Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 10, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 6

ஏன் காரில் பயணிக்கிறீர்கள் அங்கே ரயில் விமானம் எதுவும் இல்லையா என பலர் கேட்டிருந்தார்கள். ரயில் பயணங்கள் இந்தியாவை போல உலகில் வேறு எங்கும்  கிடையாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஜண்டினாவின் மக்கள் தொகை காரணமாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவும் அர்ஜண்டினா அரசு ரயில் சேவையை 1980ல் நிறுத்திவிட்டது. மேலும் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் விமான சேவை குறைவு. எந்த ஊருக்கும் தலைநகரை தொடாமல் விமானத்தில் பயணிக்க முடியாது. உதாரணமாக நீங்கள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமானால், சென்னை-டெல்லி சென்று அங்கிருந்து டெல்லி-பெங்களூரு செல்ல வேண்டும். அனைத்து நகரின் விமான சேவையும் பியோனிஸ் ஏரிஸ் தலைநகரை  மையம் கொண்டே இருக்கிறது.

இப்படி பல இடியாப்ப சிக்கலின் தீர்வாகவே எங்கள் கார் பயணம் துவங்கியது.

காரின் கிலோமீட்டர் காட்டும் கருவியின் இறுதி எண்களில் பூஜ்ஜியங்கள் கடக்க கடக்க...வெளியே சூழலும் மாறத் துவங்கியது. சுற்றியும் சமவெளி...கண்களுக்கு உயிரினமே காணக்கிடைக்காத சமவெளி. எங்கள் சாலை நீளமாக பல கிலோமீட்டரை ஒரே காட்சியாக காட்டிக்கொண்டிருந்தது. காரின் இன்ஜின் சப்தத்தை தவிர வேறு சப்தங்கள் இல்லை...!

வெளியே மட்டுமல்ல என் மனதின் உள்ளேயும் நிசப்தம் கூடி இருந்தது. மெல்ல என் ஆணவம் தன் தலையை சிலிர்ப்பி எழுந்து அமர்ந்தது.

ஆன்மீக வளம் மிக்க இந்தியாவிலிருந்து ஆன்மீகமே இல்லாத இந்த பூமியில் ஆன்மீகத்தை பரப்ப வந்திருக்கிறேன். இந்த மக்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ என சொல்லி அந்த ஆணவம் என் தலையில் ஏறி ஆடத் துவங்கியது. 

இறைவனுக்கும் எனக்குமான ஊடல்களில் எப்பொழுதும் பகடையாவது இந்த ஆணவம் தான். என்னை நற்பணிகளில் ஈடுபத்துபவர் அவரே..அதன் பலனை உணர்ந்து என்னை ஆணவமாக்கி உணர செய்பவரும் அவரே. பிறகு என் ஆணவத்தை பெரிய சுத்தி கொண்டு அடித்து தகர்ப்பவரும் அவரே...!


  “என்னை நன்றாக படைத்தனன்” -  தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என சொன்ன திருமூலரை விடவா ஆணவம் வந்துவுடப்போகிறது? இருந்தாலும் விஷம் என்பது ஒரு துளி போதுமே?

இப்படி என்னை பற்றி நானே பீற்றிக்கொண்டு இருக்கும் சமயம் 800 கிலோமீட்டர் கடந்து விட்டிருந்தேன்.

மலைகளும் பனிசிகரங்களும் தெரியத் துவங்கின, சூரியன் மறைந்து இருள் சூழ துவங்கியது. “ஸ்வாமி, உலகின் இரண்டாவது பெரிய சிகரம் நோக்கி செல்லுகிறோம். அதற்கு முன் இங்கே மலை அடிவாரத்தில் என் நண்பர் இருக்கிறார். அவர் வீட்டில் இன்று இரவு தங்கி நாளை பயணம் செய்யலாமா?” என ராம தாஸி கேட்டார்.


“அதனால் என்ன பேஷாக தங்கிவிடலாம். அவருக்கு ஆன்மீகத்தில் சில விஷயங்களை கத்துக்கொடுத்து அவரையும் மேம்படுத்தலாமே” என்றேன். இது நான் சொல்லவில்லை. உள்ளே இருந்த அது சொல்லியது.

“ஆமாம் சாமி. இவங்களை என்னை மாதிரி முன்னேத்துங்க” இது சுப்பாண்டியின் துணைக்குரல்.

