாஸ்தா விரதத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.

விரதம் 48 நாட்கள் இருக்க வேண்டும். பலர் இதை 45 நாள் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பதே ஒரு மண்டலம். மண்டலத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து, தினமும் அணியும் உடை களைந்து கருப்பு அல்லது நீல வண்ண உடை அணிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. உடை, உணவு, பழக்க முறை என மூன்று தளங்களில் விரதம் அனுசரிக்கப்பட வேண்டும்.

உடை அணிதல் :

கருப்பு மற்றும் நீல வண்ணம் தனிமையை குறிக்கும். ஒதுங்கி இருத்தல் அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் சனி என்ற கிரகம் சாஸ்தாவை குறிப்பதால் அக்கிரகத்தின் நிறமும், செயலும் சாஸ்தாவின் தன்மையை ஒத்து இருக்கிறது.

உடை தளர்வான உடையாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஜோடி வேட்டிகள் போதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும் போர்த்தி இருக்க வேண்டும். மற்றவை அடுத்த முறை பயன்படுத்த வைத்திருக்க வேண்டும். சட்டை, பனியன் போன்ற தைத்த உடைகள் அணியக்கூடாது. உடை விஷயம் விரதகாலத்திலும், சபரிமலைக்கு செல்லும் பொழுதும் பின்பற்ற வேண்டும்.

பலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உடை கட்டுப்பாடு உண்டு அதனால் சின்ன துண்டை மட்டும் கழுத்தை சுற்றி போட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகளை வளைப்பது என்கிறேன்.

உங்களுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். உடை என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தடையானால் ஆன்மீக பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உங்களின் சுயநலத்திற்கு அல்ல.

ராணுவம் துவங்கி மென்பொருள் துறை வரை பலர் சபரிமலைக்கு விரதம் இருக்கும் பொழுது உடை விஷயத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆனால் ராணுவம் முதல் மென்பொருள் துறைவரை இருக்கும் பிற மத சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஒரு சீக்கியரை உன் முடியை கத்தரித்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார்? நம்மை போல முடியை மழித்துவிட்டு, அவர்கள் சொல்லும் உடையில் சென்று வேலை செய்வாரா என யோசிக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் சீக்கியர் அப்படி இருக்க போகிறார். இதை உங்களின் கம்பெனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்களை அனுமதிக்காதா? இது யாரின் தவறு?

விரதத்தை கடைபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம் இருக்க வேண்டும்? என் கணவரும் கச்சேரிக்கு போனார் என்ற கதையாக நானும் சபரிமலை விரதம் இருந்தேன் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது தானே?

உணவு முறை :

காலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு என இரண்டு வேளைகள் உணவு உண்ண வேண்டும். உணவு எளிய உணவாகவும், குறைந்த அளவும் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துவைத்த ஆடை உடுத்த வேண்டும்.

நாம் உண்ணும் உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்த உணவாக இருக்க வேண்டும்.

வாழை இலை அல்லது நமக்கு என ஒரு தட்டு வைத்து அதில் மட்டுமே உண்ண வேண்டும். சாப்பாடு மேஜை பயன்படுத்தாமல் நிலத்தில் பாய் அல்லது சிறிய துணி விரித்து அமர்ந்து உண்ண வேண்டும்.
விரத காலத்தில் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது அன்னதானமோ, பிட்ஷை எடுத்தோ உணவு உண்டு இருக்க வேண்டும். வீட்டில் மட்டும் உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.

காலை அல்லது இரவு ஏதேனும் ஒரு வேளை மட்டும் பழங்கள் அல்லது பச்சை காய்கறிகள் உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,வெல்லம் மற்றும் பழம் நைவத்தியம் செய்துவிட்டு அதை மட்டும் உண்ணலாம்.

உணவுமுறை விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வதும், அன்னதானம் செய்பவர்களுக்கு கைங்கரியம் செய்வதும் நல்லது.

பழக்க வழக்கங்களில் விரதம் கடைபிடிப்பது என்பது என்ன என பார்ப்போம்..

(சரணம் தொடரும்)


Tuesday, November 30, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 4


ஒரு பேராசை பிடித்த மனிதன் இருந்தான். தனக்கு எல்லாமும் வேண்டும், அனைத்தும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கடவுளை நோக்கி தவம் இருந்தால் அவர் நம் முன் தோன்றி அனைத்தையும் வழங்குவார் என யாரோ சொன்னதை கேட்டு தவம் இருக்க துவங்கினான். வருடங்கள் ஓடியது தன்னை சுற்றி புதர்களும் செடிகளும் மண்டி புற்று வளரும் அளவுக்கு

கடுமையான தவம் இருந்தான். பத்து வருடங்கள் கழித்து கடவுள் அவன் முன் தோன்றினார்.

“உன் தவத்தை மெச்சினேன்.அப்பனே, கண்களை திற. உனக்கு என்ன வரம் வேண்டும் ? ” என்றார் கடவுள்.

“வரம் எல்லாம் இருக்கட்டும் கடவுளே, முதலில் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கொடுங்கள். நான் கடுமையாக தவம் இருந்தும் நீங்கள் வர இத்தனை காலம் ஆனதே இது ஏன்?” என்றான் பேராசைக்காரன்.

