Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 30, 2011

விரைவில்.....!

திருமந்திரத்தை மக்களிடம் சேர்க்க எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகள் மூலமாகவும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். டிவிட்டரும், குறுஞ்செய்தி மட்டுமே பாக்கி..!

இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமந்திரங்கள் தொகுப்பாக ஒளி/ஒலி வடிவில் வெளியிட இருக்கிறோம். தித்திக்கும் திருமந்திரம் எனும் வீடியோவின் முன்னோட்டம் இதோ.



தித்திக்கும் திருமந்திர வீடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதேனும் தொலைக்காட்சி வழியாக தினமும் காலை ஆறு மணிக்கு உங்கள் வீடு வரை வந்து தொல்லை கொடுக்க வேண்டி வரும். :)

Monday, January 17, 2011

பழைய பஞ்சாங்கம் 17-ஜனவரி-2011

உண்மையாகவே இது பழைய பஞ்சாங்கம் தான். காரணம் கடந்த மூன்று மாதமாக எழுதாமல் அனைத்தையும் சேர்த்து இன்று எழுத போகிறேன். உங்கள் நேரம் அப்படி..!

மீனாச்சிபுரம்

வாகனத்தில் அந்த ஊருக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் ஊர் வந்து விட்டதாக சொன்னார். எனக்கு வந்ததே கோபம்,

“டிரைவர் என்னய்யா என்னை பார்த்தா காதில கடுக்கன் போட்ட ஆளா தெரியுதா? ஒரு போஸ்டரும் இல்லை பேனரும் இல்லை, இங்க என்னை இறக்கிவிட்டு மதுரைய்னு ஏமாத்த பார்க்கிரையா?” என்றேன். “நாங்க எல்லாம் மாறிட்டோமப்பு” என்றார் டிரைவர்.

மதுரையில் ஜோதிட வகுப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் சென்றிருந்தேன். மதுரை மக்களுக்கு ஜோதிட ஆர்வம் அதிகம் என்பது அவரிகளின் தொலைபேசி விசாரிப்பு மூலம் தெரிந்தது. 30 நபர்களுக்கான வகுப்பில் முன்பதிவு செய்தவர்கள் எழுபது நபர்களுக்கும் அதிகம். பிறகு அதில் தேர்ந்தெடுத்து முப்பது நபர்களுக்கு அனுமதித்தோம். இது தவிர வகுப்பு அன்று முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பலர் என மதுரை அதகளமான வரவேற்பை ஜோதிடத்திற்கு அளித்தது.

மதுரை வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்

மதுரையில் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்கியமாக சீனா ஐயாவின் வரவேற்பும், தருமி ஐயாவுடனான கலந்துரையாடலும், ஸ்ரீயுடனான பேச்சும் மிக சுவாரசியம். என்ன பேசினோம் என தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குங்கள்.
-----

ஸ்ரீசக்ர புரி

புனித பயணமாக ஸ்ரீசக்ரபுரிக்கு சென்றோம். எளிய குழு மற்றும் ஆர்வமிகு மக்கள் என பயணம் மிக சுவாரசியமாக இருந்தது. ஆன்மீக ஆற்றல் மிக்க இடங்களையும், குகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். மூன்று நாள் பயணமாக சென்ற எங்களுக்கு நான்காம் நாளாக பருவத மலைக்கு செல்லும் ஆசி கிடைத்தது. மூன்று நாள் பயணத்தை நான்கு நாட்களாக்கி அற்புத மலையான பருவத மலைக்கு சென்றோம். அனைவரும் தரிசிக்க வேண்டிய இடம் பருவதமலை. பயப்படாதீர்கள் கண்டிப்பாக இது பற்றி தொடர் எழுத மாட்டேன் :)
ஸ்ரீசக்ரபுரி பயணத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர்
--------

சபரிமலை

சபரிமலை தொடர் பலரை சென்று அடைந்தது மகிழ்ச்சி. பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்னை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அரசியல் மற்றும் தொலைக்காட்சி துறையில் பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டது அதிச்சியான விஷயம் கூட. விஜய் தொலைகாட்சியில் கடுகளவு பேட்டி, சில பத்திரிகையில் அழைப்பு என சபரிமலை அதிர்வுகளை உண்டாக்கியது என்பதை உணர்ந்தேன்.