GPS காட்டிய வழியில் ராமதாஸியின் நண்பர் வீட்டின் முன் நிறுத்திய எனக்கு பேரதிர்ச்சி...!


அங்கே ஒரு அழகிய இந்திய கோவிலும் அருகே ஒரு குடில் போன்ற ஆசிரமும் இருந்தது. அந்த குடிலின் முகப்பில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கையில் ஒரு புத்தகம்...அதன் தலைப்பு...

“யோக வாசிஷ்டம் - ஞானத்தின் திறவுகோல்”

”படார்...” ஆம் இது நீங்கள் நினைத்தது போல இறைவன் சுத்தியால் அடித்து நொறுக்கிய சப்தம் தான் அது...

ஆழ்ந்து ஆன்மீக அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே படித்து புரிந்துகொள்ளும் புத்தகம் இது. வசிஷ்டர் தன் மாணவரான ஸ்ரீராமருக்கு நீ ஒரு அவதாரம், மனிதன் அல்ல என ஞானம் வழங்கிய கருத்துக்கள் நிறைந்த புத்தகம் அது....!

பல்லாயிரம் கிமீ கடந்து இந்திய கலாச்சாரத்தின் நிழல் விழுகாத இடத்தில் ஒருவர் யோக வாசிஷ்டம் படித்துக்கொண்டிருந்தது என்னால் தாங்க முடியவில்லை. ஆணவத்தால் என் புகைச்சலை அடக்கிக் கொண்டேன்.

வில்லி..என்ற அந்த எளிய மனிதர் எங்களை வரவேற்று தங்க இடமும் அறுசுவை உணவும் அளித்தார்.  அவரை செல்லமாக வில்லி புத்திரர் என அழைப்போம். 

ஏதோ ஒரு நாள் , இந்திய ஆன்மீகவாதி ஒருவர் என் இல்லத்தில் தங்குவார் என தெரிந்து அவருக்காக ஒரு அறையைகட்டி இருக்கிறேன். தற்சமயம் 
அதில் என் குரு இருக்கிறார். அவருடன் நீங்கள் தங்கிக்கொள்ளுங்கள் என கூறி என்னை அழைத்து சென்றார். நானும் சுப்பாண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.


மிகவும் குறுகுறுப்பாக நானும் சுப்பாண்டியும் அவரின் குருவை காண சென்றோம். வில்லிபுத்திரரின் குரு புகைப்படமாக இருந்தார்.படத்தை பார்த்ததும் சுப்பாண்டி நெளிய துவங்கினான்.

அறையில் வில்லிபுத்திரரின் குரு “உன்னை யாரடா இங்கே வரச்சொன்னது?” என கேட்பது போல அவரின் படம் அமைந்திருந்தது.

 (அன்பு பெருகும்)

Tuesday, December 3, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 5

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்...உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் மலைக்கு சுப்பாண்டியுடன் செல்ல திட்டம்.
அவ்வழியே பயணிக்கும் பொழுது உலகின் சிறந்த வான் ஆராய்ச்சி கூடத்தை கண்டு களிப்பதும் ( நாங்களும் ஜோசியம் படிச்சிருக்கொம் இல்லையா? - சுப்பாண்டியின் டயலாக் இது...! ), நிலவு பள்ளத்தாக்கு என்ற உலகின் முதல் உயிர் வாழ்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என திட்டம் மிக அற்புதமாக தீட்டப்பட்டது.

சில நூறு கிலோமீட்டர் தூரமே காரில் பயணித்து பழக்கம் உள்ள நான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வாகனம் ஓட்ட வேண்டுமானால் மிகவும் தேர்ச்சி தேவை...குழப்புத்துடன் அமர்ந்திருந்தேன்.
ஜெர்மனியில் உலகின் அதிவேக சாலை என்ற பகுதியில் 220 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டி இருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் 90 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. 20 நிமிடத்தில் நீங்கள் கோவையிலிருந்து ஈரோடு சென்று விடலாம் என நினைத்தால் வியப்பாக இருக்கிறதா? ஆம் அது போன்ற தொலைவை ஜெர்மனியில் 20 நிமிடத்தில் கடக்கலாம். ஆனல் இங்கே விஷயம் வேறு அதிவேகம் சாத்தியமல்ல மேலும் இது சில நூறு கிலோமீட்டரும் அல்ல. சில ஆயிரம் கிலோமீட்டர்கள்....ஐந்து நாள் பயணம்....!