“மானிடா, பூலோகத்திற்கும் தேவ லோகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பூலோகத்தில் ஒரு கோடி என்பது எங்களுக்கு ஒரு ரூபாய் போன்றது. பூலோகத்தில் உங்களுக்கு ஒரு வருடம் என்பது தேவ லோகத்தில் ஒரு நாள் போன்றது. அப்படி பார்த்தால் நான் பத்து நாட்களில் உன் முன் தோன்றி இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்..”

(பேராசைக்காரன் மனதில் கணக்கு போட்டான்) "ஓ அப்படியா? பூலோகத்தில் ஒரு கோடி என்பது உங்களுக்கு ஒரு ரூபாயா? ”

“கடவுளே என் மேல் கருணை செய்து தேவ லோக பணத்தில் ஒரு கோடி குடுத்து அருளவேண்டும்” என்றான்.

“ஒரு கோடி தேவலோக பணம் தானே ...? தந்தேன். ஆனால் அது தேவலோகத்தின் பத்து வருடம் கழித்து உனக்கு கிடைக்கும்..” என கூறி கடவுள் மறைந்தார்.

மேற்கண்ட கதை பேராசை பெரு நஷ்டம் என்ற கருத்தில் சொல்லப்பட்டாலும், இதில் ஒரு உண்மை புதைந்திருக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் பூமியில் 24 மணி நேரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிறோம் அல்லவா? சூரிய குடும்ப என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னை தானே சுற்றினால் நமக்கு ஒரு நாள்.

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் தானே? வானவியல் (astronomy) இக்கருத்தை ஒத்துக்கொள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என கூறுகிறார்கள்.

சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒரு நாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி நேரம் பிரிப்பதை போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம். இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிறோம்.

நம் நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அது போல உத்திராயணம் என்ற தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.

மகர ராசியில் சூரியன் நுழைந்து உத்திராயண காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்த மலை என்ற இடத்தில் தெரியும் ஜோதி , அதிசயம் அற்புதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மகர சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும் குறிக்குமே தவிர மலையில் தெரியும் ஜோதியை அல்ல.

மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமே...!

பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!

திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுமே. நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என நினைத்தீர்கள் என்றால் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!

திருப்பதி அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்தியை கிளப்பிவிடும் நபர்கள் தான் இது போன்ற வதந்தியையும் துவக்கி இருக்க வேண்டும். ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே அல்ல...!

திருவாபரண பெட்டி வரும் சமயம் கருடன் வட்டமிடும் அது அதிசயம் அல்லவா? ஒரு பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூட ‘நிஜம்’ என காட்டினார்களே என கேட்டால் உங்களுக்கு விளக்கும் அளவு என்னிடம் பதில் இல்லை. காரணம் மிருகங்களுக்கு நம்மை விட சக்தி மிகு பகுதிகளை உணரும் நுட்பமான அறிவு உண்டு. மனிதன் தன் மதி நுட்பத்தை இதில் உயர்த்தாத காரணத்தால் காண்பது எல்லாம் அதிசயம் என நம்புகிறான்.

48 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனை காண செல்லும் பொழுது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!

சன்மார்க்க சங்கத்தை நிறுவிய வள்ளலார் தன் உடலை மறைய செய்தார் என அதிசயப்படுவதை விட அவர் உயர்த்திய அக்னி தினமும் பலருக்கு உணவை வழங்குகிறது என்பது அதிசயம் அல்லவா? 150 வருடத்திற்கு முன் இட்ட அக்னி இன்றும் பலரின் வயிற்றில் இருக்கும் அக்னியை அணைக்கிறது. அவர் ஏற்றிய விளக்கு இன்றும் ஞான ஒளியை கொடுக்கிறது. இன்னும் சில

நூறு வருடங்களில் இவரையும் கடவுளாக்கி சடங்குக்குள் அடைப்பார்கள் என்பதில் எள்ளமுனை அளவும் சந்தேகம் இல்லை. ( தற்சமயமே இதன் சுவடுகள் தெரிகிறது..!)

யோகிகள் இறைவனை தரிசித்தவர்கள். அவர்களை இறைவனாக்குவதை விட அவர்களை யோகியாகவே வணங்கினால் நீங்களும் இறைவனை தரிசிக்க முடியும். அதை விடுத்து அவர்களை இறைவனாக்கினால் நீங்கள் இருளில் சிக்க நேரிடும்.

நம்முள் தூய்மை இல்லை என்றால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை நம்புவோம். சபரி மலைக்கு செல்ல விரத முறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அம்முறைகளில் இருந்தாலே அனைத்து விதமான தூய்மையும் ஏற்படும்.

ஆனால் தற்காலத்தில் எத்தனை பேர் முழுமையாக விரதம் இருக்கிறார்கள்? சாமிக்கு ‘தனி கிளாஸ்’ என்பது தானே தற்கால விரதம் இருக்கும் முறை?