அதே போல சிலர் “ஸ்வாமி நீங்க ஓவரா கண்டிஷன் சொல்றீங்க. இந்த வழி பின்பற்றினால் தான் சபரிமலை போகனும்னா, ஒரு பயலும் போக முடியாது” என்றனர். நீங்கள் விண்வெளி வீரராக இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் செல்லுவதை போன்றது நியதியை கடைபிடிக்க முடியாமல் விரதம் இருப்பதும் என விளக்கினேன்.

இவர்கள் இப்படி செல்வதால் அங்கே விபத்துக்கள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 நபர்கள் சபரிமலை பயணத்தில் இறந்து விடுகிறார்கள் என அங்கே இருக்கும் மருத்துவ அதிகாரி கூறுகிறார். இந்தவருடம் கொஞ்சம் அதிகம். இவர்களை எல்லாம் ஐயப்பன் காப்பாற்றமாட்டாரா என நாத்திகம் கேட்கிறார்கள் சிலர். குடித்து விட்டு ப்ரேக் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீஸ் காப்பாற்ற மாட்டார்களா என்பதை போன்றதேஇக்கேள்வி...!

இங்கே துறவியாக ‘இறந்து’ உண்டால் அங்கே மீண்டும் இறக்க தேவையில்லையே..!

----------

புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு இலக்கியவாதியாக ஃபார்ம் ஆயிட்டாலே இது போன்ற நிகழ்வுக்கு செல்ல வேண்டி இருக்கிறது :). புத்தக கண்காட்சி பற்றி தனி பதிவே போடலாம். அங்கே நண்பர்களையும் பல பதிவர்களையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. பிரபல இலக்கிய செம்மல்களையும் சந்தித்தேன்.

அங்கே அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்ட வண்ணம் செல்லும் பொழுது மாணவர்களுக்கான அறிவியல் கருவிகள் விற்கும் கடையை கண்டேன். ஒரு திசைக்காட்டியை வாங்கினேன். என் அருகே இருந்த பதிவர், “சாமி இது எதுக்கு வாங்கறீங்க ?” என கேட்டார். “அப்பத்தானே கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு என கண்டுபிடிக்க முடியும்” என்றேன். அதுவரை என்னுடன் வந்தவர் அவசர வேலை என சென்றுவிட்டார். :)

கோவை திரும்பியதும் தான் நான் நன்றாக ஏமாற்றப்பட்டது தெரிந்தது. திசைக்காட்டியில் முள் வடக்கு திசையை மட்டுமே காட்டுகிறது, மற்ற ஏழு திசைக்கு முள் நகர்வதே இல்லை..!

Tuesday, January 11, 2011

சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்வாமி ஓம்கார்..!

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 12ஆம் தேதி புதன் கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி க்குள் வரலாம் என இருக்கிறேன். சென்னையை சேர்ந்த நண்பர்கள் சந்திக்க நினைத்தால் புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம்.

புத்தக கண்காட்சி பற்றி சுப்பாண்டியுடன் நடந்த பேட்டி..

எந்த ஸ்டாலில் இருப்பீர்கள்? ஸ்டால் எண் என்ன?

அங்கே போண்டா ஸ்டால் இருப்பதாக கேள்வி. அதில் அனேகமாக இருப்பேன்.
சொந்தமாக ஸ்டால் இல்லாதவருக்கு கேண்டீனே சொந்த ஸ்டால்

உங்கள் புத்தகம் இங்கே கிடைக்குமா?

புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடக்கும்பொழுதே நீங்கள் ஒரு உண்மையை அறிய வேண்டும். என் ஒரு புத்தகமும் அங்கே கிடைக்காது..!

அப்படியானால் புத்தகத்தில் கையெழுத்து இட்டு தரமாட்டீர்களா?