என் உதவிக்கு என் அர்ஜண்டினாவின் பிரதான மாணவி ராமதாசி வந்தார். அவரின் இயற்பெயர் வேறு. நாம் கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்க இப்பெயர். ராமனுக்கு தாசர்கள் உண்டு. அதாவது ஆஞ்சனேயரும், சுக்ரீவன் மற்றும் விபீஷணன் ஆகியோரை குறிப்பிடலாம். தாசிகள் என்றால் அதுவும் ராமனுக்கு என சொல்லும் பொழுது கொஞ்சம் முரணாக தெரிகிறதா?

ராமனுக்கு ஆஞ்சனேயரை போல பெண் உருவில் தாசர்கள் உண்டு. அவள் தான் சபரி. ஸ்ரீ ராமனின் வருகைக்காக காத்திருந்து, வந்தவுடன் ராமனின் நாக்கின் சுவை உணர்ந்து தான் புசித்து பின் அளித்த ராம தாசி.

அது போல என் அர்ஜண்டினாவின் வருகைக்கும், எனது உணவு பழக்கத்தையும் உணர்ந்து ஓர் தாய் போல என்னை பார்த்துக்கொண்டார். 

நம்மில் பலர் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வாய் கிழிய பேசினாலும், அதை பின்பற்றுவதில்லை. என்னிடம் பயின்றதை தம் மக்களும் பயில வேண்டும் என என்னை வரவேற்று ஏற்பாடுகளில் என்னை ஆச்சரியப்படுத்தியவர் ராமதாசி.

ஸ்பானிஷ் மொழியில் பத்திரிகை நடத்தி அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கி என் செயல்களை எழுதி வந்திருக்கிறார். அர்ஜண்டினா தெருக்களில் வலம் வரும் பொழுது “ஹோலா ஸுவாமிய்” என மக்கள்  அவர்கள் உச்சரிப்பில் என்னை அழைக்க காரணமாக இருந்தவர்.

கார் பயணத்தில் தானும் ஓட்டுவதாக கூறி இணைந்து கொண்டார். மேலும் ஸ்பானீஸ் மொழி தெரிந்தவர் ஒருவர் உடன் இருப்பது அர்ஜண்டினாவில் அவசியம் என்பதால் சரி என்றேன். அவரும், நானும் பின்னே நம் சுப்பாண்டியும் இப்பயணத்தை துவக்கினோம்.

 “சாமி மூணு பேரா போறோமே போற காரியம் வெளங்குமா?” எனக்கேட்டான் சுப்பாண்டி. அவனுக்கு தெரியாது இவன் ஒருவனுடன் போலானே எந்த காரியமும் விளங்காது என்று.

பயணங்கள் மலைப்பாதை, அடந்த காடு மற்றும் பாலைவனம் ஆகியவை ஊடுருவி செல்லுவதால் பயண பாதையை உணர மேப் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

சில மணிநேரம் சுப்பாண்டியை காணவில்லை. பிறகு கையில் ஒரு கருவியுடன் வந்தான்.

என்ன சுப்பு இது என கேட்டேன். “ஸ்வாமி கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும், நம்ம இருக்கும் தெருவில் டாக்ஸி ட்ரைவரிடம் இரவல் வாங்கிட்டேன்” என்றான். மொழி தெரியாத ஊரிலும் நம் ஆட்களின் இரவல் மொழி அபாரமானது என உணர்ந்தேன்.

சாமி காரில் வலது காலை வச்சு ஏறி இருக்கீங்க...... சூப்பர் சாமி...! என என்னை உற்சாகப்படுத்தினான். ஆம். ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய நாடுகள் தவிர பிற நாடுகளில் இடது பக்கம் தான் கார் ஓட்ட வேண்டும். அதனால் வலது காலை உள் வைத்தே வாகனத்தில் ஏற வேண்டும். 

புதிய வாகன சூழல், இடது பக்க ஓட்டும் தன்மை, அருகே சுப்பாண்டி, பின்புறம் ராமதாசி என பயணங்கள் துவங்கியது.

“கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என எந்த முகூர்த்தத்தில் கூறினானோ தெரியவில்லை.... கடைசியில் எங்களுக்கு கடவுள் தான் வழிகாட்டினார் ...!