வெகுவாக அழிந்துவரும் சபரிமலை விரத முறையை மீண்டும் ஒரு முறை விளக்கமாக கூறுகிறேன் கேளுங்கள்.

(சரணம் தொடரும்)

Thursday, November 25, 2010

சபரிமலை - சில உண்மைகள்..! பகுதி 3


சில விஷயங்களை நாமாக துவங்கி பேச அசெளகரியமாக இருக்கும். ஆனால் யாராவது கேள்வியாக கேட்டால் அவர்களின் பெயரால் அவ்விஷயத்தை பேசுவோம். அப்படிப்பட்ட நிலையில் நான் சபரிமலையின் பெயரால் சில விஷயத்தை பேசப்போகிறேன்.

ஆன்மீகம் பெண்களை ஒதுக்குகிறது என பலருக்கு எண்ணம் உண்டு. முக்கியமாக பெண்களுக்கே இத்தகைய எண்ணம் அதிகமாக உண்டு. உண்மையில் இக்கருத்து முற்றிலும் தவறானது. மதங்கள் மாந்தர்களை ஒதுக்கிறது என்றால் நான் முற்றிலும் சரி என்பேன். மதம் என்பதையும் ஆன்மீகம் என்பதையும் பலர் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். அதன் எதிரொலிப்பே இத்தகைய கருத்து.

பெண்ணின் கருப்பை மாதத்திற்கு ஒரு முறை தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் தாய்மை நிறைந்த செயலை இவர்கள் ‘மாதவிலக்கு’ என அழைக்கிறார்கள். இதற்கு மாத ஓய்வு என்று கூறுங்கள் ஏன் விலக்கு என முற்றிலும் விலக்க வேண்டும்? மதத்தை விலக்குங்கள் தவறில்லை, ஆனால் ஏன் மாத விலக்கு என பெண்களை விலக்குகிறீர்கள் என்பதே என் கேள்வி..!

உங்களுக்கு முடி வளர்கிறது, நகம் வளர்கிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்கிறீர்கள் இத்தகைய காலத்தில் நீங்கள் ஆன்மீக வழிபாடு செய்வீர்களா? ஆம் என்றால் மாத ஓய்வு அன்றும் செய்யலாம். கோவிலுக்கு செல்லலாமா என கேட்காதீர்கள், கோவிலில் மட்டும் ஆன்மீகம் இல்லை. கோவிலில் மட்டும் இறைவனும் இல்லை.

சளி பிடித்திருக்கும் சமயம் நாசியில் கபம் ஒழுகினாலும் கைக்குட்டையுடன் இறைவனை நினைப்பது தவறென்றால் மாத ஓய்வில் பெண்கள் இறைப்பணியில் ஈடுபடுவதும் தவறே..!

யோக முறைகள் என்றும் ஆண் பெண் என எதையும் பிரித்து பார்ப்பது அல்ல. வேறுபாடு இல்லாமல் இணைந்திருப்பது என்பதே யோகம். சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமய கேரள அரசும் கோர்ட்டில் பெண்கள் செல்ல அனுமதி வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்பதே உண்மை. ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் இருக்கும் பெண்களே அனுமதி மறுக்கப்படுகிறது.

குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?

யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.

கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?

இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?

கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் அபாணா என்ற ப்ராணனுக்கானது. அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது. இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள் தனம். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உரிமை கேட்பதற்கு சமம்.

இக்காரணத்தை தவிர காட்டில் மிருகம் இரத்த வாசனை உணர்ந்து வந்து தாக்கும் என்பதெல்லாம் ஏதோ ஒரு ராக்கெட் விஞ்ஞானி வெளியிட்ட புரளி என்பதை உணருங்கள். அந்தகாலத்திலிருந்தே பெண்கள் சபரிமலை சென்றதற்கான சான்றுகள் உண்டு. இன்றும் கூட கருப்பை அறுவை சிகிச்சை நடந்துவிட்டது என்ற சான்றிதழ் இருந்தால் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் புரியாமல் சென்று பாதிக்கப்பட கூடாது என்பதே இந்த கட்டுப்பாட்டின் நோக்கம்.

சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இதையே நியதியாக்கினார் அந்த யோகி. ஆனால் தற்சமயம் இது மூடப் பழக்கமாகிவிட்டது.

சபரிமலை என்றாலே ஐயப்பன் தான். இறைவனே அவர்தான் என நம்பும் இவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்ததா என யோசியுங்கள் நான் முன்பு சொன்ன வரிகள் புரியும்.

இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது, இது இந்து கோவில் என நம் ஆட்கள் அறியாமையை வளர்க்கிறார்கள்.

ஓகே சாமி இது புரிஞ்சுது.. அந்த மகர ஜோதி எப்படி சாமி?

அதுவா.. ஹி ஹி ஹி..

(சரணம் தொடரும்)

Tuesday, November 23, 2010

சபரிமலை - சில உண்மைகள்..! பகுதி 2

யோகிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை
யோகமே அவர்களை வெளிப்படுத்துகிறது


சாஸ்தா என்பது இறைநிலை அம்சங்களில் ஒன்று. 32 சாஸ்தாக்கள் உண்டு என்றும் இவை தவிர ஆயிரமாயிரம் சாஸ்தாக்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். இவர்கள் எதற்கு இத்தனை எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என கேள்வி எழும். இவர்களின் முக்கிய பணி சனாதன தர்மத்தை காப்பது. அதனால் இவர்களுக்கு ‘தர்மசாஸ்தா’ என்று பெயர்.