தாராளமாக, நீங்கள் எந்த புத்தகம் வாங்கி வந்து என்னிடம் கொடுத்தாலும் கையெழுத்து போட்டு தருகிறேன். உங்களின் கோரிக்கையை என்றும் மறுக்கமாட்டேன்

மிக்க மகிழ்ச்சி. சிலர் புத்தக கண்காட்சியில் கையெழுத்து போட ஆயிரம் ரூபாய் பேனா வைத்திருக்கிறார்கள். நீங்களும் வைத்திருக்கிறீர்களா?

நான் பேனாவின் மதிப்பை விட என் கையெழுத்து மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புபவன். அதனால் பேனா 2 ரூபாயாக இருந்தாலும் என் கையெழுத்து மதிப்பு மிக்கது.

டிஸ்கி : இந்த பேட்டியில் கேள்வி கேட்டவன் நான். பதில் சொன்னவர் சுப்பாண்டி என்பது தனியாக சொல்ல வேண்டியது இல்லை :))

Sunday, January 9, 2011

சபரிமலை -சில உண்மைகள் - பகுதி 8

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

- மஹாகவி சுப்ரமணிய பாரதி

மேற்கண்ட பாடலுக்கு தமிழ் இலக்கியத்தில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டாலும், பக்தி ரீதியாக உணர வேண்டுமாயின் இவ்வாறு விளக்கலாம்.

கிருஷ்ணரின் கருமை நிறம் தன்னுள் நிறைந்திருப்பதால் காக்கையை பார்க்கும் பொழுது எல்லாம் கிருஷ்ணரின் கருமை நிறம் உணர்ந்திருக்கிறார் பாரதியார். மரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ராமனின் பச்சை திருமேனி அவருக்கு தெரிகிறது. கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணரின் குழலிசையாகவும், சூரிய வம்சத்தில் தோன்றிய ராமன் அக்னி ரூபமாக இருப்பதால் தீயை தீண்டும்பொழுது எல்லாம் ஸ்ரீராமனை தீண்டியது போல இருக்கிறது என்கிறார்.

கிருஷ்ண பக்தியும் ராம பக்தியும் மேலோங்கும் பொழுது பார்க்கும் கேட்கும் விஷயங்கள் எல்லாம் இறை ரூபமாகவே பாரதியாருக்கு இருந்ததை போல சபரிமலை விரதம் இருந்து பக்திமயத்தில் இருப்பவர்கள் தம்மையும் தம்மை சுற்றி உள்ள உயிரையும் இறைவனாக பாவிக்க துவங்குவார்கள். கவனியுங்கள் பாவிக்க துவங்குவார்கள், பாவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இந்த பாவனை இயற்கையாக வரவேண்டுமே தவிர கட்டாயத்தில் வரக்கூடாது.

சபரிமலை விரதம் இருப்பவரகள் தம்மையும், பிறரையும் ‘ஸ்வாமி’ என அழைக்கவேண்டும். பிறர் தன்னை ஸ்வாமி என அழைப்பதை எதிர்பார்க்க கூடாது. அனைத்திலும் இறைநிலை உணர அனைத்தையும் இறைவனாக அழைக்கும் பொழுது நம்முள் பக்தியும், ஆன்மீக உயர்வும் ஏற்படும். சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை ஸ்வாமி என அழைப்பதால் நாளடைவில் பிறரும் அவர்களை ஸ்வாமி என அழைக்கிறார்கள்.

உண்மையில் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவரை நீங்கள் ஸ்வாமி என அழைக்க வேண்டும் என்பதில்லை. விரதம் இருப்பவர் தான் அனைவரையும் ஸ்வாமி என அழைக்க வேண்டும்..!

தற்சமயத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டவுன் தன் சகோதரர்களே தன்னை ஸ்வாமி என அழைக்கவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். துறவு நிலையில் இருப்பவர்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க செய்யும் முக்கிய யுக்தி தன் பெயரையும் உடல் அடையாளத்தையும் மறைப்பது. அதில் ஒன்றுதான் துறவு பெற்றவர்கள் பெயரை மாற்றம் செய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே சபரிமலை செல்பவர்கள் தங்களை ஸ்வாமி என அழைத்துக்கொள்வதும் பிறரை அவ்வாறு அழைப்பதும் என்பதை உணர வேண்டும்.