(அன்பு பெருகும்)

Saturday, November 30, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4


 சிறைச்சாலை அழைப்பை ஏற்று நான் அங்கிருப்பவர்களை பார்க்க சென்றேன்.  இந்திய சிறைச்சாலைகளை கண்ட எனக்கு அர்ஜண்டினா சிறைச்சாலை மிகவும் பிரம்மிப்பை உண்டாக்கியது. அமைச்சர்கள் தங்கும் விருந்தினர் மாளிகைக்கு ஒப்பாக இருந்தது அந்த சிறைச்சாலை.

மேலும் அங்கே அடைபட்டவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. சகல வசதிகள் என்றால் டெலிபோன், செல்போன், இன்ட்ரநெட் , உணவு, உடை முதல் அனைத்தும் அவர்கள் முடிவு செய்யலாம்.

சிலர் இண்டர்நெட் மூலம் வியாபாரம் செய்து வருமாணம் பார்க்கும் அளவுக்கு சிறையில் சுகந்திரம் உண்டு. தினமும் ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் பேசிக்கொள்கிறார்கள். 

நானும் சுப்பாண்டியும் குழப்பம் அடைந்தோம். இதுக்கு ஏன் சிறைச்சாலைனு பேரு வச்சாங்க ஹோட்டல்னு பேர்வைக்கலாம் என்றான் சுப்பாண்டி. 

மனித உரிமையை மதித்தல் என்றால் என்ன என தெளிவாக தெரிந்துகொண்டோம். தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி. இவர்கள் விளையாடுகிறார்கள், சிலர் புகைபிடிக்கிறார்கள் என சிறைச்சாலைக்குள் வந்த உணர்வே எனக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு கிளப்பில் நுழைந்த உணர்வு மட்டுமே இருந்தது.

இங்கே சிறைச்சாலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். கைதிகளுக்கு அல்ல..!

குழுமி இருந்த கைதிகளுடன் உரையாற்றினேன். அவர்களில் ஒருவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவங்களை படித்து தன் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் என்றும் சிறையில் இருந்தாலும் அவரின் கருத்துக்களால் விடுதலையாக உணர்கிறேன் என்றும் கூறினார். ஆயுள் தண்டனை கைதியான அவர் ஜே.கிருஷ்ண மூர்த்தியை பற்றி கூறியது மகிழ்வானதாக இருந்தது.

ஆயுள் தண்டனை கைதிகள் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். முதல் கேள்வியே சிறப்பாக கேட்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளராக என் மாணவி இருக்க எங்கள் உரையாடலை கீழே 
தொகுத்துள்ளேன்.

“எங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்”

“என்னுள் ஒருவனாக நினைக்கிறேன். வித்தியாசமாக நினைக்க ஒன்றும் இல்லை”

“ நாங்கள் கொடூரமான பாவம் செய்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அல்லவா?”

“அனைவரும் சிறையில் தான் இருக்கிறார்கள் நீங்கள் மட்டுமல்ல. சிலர் சுவரால் எழுப்பப்பட்ட சிறையில் கைதிகள். சிலர் உணர்வால் எழுப்பபட்டா ஐந்து புலன் சிறையின் கைதிகள். வித்தியாசம் அவ்வளவுதான். உங்களை போலவே அவர்களும் நன்னடத்தையால் ஒரு நாள் விடுதலை ஆவார்கள்” என்றேன்.உள்ளம் நெகிழ்ந்து கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டனர். 

உணர்ச்சிபெருக்காக ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது இந்த சந்திப்பு.

ஆன்மீக வழிகாட்டுதல் செய்துவிட்டு, அவர்களை என்னுடன் இணைந்து இறை பாடல் பாடி ஆடி  மகிழ்ந்து கிளம்பினோம். 

சிறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை என கூறினார்கள்.

விடை பெற்று கிளம்பும் பொழுது “ஏஞ்சாமி கோவையில் இருக்கும் சிறைச்சாலைக்கு எல்லாம் நீங்க போறதில்லை” என கேட்டான் சுப்பாண்டி.

நான் அவனை ஏற இறங்க பார்க்க...

“இல்ல சாமி பெரிய ஆன்மீகவாதிகள் எல்லாம் சிறைச்சாலை, திவிரவாதிகளுக்கு போயி யோக சொல்லி கொடுத்து திருத்தறாங்களே. அதுபோல நீங்க செய்ய மாட்டீங்களானு கேட்டேன்” என்றான்.