பிரம்ம சாஸ்தா என்ற சாஸ்தா நிலை.
பழனி கோவில் சுவர் ஓவியம்

சனாதன தர்மம் என்றால் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்டுவிடாதீர்கள்..! என் வாய் குறைந்தபட்சம் பல மணிநேரத்திற்கு மூடாமல் இதை பற்றி விளக்கும். எளிமையாக கூறவேண்டுமானால் அனைத்து உயிர்களையும் சமமாக பாவித்து அவை இறைநிலைக்கு உயர்த்தும் பணி சனாதன தர்மம் விளக்கலாம். மீண்டும் கூறுகிறேன் இதுவே முழுமையான விளக்கம் அல்ல சார்பு விளக்கம் மட்டுமே.

சனாதன தர்மத்தை காப்பவர்கள் தர்ம சாஸ்தா என்றால் இப்பணியை அனேக ஆன்மீகவாதிகள் செய்கிறார்களே அல்லவா? அப்படியானல் அவர்கள் எல்லாம் யார்? ஆன்மீக நிலை கொண்டவர்களுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கலாச்சார நாகரீக மக்கள் விதவிதமான பெயர் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

சிங்கத்தை கேசரி, லயன் என எப்படி கூறினாலும் சிங்கம், சிங்கம் தானே? அது போல யோகிகளுக்கு நாம் எப்படி பெயர் கொடுத்தாலும் யோக நிலையில் இருப்பவர்கள் என்றும் யோகிகளே..! சித்தர்கள், ரிஷிகள் என பல்வேறு பெயர்களில் நம் ஆன்மீகவாதிகளை அழைப்பது போல கேரள கரையோரம் யோகிகளுக்கு பெயர் சாஸ்தா.

பிறப்பு இறப்பு அற்ற நிலையில் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் சாஸ்தா..!

அப்படி யோக நிலையில் இருந்து என்றும் மனிதனின் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டுபவரே தர்மசாஸ்தா என்ற ஐயப்பன்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சைவ வைணவ துவேஷங்கள் பெருகி இருந்தது. பெரிய புராணத்தில் இதன் சுவடுகள் அதிகம் இருந்ததை காணலாம். மதமாற்றம் மற்றும் மத துவேஷம் அதிகம் இருந்த காலகட்டத்தில் மக்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் தங்கள் மதம் உயர்ந்தது என்ற ஆணவ போக்கில் இருந்தார்கள்.

அக்காலத்தில் சைவ வைணவ துவேஷத்தை போக்கவும் அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்றும் மனிதநேயமும் இறை பக்தியும் முக்கியமானது என்றும் கூறவே ஐயப்பன் என்ற யோகி அவதரித்தார்...!

பாண்டிய மன்னர்கள் சமண மதத்தை தழுவினார்கள் என்றும் பிறகு நாயன்மார்கள் அவர்களை மீண்டும் சைவத்திற்கு கொண்டு வந்தார்கள் என்ற பெரிய புராணத்திற்கு ஏற்ப, ஒரு பாண்டிய மன்னரின் வாரிசாக இருந்தவரே இந்த யோகி. தனது ஆன்மீக உயர்நிலையால் குறைந்த வயதிலேயே அனைவரையும் தர்மத்தில் பாதையில் செலுத்தினார்.

வடநாட்டில் யோகிகளை ‘பாபா’ என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை என அர்த்தம். இது நம் ஊரிலும் அவ்வழக்கம் உண்டு. அய்யன், அப்பன் என தமிழ்நாட்டினரும் கேரளநாட்டினரும் அந்த யோகியை அழைப்பதால் அவர் அய்யப்பன் ஆனார்..!

சித்தர்கள்,யோகிகள் கொடூரமான விலங்குகளை தங்கள் வசமாக்கி அவற்றை சாதுவாக நடமாட விடுவார்கள். அது போல புலியை தன் வசமாக்கி வைத்திருந்தவர் ஐய்யப்பன். இது சித்தர்களுக்கு சாதாரணமான விஷயம். இதற்கு பழனியில் இருந்த புலிப்பாணி சித்தர் ஒரு உதாரணம்.




மே
லே உள்ள வீடியோவை பாருங்கள், தாய்லாந்தில் தற்சமயம் ஒரு ஐயப்பன் இருக்கிறார். எதிர்காலத்தில் அவருக்கும் நம் ஆட்கள் கதை சொல்லுவார்கள்..!