மேற்கண்ட வரிகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று புரிந்திருப்பீர்கள். சாமி என்று அழைப்பார்கள் என கூறவில்லை. ஸ்வாமி என்பார்கள் என்கிறேன். ஸ்வாமி என உச்சரிக்கும் பொழுது உங்களின் சுவாசத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் உணரலாம். உங்களின் வாயின் அடிப்பகுதியில் இருந்து இந்த சப்தம் எழும். ஆனால் சாமி என்றீர்கள் ஆனால் உங்கள் உதட்டளவில் மட்டுமே இந்த சப்தம் வரும்.

சபரிமலை செல்லும் சிலர் பிறரை கூப்பிடும் செயலில் கொடுமையை பார்த்தீர்களானால் புரியும்.. “சாமீ...சாமீ...சமே..” என அவர்கள் கூப்பிடும் பொழுது நம் பாக்கெட்டில் சில்லரை தேட தோன்றும்..!

சபரிமலை விரதம் என்பது துறவின் ஒரு துளி என்பதால் துறவு என்பதை ஏற்க குரு என்பவர் அவசியம். சுயமாக துறவு என்பதை ஏற்றால் வெகுநாளுக்கு தாக்கு பிடிக்காது. மனம் கூறும் வழிகளை எல்லாம் பின்பற்ற தோன்றும். குரு இருந்தால் அவர் வகுத்த பாதையில் அடையாளங்களை தொலைத்து உயிருடன் பிணமாக வாழ்வதே துறவு. அத்தகைய துறவை சபரிமலை விரதம் என்ற பெயரில் குறைந்த காலத்திற்கு கடைப்பிடிக்கும் பொழுது குரு அவசியம்.

அதனாலேயே குரு ஸ்வாமி ஒருவர் நமக்கு மாலை அணிவித்து - அவரே விரதகாலத்தில் வழி நடத்தி - இருமுடியும் கட்ட வைத்து - சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நியதி வகுத்தார்கள். இன்று பலர் குரு ஸ்வாமியின் உதவியின்றியே தானாக செல்லுகிறார்கள். இங்கே சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பை நதியிலிருந்து கையை பிடித்து கூட்டி செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் வழி நடத்த என சொல்லவில்லை. ஆன்மீக விஷயங்களை பற்றி கூறியும், சபரி சாஸ்தாவின் மேன்மையை பற்றி கூறியும் நம் சபரிமலை பயணத்தை ஆன்மீகமாக மாற்றும் குருஸ்வாமி அவசியம்.

சித்தர்கள் எத்தனை பேர் என்றால் பதினெட்டு என்பார்கள். உண்மையில் பதினென் சித்தர்கள் என்பது 18 நபர்களை குறிப்பதில்லை. சித்தர்கள் எண்ணிக்கையில்லாமல் அனேகர் இருக்கிறார்கள். பதினெட்டு என்பது சித்தர்களின் சித்த நிலையை குறிக்கும். நம் ஐம்பொறிகளையும், அதன் செயல்களையும் இணைத்தால் பத்து. அவற்றை கடந்தால் அஷ்டமா சித்தி கிடைக்கும் என்பதையே 18 என்ற எண்ணிக்கை காண்பிக்கிறது.

யோக சித்திகள் என்பதே சபரிமலையில் 18 படிகளாக இருக்கிறது. இத்தொடரில் முன்பு குறிப்பிட்டது போல பதினெட்டாம் படியை கடக்க விரதம் இருந்து இருமுடியுடன் செல்ல வேண்டும். ஆனால் இறைவனை காண இருமுடி தேவை இல்லை. இக்கருத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு யோக சித்தி வேண்டுமானால் அதற்கு கடுமையான விரதம் மற்றும் பயிற்சிகள் அவசியம்.