அதில் ஓர் உள்குத்து இருப்பதை உணர்ந்தாலும், “ நமக்கு சிறைச்சாலைக்குள்ள எதுக்குப்பா போயி கத்துதரனும்? வெளிய கத்து தந்து யாரும் உள்ள போகாம பார்த்துக்கிட்டா போதும்” என சீரியஸாக பதில் கூறினேன்.

 இப்படியாக நாங்கள் வந்து ஒரு வாரம் பொதுமக்களுக்கு தியான பயிற்சிகளும், சிறைச்சாலை சந்திப்புமாக சென்றது. அடுத்த வாரங்களில் மத்திய அர்ஜண்டினாவில் உள்ள லா ர்யோகா என்ற இடத்தில் பயிற்சி கொடுக்க செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அந்த நகரம் 1300 கிலோமீட்டர் தூரம் இருந்தது. போக்குவரத்து பஸ் மட்டுமே. இங்கே இரயில் மற்றும் இதர போக்குவரத்துக்கள் இல்லை.

என்னுடன் இருந்த பிற அர்ஜண்டின மாணவிகள், “இந்த இடம் வரை செல்லும் நீங்கள் அருகே உள்ள பிற இடங்களுக்கு எல்லாம் செல்லலாமே” என யோசனை கூறினார்கள். அதை கேட்ட சுப்பாண்டி ,”சாமி சாமி நாம போலாஞ்சாமி” என கேட்க துவங்கினான்.

காரில் சென்றால்தான் இந்த இடங்களுக்கு செல்ல முடியும் என காரில் பயணம் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக நாங்கள் திட்டமிட்டு செல்ல வேண்டிய நகரங்களை பட்டியலிட்டால் மொத்தம் ஐயாயிரம் கிலோமிட்டர் தூரம் வந்தது.

அதிர்ச்சியுடன்.....என்னாது ஐயாயிரம் கிலோமீட்டர் காரிலா? யாருடா சுப்பாண்டி ட்ரைவ் செய்வா? என கேட்டேன்.

சுப்பாண்டியின் விரல் என்னை நோக்கி சுட்டிக்காட்டியது..

(அன்பு பெருகும்)

Thursday, November 28, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 3

எங்கள் காரில் ஏறிக்கொண்டு எங்களுடன் பயணம் செய்ய துவங்கினார் அகஸ்டின்.அவர் தான் எங்கள் பார்வையற்ற மொழிபெயர்ப்பாளர்.

மாலை பொதுக்கூட்டத்திற்கு முன் பரஸ்பரம் அறிமுகமும் பேச்சின் சாரத்தையும் புரிந்துகொள்ள அவரை சந்திக்க எண்ணி இருந்தேன்.

அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து அவரை கூட்டிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். அறிமுகப்படுத்திவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வாகனத்தை என் மற்றொரு அர்ஜண்டினா மாணவி ஓட்டிக் கொண்டிருந்தார்.


 என்னை பற்றியும் எனது பணிகளை பற்றியும் அகஸ்டினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பேச்சின் நடுவே சடாரென வாகன ஓட்டியிடம் திரும்பி , “அடுத்த வரும் தெருவில் வலதுபக்கம் திரும்புங்கள்” என சொல்லி என்னிடம் பேச்சை தொடர்ந்தார்.

நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எப்படி உங்களால் முடிகிறது என கேட்கும் முன், “அங்...அப்படியே வலதுபக்கம் மூணாவது வீட்டில், யெஸ் இங்கதான் நிறுத்துங்க..” என சொல்லி காரிலிருந்து இறங்கி தன் வீட்டிக்குள் சென்றார்.

இவர் யார் கைகளையும் பற்றிக்கொள்வதில்லை. பிறப்பிலிருந்தே கண்கள் தெரியாதவர். பல இசைக்கருவிகளை இசைக்கிறார். மேலும் நகரின் முக்கிய இசைக்குழுவில் இருக்கிறார். தான் பார்வையற்றவர் என்பதில் தாழ்ச்சி இல்லாமல், யாரும் அவரின் உடல் குறையை குறிப்பிடாமல் இருக்க எப்பொழுதும் நகைச்சுவையுடன் இருக்கிறார். மாலை நேர பொதுக்கூட்டத்தில் சிறப்பாக மொழிபெயர்த்தார். 