சபரி என்றால் தூய்மையான பரிசுத்தமான என அர்த்தம். இராமாயண கதையில் வரும் சபரி என்ற பாத்திரமும் பரிசுத்தமான பக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் இக்கருத்தை உணரலாம். சபரி பீடம் என்ற பரிசுத்தமான இடத்தில் இருக்கும் யோகி தனது அருளால் அனைவரையும் சனாதன தர்மத்தில் திளைக்க செய்தார். பரிசுத்தமான அம்மலை சபரி மலை என அழைக்கப்படுகிறது. தன்னை சிவ,விஷ்ணுவின் குழந்தை என்று சொல்லி ஜாதி துவேஷம் விலக்கியும், வாவரின் தோழன் என்று சொல்லி மத துவேஷம் விலக்கியும் மக்களை அறியாமையிலிருந்து யோக வழிக்கு திருப்பினார்.

மக்கள் துறவு என்பதன் அருமையை ஒரு ஷணமேனும் உணர வேண்டும் என்பதற்கு சில நியதிகளை வகுத்தி அதன் படி அவர்கள் வந்தால் மட்டுமே தன்னை காண முடியும் என நிலையை உருவாக்கினார். இதனால் மக்கள் சம்சாரத்தில் இருந்தாலும் ஆன்மீக உயர்நிலையை உணர ஓர் வாய்ப்பு ஏற்பட்டது.

நாளாக நாளாக இக்கருத்துக்களை உணராமல் மக்கள் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை புகுத்தி சபரி மலை சபரி என்ற தூய தன்மையை இழந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

என்ன தான் சொல்லுங்கள் ஸ்வாமி.. சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க மறுப்பது பெரும் குற்றம் தான் என்கிறார்கள் பெண்ணீயவாதிகள். ஜாதி மத சமதர்மத்தை போதித்த அய்யப்பன் பெண்களை வர விடாமல் தடுப்பாரா? இதில் ஏதோ காரணம் இருக்குமே என தோன்றுகிறதா? யோசியுங்கள்..

(சரணம் தொடரும்)

Friday, November 19, 2010

சபரிமலை - சில உண்மைகள்..!

|| சுவாமியே சரணம் ஐயப்பா ||

ஆன்மீகவாழ்க்கையில் இருப்பது சில நேரங்களில் அசெளகரியத்தை கொடுக்கும். அதில் ஒன்று மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு பின் இருக்கும் உண்மை வெளிப்படுத்துவதாகும்.

உங்கள் நண்பர் வீட்டுக்கு வருகிறார். உங்களின் சிறு வயது மகள் விளையாடி கொண்டிருக்கிறாள். உங்கள் நண்பர் முன் உங்களின் குழந்தையை பற்றி பெருமையடிக்க ஆசைப்படுவீர்கள். “புஜ்ஜிமா, நீ பண்ணின பெயிண்டிங்கை அங்கிளுக்கு காமி” என்பீர்கள். உங்கள் குழந்தையும் விளையாட்டை விட்டுவிட்டு ஒரு காகிதத்தில் வரைந்த பெயிண்டிங்கை கொண்டு வருவாள்.

உங்கள் நண்பர் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு, “சோ..ச்வீட், அருமையா பெயிண்ட் பண்ணிருக்கே. இந்த கலர் எல்லாம் எப்படிடா பெயிண்ட் பண்ணினே?” என்பார். உங்கள் செல்ல மகள் அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துவிட்டு, “அப்பாதான் பெயிண்ட் பண்ணினா.. எனக்கு தெரியாது” என உண்மையை போட்டு உடைக்கும். அப்பொழுது உங்கள் நண்பர் பார்க்கும் பார்வையை எப்படி சந்திப்பீர்கள் ?

அப்படிபட்ட நிலைதான் சபரிமலையை பற்றி என்னிடம் கேட்டால் நான் உணர்வேன்.


முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை தெய்வீகமான இடம். இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். உங்கள் ஆன்மீக வாழ்க்கை உயர கண்டிப்பாக சபரிமலையும் அதன் கிரீடமாக இருக்கும் சபரி பீடமும் உதவும். இதில் எனக்கு ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சபரிமலையை பற்றி பலர் கூறும் அடிப்படை விஷயங்கள் முற்றிலும் தவறானது. இவற்றை விளக்குவதே எனது நோக்கம்.

முக்கியமாக சபரிமலை அமைந்தவிதம் குறித்த தல புராணம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பதிலிருந்து துவங்குவோம்.

ஐயப்பன் பிறப்பு பற்றிய குறிப்பு முற்றிலும் தவறானது. மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த குழந்தை என்றும் காட்டில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் கூறுவார்கள். இக்கருத்து இந்த தலபுராணத்தை தவிர நம் கலாச்சாரத்தில் இருக்கும் எந்த பகுதியிலும் இல்லை. நம் நாட்டின் சிறப்பே புராணம் மற்றும் இதிகாசங்கள் அனைத்தும் காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்று போலவே இருக்கும்.

உதாரணமாக கந்த புராணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது. முருகன் என்ற பெயருக்கு பதில் கார்த்திக் என்பார்களே ஒழிய கந்தனின் பிறப்பு பற்றிய கருத்து நம் நாட்டின் எந்த பகுதியிலும் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஐய்யப்பனின் பிறப்பு பற்றிய கருத்து தென்னகத்தில் மட்டுமே உண்டு. வடநாட்டில் தற்சமயம் பிரபலம் சபரிமலை பெரும்பாலும் தெரியும். காரணம் நம்மவர்கள் ஐய்யப்பன் கோவிலை கட்டி இருக்கிறார்கள்.