ஆனால் இறைவனை அடைய பக்தி மட்டுமே போதுமானது. யோகசித்தியுடன் இறைவனை அடைவது மிகவும் உன்னதமானது. இந்த அற்புத கருத்தை கூறிப்பிடுவது தான் சபரிபீடம் என்னும் ஆன்மீக ஸ்தலத்தின் நோக்கம்.

எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் என்ற சிகரம் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை அடைய மனிதன் தன் அறியாமையால் வேறு பாதைகளுக்கு செல்வதால் சிகரத்தை அடைய முடியாமல் வீணாகிறார்கள். சபரிமலையும் தன்னகத்தே ஆற்றலை கொண்டிருந்தாலும், தங்களின் அறியாமையாலும், சோம்பேறித்தனத்தாலும் மற்றும் ஒழுக்கமின்மையாலும் ஆற்றலை பெறமுடியாமல் எத்தனையோ பேர் வீணாகிறார்கள்.

இத்தனை நாள் உங்களிடம் சில உண்மைகளை பகிர்ந்து கொண்டேன். இக்கருத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்து உண்மையை அறியுங்கள். பிறகு நீங்கள் சபரிமலை செல்லும் பொழுதும் உங்களின் நண்பர்கள் செல்லும் பொழுதும் இக்கருத்தை விளக்கி பயன்பெறுங்கள்.

சபரிமலையில் எத்தனையோ விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருந்தாலும் முக்கியமாக சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யோக சாஸ்தாவின் அருள்மழை அனைவரின் மேலும் பொழியட்டும்.

ஸ்வாமியே சரணம்

Saturday, January 1, 2011

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 7

சபரிமலை விரதம் இருப்பது துறவு நிலையின் சின்ன சேம்பிள் என்றேன் அல்லவா? அப்படிப்பட்ட துறவு நிலையை பலர் புரிந்து கொண்ட விதம் மிக தவறாக உள்ளது.

துறவின் அடிப்படையே எளிமை. குறைவான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது. அதிக பணம் மற்றும் பணம் மூலம் கிடைக்கும் சுகபோகங்களை விடுவது என்பது மிக அவசியம்.

ஆனால் நடைமுறையில் சபரிமலை செல்லும் அனேகரிடம் எளிமை கிலோ என்ன விலை என கேட்க வேண்டி இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் வாகனம் துவங்கி அவர்களின் உணவு முறை வரை அனைத்திலும் ஆடம்பரம். உடை கூட மூன்றுக்கு மேல் இருக்க கூடாது என விரதம் இருப்பதே சாஸ்தா விரதம்.

ஆனால் கட்டுநிறை என்ற பெயரில் அவர்களின் ஆடம்பர திருவிழா எங்கும் நடைபெறுகிறது. அது போக அன்னதானம் என்ற பெயரில் எளிய உணவு அளிக்காமல், ஏதோ நட்சத்திர ஹோட்டலின் மெனுவை போட்டு தாங்கள் பெரிய ஆடம்பர பிரியர்கள் என்ற ஆணவத்தையும் காட்டுகிறார்கள்.

உண்மையில் கட்டுகட்டி செல்லும் பொழுது அதில் தேங்காய்களும் அதில் நெய் நிறைத்து எடுத்து செல்லுவது போன்ற நிகழ்வுகள் எதற்காக?

சபரிமலை கட்டுகட்டி செல்லுவதில் எடுத்து செல்லும் அனேக பொருட்கள் உலர் பழ வகையை சார்ந்தது. சபரி மலை முன்பு மிகவும் காடு சார்ந்த இடமாக இருப்பதால் சபரிமலைக்கு செல்லுபவர்கள் எத்தனை நாட்கள் காடுகளில் இருந்தாலும் உணவு தேவையை சமாளிக்கவே உலர் பழவகைகளை( Dry Fruits) கட்டுகட்டும் பொழுது அதில் இணைக்கிறார்கள்.