எப்படி கண்களால் பார்ப்பது போல அனைத்தையும் செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு கண்கள் இருக்கிறது அதனால் அந்த உறுப்பால் மட்டும் பார்க்கிறீர்கள். எனக்கு இல்லாததால் பிற நான்கு புலன்களால்  பார்க்கிறேன். உங்கள் எல்லோரையும் விட எனக்கு பார்வை அதிகம்” என்றார்.

அவரின் வார்த்தைகள் பல விஷயங்களை சுட்டிகாட்டியது.

விடைபெறும் பொழுது, “ஸ்வாமி, ஆங்கிலத்தில் சந்தித்து விட்டு பிரியும் பொழுது சீயூ என சொல்லுவார்கள். நான் சீமீ என சொல்லி பிரிகிறேன்.ஏனென்றால் என்னால் உங்களை பார்க்க முடியாது” நகைச்சுவையுடன் விடைபெற்றார்.

ஓர் உறுப்பில் மட்டும் பார்க்கும் நான் குருடன் அல்லவா? நான்கு புலனால் உணரும் அவர் பார்வையற்றவர் தானே?

எங்கள் பொதுக்கூட்டமும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக சென்றதால் நாளிதழ்களும் தொலைக்காட்சியிலும் செய்திகளாயின. மக்களின் கவனம் அதிகரித்தது. தெருக்களில் நான் நடந்து சென்றாலே “இந்தியன் ஸ்வாமி” என என்னை அரவணைத்து மகிழ்ந்தனர். இதனால் அர்ஜண்டினாவின் பல்வேறு பகுதிலிருந்தும் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தது.

அப்படிப்பட்ட அழைப்புகள் மின்னஞ்சலில் வந்தது. அவற்றை பரிசீலித்து கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு சுவாரசியமான அழைப்பு இருந்தது.

“அனைவரும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் உங்களை பார்க்க வர இயலாது. நீங்கள் எங்களுடன் உரையாடி மாலை பொழுதை செலவளிக்க வருவீர்களா?”

இப்படிக்கு 
ஆயுள் கைதிகள்
மத்திய சிறைச்சாலை, 
சாண்டா ரோசா நகரம், அர்ஜண்டினா

பல்வேறு அதிகார மையங்களின் அழைப்பை தவிர்த்துவிட்டு இவர்களை சந்திக்க சென்ற எனக்கு பல்வேறு ஆச்சரியம் காத்திருந்தது.

சிறைச்சாலைக்கு செல்ல வாகனத்தில் ஏறியதும் , சுப்பாண்டி வாகனத்தின் கதவை மூடாமல் தலையையும் உடலையும் வெளியே நீட்டியபடி , “ஏய் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயில்லு போறேன்” சப்தமாக கூவியபடி வந்தான்...

(அன்பு பெருகும்)

Monday, November 18, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 2

சனி பிடிச்சா ஒட்டகத்தில் போனாலும் தெருநாய் வந்து கடிக்கும் என சொல்லுவார்கள். அது போல எனது அர்ஜண்டினா பயணத்தில் எனக்கு துணையாக சுப்பாண்டி. தனியாக நானே என்னை சமாளிக்க முடியாமல் இருக்க..இதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜாக சுப்பாண்டியும் என்னுடன் இருக்க பிரச்சனை இருமடங்கு என்பதைவிட பல மடங்கு என்றே சொல்லவேண்டும்.

அர்ஜண்டினாவின் தலைநகரம் பியோனிஸ் ஏரிஸ். இது தென் அமெரிக்காவின் பாரிஸ் என அழைக்கப்படுகிறது. இங்கே தான் நான் வந்து இறங்கினேன்.

குடியுரிமை சோதனை முடித்து, எனது பெட்டி பைகளை எடுத்துக்கொண்டு விமான நிலைய கலால் சோதனை சாவடிக்கு அருகே வந்தால் பெரிய வரிசையில் மக்கள் நின்று இருந்தார்கள். ஸ்பானீஷ் 

தெரியாத குறைக்கு நானும் வரிசையில் நின்றேன். எனக்கு பின்னால் சுப்பாண்டி..