காஷ்மீர் அல்லது அஸ்ஸாம் பகுதிக்கு சென்றால் அவர்கள் “ஐய்யோ அப்பா” என தனி தனியே சொல்லுவார்கள். அவர்களுக்கு சபரிமலையும் தெரியாது மஹாவிஷ்னுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையும் தெரியாது.

இக்கதையை திரித்து ஓரின சேர்க்கைக்கு சாட்சி தேடும் மடையர் கூட்டமும் நம்மிடையே உண்டு.பால் கடல் கடையும் பொழுது மோகினி ரூபம் கொண்ட விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த மகன் எப்படி இஸ்லாமியரான வாவருடன் தொடர்பு கொண்டார்? இஸ்லாம் தோன்றி 1500 சொச்ச வருடங்கள் தானே ஆகிறது?

பால்கடல் கடைந்தது என்பது பல லட்சம் வருட கணக்கு அல்லவா வருகிறது? அப்படியே பல லட்சம் வருடம் இருந்ததாக கொண்டாலும் மணிகண்டன் என்ற நிலையில் 12 வருடம் தானே வாழ்ததாக தல புராணம் கூறுகிறது? பாண்டிய மன்னனுக்கு மகனாக வாழ்ந்தார் என்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னேயே பாண்டிய மன்னர்கள் இருந்தார்களா?

இத்தனை கேள்விகளும் எழாமல் வருடா வருடம் சபரி மலை செல்லுபவர்களை என்ன செய்யலாம்?

சபரிமலையில் இருக்கும் இறை சக்தி உண்மையென்றால் அது எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன? கொஞ்சம் பொறுத்திருங்கள்.

(சரணம் தொடரும்)

Tuesday, November 9, 2010

சத் - சித் - ஆனந்தம்

பத்தி எழுத்து (column writingg) என்பது இலக்கிய வழக்கில் மிகவும் பிரசித்தி. எதை பத்தியும் எழுத தெரியாதவர்கள் பத்தி எழுத வருவார்கள் என வேடிக்கையாக பலர் கூறுவார்கள். சுவையான செய்திகளை துணுக்காக இல்லாமல் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் வழங்குவதில் எழுத்தாளனுடைய ஆளுமை பத்தி எழுத்தில் வெளிப்படும்.

தமிழ் எழுத்துலகில் சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி என பலர் வார இதழ்களில் இது போன்ற பத்தி எழுத்துக்களை எழுதினார்கள். சில புகழ்பெற்ற எழுத்தாளர் தன் வலை பக்கத்தில் “பழைய பஞ்சாங்கம்” என்ற பெயரில் பத்தி எழுத்து எழுதுவது உங்களுக்கு தெரிந்ததே..! :))

சுபவரம் என்ற ஆன்மீக மாத இதழில் ஆன்மீகத்தை பற்றி எழுதி கொண்டிருந்த நான், ஆன்மீக பத்தி எழுத துவங்கிவிட்டேன். சத்-சித்-ஆனந்தம் என்ற தலைப்பில் மூன்று முக்கியமான கருத்துக்களை எழுதுகிறேன். சென்ற மாதத்திலிருந்து இந்த பகுதி வெளியிடப்படுகிறது. உங்களின் பார்வைக்காக அந்த கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள். நான் பத்தி எழுத லாயக்கா என உங்கள் விமர்சனம் மூலம் அறிந்து கொள்கிறேன்.

-------------------------------------------
சத் - சித் - ஆனந்தம்

இறைவனின் முழுமையான சொரூபம் எது என்ற கேள்விக்கு சத் சித் ஆனந்த ரூபம் என்பார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சத் சித் ஆனந்தம் என்றால் விளக்கம் தெரியும் ?

உண்மையில் சத் சித் ஆனந்தம் என்பதை இணைத்து சச்சிதானந்தம் என தமிழ் வழக்கில் கூறுவார்கள். பலருக்கு இயற்பெயர் கூட இவ்வாறு இருப்பதுண்டு. இக்கருத்தை விளக்க வேதத்தையும், வேதாந்தத்தையும் மேற்கோள் காட்டி பேசினால் மணிக்கணக்காக பேசலாம். முழுமையான இந்த சொல்லை விளக்க ஆயுள் போதாது. ஏன் தெரியுமா?

இறைவன் என்ற பிரம்மாண்டத்தை சில மணித்துளிகளில் விளக்க முடியுமா?

இது திருப்பதி லட்டுவை ஒரே வாயில் எறும்பு சாப்பிட முயற்சிக்கும் செயல் அல்லவா?அந்த எறும்பு ஒரே கவளமாக சாப்பிட முடியாவிட்டாலும் ஒவ்வொரு பருக்காக சுவைத்து உண்ண முடியும். அப்படி இனி வரும் இதழ்களில் சத்- சித் - ஆனந்தம் என்ற தெய்வீக ப்ரசாதத்தை சுவைத்து உங்கள் வாழ்க்கையில் ஒளிமையமாக்கி கொள்ளுங்கள்.