காடு அல்லது மலைப்பயணத்தில் செல்லும் பொழுது உலர் பழவகைகளை எடுத்து சென்றால் எடை குறைவாகவும் அதே நேரம் அதிக நாட்கள் வைத்து உண்ணக்கூடிய வகையிலும் அமையும்.நெய், தேன் ஆகியவை மிகவும் முக்கிய பொருளாக ஆயுர்வேத மருத்துவத்திலும், பூஜை பொருட்களிலும் இருப்பதற்கு காரணம், இப்பொருட்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

அரிசி, தேங்காய், உலர் பழங்கள், நெல் பொரி,நெய் மற்றும் தேன் ஆகியவை பள்ளிக்கட்டில் சேர்ப்பதற்கு காட்டுவழி பயண முறைகளே காரணம். நாம் நடுவழியில் மாட்டிக்கொண்டாலும் இப்பொருட்களை உண்டு பலநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் இவற்றை தூக்கி பல கிலோமீட்டர் நடப்பதில் சிரமமும் இருக்காது.

இவ்விஷயங்கள் அனைத்தும் பெருவழி பயணம் செல்லுபவர்களுக்கே பொருந்தும். பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கே இட்லி தோசை சாப்பிட்டு உடல் வளையாமல் 4 கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்கு எதற்கு உலர் பழங்கள்?

4 கிலோமீட்டரில் காட்டில் தொலைந்தாலும் அங்கே ஏகப்பட்ட கடைகள் உணவு வழங்குவதற்கு இருக்கிறதே? இன்னும் ஏன் முட்டாள்தனமாக கட்டு கட்டுகிறேன் என அனைத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுவது? எத்தனை பொருட்களை கொண்டு சென்றாலும் சபரிமலையில் நெய்யை மட்டுமே அபிஷேகப்பொருள் எனும் பொழுது நாம் ஏன் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்?

சபரி பீடம் எனும் சாஸ்தா கோவில் இருக்கும் இடம் வரை மசால் தோசை கிடைக்க இவர்கள் இன்னும் கட்டுக்கட்டி செல்லுவதை பார்த்தால் எத்தனை முட்டாள் தனமாக இவர்கள் செல்லுகிறார்கள் என்பதை உணரலாம். கேரளாவில் இருந்து சபரிமலை வருபவர்கள் சின்ன துண்டில் ஒரு தேங்காயை முடிந்துகொண்டு வருவதை சபரிமலை சென்றவர்கள் பார்த்திருக்கலாம். மிக எளிமையாக வருவார்கள். ஆனால் தமிழகம் மற்றும் பிற ஊரிலிருந்து வரும் ஆட்கள் ஒரு சின்ன தேங்காய் மண்டியை தலையில் சுமந்து வருவார்கள்.

அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ நெய்யை ஒரு இருமுடி துணியில் கட்டி எடுத்து சென்று அபிஷேகம் செய்து வருவது சரியான புத்திசாலி பக்தனுக்கு அழகு.

இவர்கள் செய்யும் செயல் எப்படி இருக்கிறது என்றால் வேற்றுகிரகத்திற்கு செல்லும் பொழுது ஆக்ஸிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விண்வெளி வீரர்கள் செல்லுகிறார்கள், அந்த கிரகத்தில் பூமியை போல ஆக்ஸிஜன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகும் சிலிண்டரை கட்டிக்கொண்டு செல்லலாமா? நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன? நெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நிலையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.

பால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.

இக்கருத்தை உணர்ந்து நெய் கொண்டு அபிஷேகம் செய்பவர்கள் விரைவில் தாங்களே முக்தி எனும் நெய்யாகிவிடுவார்கள் அன்றோ?

அது எல்லாம் சரி... சபரிமலை இந்த இருக்கு இதற்கு செல்ல குருசாமி அவசியமா? அது என்ன குருசாமி? மாலை போட்டவர்களை எல்லாம் சாமி சாமி என சொல்ல வேண்டும் என கட்டளை வேறு..

நேற்று வரை பொய் சொல்லி கெடுதல் செய்து திரிந்துகொண்டு இருந்தவன் எல்லாம் இன்று மாலை போட்ட காரணத்தால் அவனை சாமி என கூப்பிட வேண்டுமா? என்ன கொடுமை இது?

(சரணம் தொடரும்)