வரிசை அதிகாரியின் அருகே செல்ல செல்ல புரிந்தது இது கலால் சோதனை இல்லை ஆயுத சோதனை என புரிந்து திடுக்கிட்டோம். கையில் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாகிகள் சகிதம் மக்கள் சோதனை சாவடியில் நிற்கிறார்கள். இங்கே ஆயுதங்களை பெட்டி படுக்கை போல விமானத்தில் எடுத்து செல்லலாம். மீண்டும் அதை நாட்டுக்குள் வரும் பொழுது குறிப்பேட்டில் எழுதிவிட்டு எடுத்து செல்ல வேண்டும். 

எங்கள் முறை வந்தது- தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை திரட்டி, “டு யூ ஹாவ் எனி வெப்பன்ஸ்?” என்றார் அதிகாரி. நாங்க 

ஊதா கலர் ரிப்பனையே பார்த்ததில்லை இதில் வெப்பனாம்.. என்றான் சுப்பாண்டி.

எங்களின் நிராயுத பாணி நிலையை விளக்கிவிட்டு கடந்தோம். கடந்து செல்லுகையில் அருகே வைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லன்சர்கள் கொஞ்சம் பீதியை உண்டு செய்தது.

தலைநகரிலிருந்து 600 கிலோமீட்டர் தூரம் உள்ள லா பம்ப்பா என்ற இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். மீண்டும் அபிநய சரஸ்வதியாகி ஒரு டாக்ஸியை பிடித்து மீண்டும் 6 மணி நேர பயணம்.

இங்கே சாலைகள் எல்லாம் ஒரே நேர் கொட்டில் இருக்கிறது. குறைந்த பட்சம் 50 முதல் 60 கிலோ மீட்டருக்கு வளைவுகள் இல்லாத வீதிகள். எங்களை கூட்டிவந்த டாக்ஸி ட்ரைவர் முன் இருக்கை அருகே ஒரு சின்ன டீவி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்த்த வண்ணம் வந்தார். இந்தியாவில் நான் பயணிக்கும் பொழுது ட்ரைவர் செல்போனில் பேசினாலே ஓரமா நிறுத்து என அலறுவேன். இவரின் செய்கை வெறுப்பூட்டவே ஏன் டீவி பார்க்கிறீர்கள் என கேட்டேன்.

தூர பயணத்தில் திருப்பம் இல்லாமல் இருப்பதால் தூங்கிவிடுவாராம். அதை தவிர்க்கவே இந்த டிவி என்றார். ஐயா நல்லா டிவியை போட்டுக்கோ என சொல்ல வைத்தது அர்ஜண்டினா சாலைகள்.

லா பம்ப்பா மாகாணத்தில் வந்து இறங்கியதும் பெரிய வரவேற்பு நிகழ்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனது தென் அமெரிக்க மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

மேலும் இந்த மாகாணத்திற்கு வரும் முதல் இந்திய ஆன்மீகவாதி என கூறி அந்த மேயர் வரவேற்றார்.

பொது நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்தும் சிறப்பாக இருந்தது.

உங்கள் பொது நிகழ்ச்சியையும் பயிற்சி வகுப்பையும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்கிறோம். நகர மையத்தில் நீங்கள் சென்றுவிட்டு திரும்பும் பொழுது அவரை சந்திக்கலாம் என சொன்னார்கள்.

எங்கள் நகர உலா முடித்துவிட்டு வருகையில் கையில் குச்சியுடன் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று இருந்தார்.

கண்கள் பார்வையில்லாத அந்த நபர் எங்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய போகிறாராம்....!

நாம் பரதநாட்டியம் ஆடியே பல விஷயங்களை புரியவைக்க முடியும் என நம்பிகொண்டிருந்த எனக்கு, இங்கே பார்வையற்றவர் காத்திருந்தது 

ஏமாற்றமே...இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்தேன்.

இன்று மாலை நகர மையத்தில் உள்ள அரங்கில் பொதுக்கூட்டம்...இவரை புரியவைத்து என்ன பேசி... அப்புறம் மக்கள் புரிந்துகொண்டு.. விளங்கும் என நினைத்துக்கொண்டேன்...

அந்த பார்வையற்றவரை சந்தித்த இந்த குருடன் கதையை நாளை சொல்கிறேன்.

(அன்பு பெருகும்)

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து....