சத்
---

லிங்க ரூபம் என்பது பலருக்கு சிவனின் திருமேனி, இறைவனின் உருவம். ஆனால் வெளிநாட்டினரும், தொல்லியல் நிபுணர்களும் இது இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறது என்கிறார்கள். வெளிப்படையாக சொல்வதென்றால் பலர் லிங்கத்தை பார்த்து கேலி செய்வதும் உண்டு. உண்மையில் லிங்க ரூபம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக கேட்பதற்கோ பயம். காரணம் நாம் விரும்பி வணங்கும் இறைவனின் உருவை பற்றி கேள்வி கேட்டு, பிறகு ஆமாம் இது இனப்பெருக்க உறுப்பைத்தான் குறிக்கிறது என சொல்லிவிட்டார்களானால் என்ன செய்ய?
மருந்தை சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என சொன்ன கதையாக லிங்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது ஞாபகம் வருமே? அப்பறம் எங்கே சாமி கும்பிடுவது என எண்ணுபவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
கவனியுங்கள். லிங்க உருவம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிப்பதில்லை. லிங்கம் என்ற வார்த்தை ஆணின் உறுப்பை குறிக்க தமிழில் பயன்படுத்தப்படுகிறதே தவிர இதற்கும் சிவ லிங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அப்படியானால் லிங்கம் என்பது என்ன?
பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடைப்படை உருவமும் லிங்கம் என்கிற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழை துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதைவடிவம் என எந்த பொருளின் அடிப்படை கோள வடிவமாக இருக்கும்.

மனித உடலின் அடிப்படையாக ‘செல்’ இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும், அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே. இவ்வாறு கோளவடிவில் இருக்கும் இறையாற்றல் கொண்ட லிங்க வடிவத்திற்கு பாண லிங்கம் என்பார்கள். சமஸ்கிருதத்தில் பாணம் என்றால் குண்டு அல்லது புல்லட் என பெயர். பாணம் தொடுப்பது,அம்பு எய்வது என கேள்விபட்டிருப்பீர்கள். பாண லிங்கம் என்பது பார்க்க கோழி முட்டையை போல நீண்டு முனைகள் குவிந்து இருக்கும்.

ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இத்தகைய லிங்க ரூபங்களை காணலாம்.

அனேக கோவில்களில் இருக்கும் லிங்கம் பாண லிங்க ரூபமாக இல்லாமல் முழுமையான மூன்று பிரிவுகளுடன் இருக்கிறது. லிங்கம், ஆவுடையார் மற்றும் லிங்க பீடம் என இவற்றை விளக்கலாம்.

உருவமற்ற ப்ரணவ மந்திரமான ஓம் என்ற ஓசையின் உருவ நிலையே லிங்கம் என்கிறார் திருமூலர். ஓம் என்ற ப்ரணவ மந்திரம் அ-உ-ம என்ற மூன்று ஓசைகளால் ஆனது. அ என்பது லிங்க பீடத்தையும், உ என்பது ஆவுடையாரையும், மஎன்பது லிங்கத்தையும் குறிக்கிறது. லிங்கம் மூம்மூர்த்திகள் என்ற பிரம்ம விஷ்ணு மற்றும் மஹேஷ்வரனின் ரூபம் என விளக்குகிறார். இவ்விளக்கம் கொண்ட திருமந்திரத்தை பார்ப்போமா?

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
- திருமந்திரம் - 1752

இனி லிங்கத்தை பற்றி யாராவது கேட்டால் உண்மையை விளக்குவீர்கள் தானே?
----
சித்
---
மிகவும் பிரசித்திபெற்ற கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. வரிசையில் இறைவனை வணங்க அனைவரும் போட்டா போட்டி நடத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவு அவசரம் இல்லை என்பதால் மெதுவாக ஒதுங்கி கூட்டம் குறையும் வரை காத்திருக்க துவங்கினேன்.

ப்ரார்த்தனை முடித்துவிட்டு வந்த சிறுவன் ஒருவன் கையில் இருந்த குங்கும பிரசாதத்தை தூணில் கொட்டினான். அவனை கூப்பிட்டு, “தம்பி ஏன் இப்படி செய்கிறாய்?” என கேட்டேன். “சாமி கும்பிட்டுட்டு எல்லாரும் இதைத்தான் செஞ்சாங்க அத்தான் நானும் செஞ்சேன்” என்றான்.

அவனின் பதில் சுளீர் என என்னுள் தைத்தது. தவறு அவனுடையது அல்ல என உணர்ந்து, “தம்பி உங்க பள்ளியில் தூய்மை பற்றி எதுவும் சொல்லித்தரலையா? உங்க வீட்டில் சாப்பிட்டது போக மீதம் இருந்தால் சுவர்,ஜன்னலில் கொட்டி வைப்பாயா? கோவில் என்பது நம் வீட்டை விட மேலான விஷயம் அல்லவா?” என கேட்டேன்.

ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல என்னை மலங்க மலங்க பார்த்து விட்டு ஓடிவிட்டான். கூட்டம் குறைய துவங்கியதும் நானும் தரிசனத்திற்கு சென்றுவிட்டேன். பிறகு பிரகாரம் சுற்றி வெளியே வரும் பொழுது கையில் சிறிய காகிதத்தையும், துணியையும் வைத்துக்கொண்டு தூண் மற்றும் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்தான் அந்த சிறுவன்....!

இந்த காலத்தில் பெரியவர்கள் தான் சித்தம் கலங்கி இருக்கிறார்கள்.

சிறுவர்களும், இளைஞர்களும் கூறும் வழியில் கூறினால் ஆக்கப்பூர்வமாக இருக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். இனிமேல் நாமும் கோவில் ப்ரசாதங்களை கண்ட இடங்களில் போடாமல் இருப்போமா?

ஆனந்தம்
-----------

மனிதன் ஒரு விசித்திரமான உயிரினம். ஏன் இப்படி கூறுகிறேன் தெரியுமா? மிருகங்கள் உணவை தேடும், பறவைகள் வாழிடத்தை தேடும் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் தன்னிடம் இல்லாததை தேடுகிறது.

ஆனால் மனிதன் மட்டுமே தன்னிடம் இருப்பதையே தேடுவான். வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

ஆனந்தம் என்பது நமக்குள் எப்பொழுதும் இருந்தாலும் நாம் அதை தேடி ஓடுவோம். ஆணவம் என்பது ஆனந்தத்தை மறைக்கும் ஒரு திரையாக நம்மில் இருப்பதால் நம்மில் இருக்கும் ஆனந்தம் வெளியே எங்கோ இருப்பதாக நினைக்க வைத்து மனம் நம்மை ஏமாற்றிவிடுகிறது. நம்மில்

முழுமையாக ஆனந்தம் இல்லாத பொழுது ஆனந்தம் குறையும் இடத்தில் ஆணவம் நிறைந்து கொள்ளுகிறது.

சிலர் இதை புரிந்துகொள்ளாமல் இறைவனிடம் ஏதே ஒன்றை கொடுத்து அதற்கு பலனாக மற்றொன்றை பெற நினைப்பார்கள். சிதறு தேங்காய் உடைக்கிறேன், அபிஷேகம் செய்கிறேன் என துவங்கி ஆடு மாடு பலி இடுவது வரை செய்கிறார்கள்.

ஆசிரியர் ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்ததும் உங்களுக்கு காணிக்கையாக A முதல் Z வரை எழுத்துக்களை கொடுக்கிறேன் என ஒரு மாணவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிபட்ட செயல் தான் இறைவன் படைத்ததையே இறைவனுக்கு வழங்குவதும் என பலருக்கு புரிவதில்லை.

ஒரு புகழ் பெற்ற ஞானியை பார்க்க அந்த ஊரின் செல்வந்தர் வந்திருந்தார். அதிக நீர் பொங்கி ஓடும் ஆற்றங்கரை அருகே இருக்கும் சிறிய பாறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் ஞானி. அவரின் முன் ஒரு பட்டுத்துணியை விரித்து இரண்டு வைர கற்களை வைத்துவிட்டு விழுந்து வணங்கினார் செல்வந்தர்.
மெல்ல கண்களை திறந்த ஞானி என்ன வேண்டும் என்பது போல பார்த்தார். உங்களுக்கு காணிக்கையாக விலை உயர்ந்த வைரங்களை கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு ஞானத்தை போதியுங்கள் என்றார்.

கண்களை மூடு என்பது போல சைகை செய்தார் ஞானி. கண்கள் மூடியபடி சில நிமிஷங்கள் கரைந்தது. செல்வந்தர் சிறிது நேரம் கழித்து கண்கள் மெல்ல திறந்து பார்த்தால் ஞானியின் முன் ஒரே ஒரு வைரம் மட்டுமே இருந்தது.

“ஞான குருவே இரண்டு வைரம் உங்களுக்கு கொடுத்தேன். ஒரு வைரம் காணவில்லையே எங்கே?” என கேட்டார் செல்வந்தர்.

ஞானியோ சைகையால் ஆற்றில் வீசி விட்டேன் என காண்பித்தார். அதிர்ச்சியடைந்த செல்வந்தர், “என்ன ஆற்றில் வீசிவிட்டீர்களா எங்கே எறிந்தீர்கள்?” என்றார்.

பதட்டமடையாமல் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் மையத்தில் வீசி, “இங்கே தான்” என சுட்டிகாட்டினார்.

இந்த செல்வந்தர் பிரம்ம ஞானத்தை இரண்டு வைரக்கல்லில் விலை பேசியது போல நாமும் நம் வாழ்க்கையில் அடைய வேண்டிய பெரிய விஷயங்களுக்கு சில்லறைத்தனமான பொருட்களை கடவுளுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் நமக்கு அருள்வதையே தொழிலாக கொண்டவன் என்றும் நாம் இறைவனிடத்தில் பெருவதையே வாழ்வின் அடைப்படையாக கொண்டவர்கள் என்பதை உணர்ந்தோம் என்றால் என்றும் ஆனந்தம் தானே?
--------------------
- நன்றி சுபவரம் அக்டோபர் 2010