இந்த வருடம் பயணத்திற்கான வருடம் என என் தசா புக்தி சொன்னதோ என்னமோ..பெட்டியுடன் சுற்றியபடியே இருக்கிறேன்.

கும்பமேளாவில் துவங்கிய பயணம் டெல்லி, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எங்கே நிற்கும் என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதோ இப்பொழுது தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அர்ஜண்டினாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

கம்போடியாவை பற்றி ஒரு தொடர் எழுதவேண்டும் என எண்ணுவதற்குள் அர்ஜண்டினாவில் அடைக்கலமாகி விட்டேன்.


இந்தியாவிலிருந்து இங்கே வருவதற்கு மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். 

வட அமெரிக்காவை போல இது பொருளாதார செழுமையான நாடு அல்ல. மேலும் அதிக விமான போக்குவரத்தும் கிடையாது. 

முழுமையாக இரண்டு நாட்கள் வெவ்வேறு நாடுகள் வழியாக சென்றால் தான் அர்ஜண்டினாவை வந்து அடைய முடியும்.

தென் அமெரிக்க கண்டம் பிரேசில், அர்ஜண்டினா, பெரு,சிலே, பொலிவியா, பரகுவே, உருகுவே, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளை கொண்டது. இதில் பிரேசில் தவிர பிற நாடுகள் 200 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு ஸ்பெனீஷ் கலாச்சாரம் வேர் ஊன்றி நிற்கிறது. பிரேசில் போர்ச்சிகீசியர்களால் ஆளப்பட்டு போர்ச்சிகீஸ் மொழி பேசுப்படும் கலாச்சாரமாக இருக்கிறது.

நிற்க... இது என்ன விக்கிபிடியா பக்கமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.

கோவையிலிருந்து...பயணம் துவங்கி டெல்லி, துபாய், ரியோடிஜனிரோ(பிரேசில்) பிறகு போனிஸ் ஏரிஸ் என்ற அர்ஜண்டினா தலைநகரத்திற்கு வந்து சேர்ந்தேன். படிக்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா?
பயணித்தவனை நினைத்துப் பாருங்கள்.

இப்படிபட்ட அர்ஜண்டினாவுக்கு பயணம் செய்ய துவங்கும் பொழுது புதிய மக்கள் கலாச்சாரம் என ஒன்றும் தெரியாது. தமிழே நமக்கு தாளம் என்பதால் ஸ்பேனீஷ் பற்றி சொல்ல வேண்டாம். அர்ஜண்டினா செல்லும் பொழுது அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது.

கால்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் மரடோனாவும், நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை மட்டுமே தெரியும்.

துபாய் விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஐரோப்பியர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். உணவகத்தில் பரத நாட்டியம் ஆடாத குறையாக சைவ உணவு கேட்டு வாங்கிவந்ததை பார்த்து எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அர்ஜண்டினா என்றேன். உலகின் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல புரண்டு சிரித்துவிட்டு, “அர்ஜண்டினாவில் அசையாமல் அமர்ந்திருந்தா உங்களையே பன்னுக்குள் வைச்சு பர்கர்னு சாப்பிருவாங்க.... அந்த ஊரில் சைவ சாப்பாட்டு பழக்கத்துடன் போய் என்ன செய்ய போறீங்க ” என பீதியை கிளப்பினார். இனி ஒரு மாதம் இருக்க வேண்டிய நாட்டை பற்றி நல்ல கருத்து இது என நினைத்துக்கொண்டேன்.

இப்படி பல முன் உரைகளை கடந்து அரைத்தூக்கத்துடன் அர்ஜண்டினாவில் நான் கால் வைக்கும் பொழுது தெரியாது அது பல சுவாரஸ்யங்களை எனக்காக புதைத்து வைத்திருக்கிறது என்று...

(அன்பு பெருகும்)

Wednesday, November 13, 2013

பகவான் செய்த தவறு...!

அந்த மஹானின் வாழ்க்கை சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தேன். மஹானின் பெயரை சொல்லும் பொழுது அவரின் பெயருடன் “பகவான்” என சேர்த்து சொன்னேன்.

என் மாணவர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நீங்கள் எப்படி மனித உருவில் இருப்பவரை பகவான் என சொல்லலாம். இது மிகத் தவறான முன் உதாரணம்.... பகவன் பகவான் தான்.. மனிதனாக முடியுமா? இப்படித்தான் தன்னை தானே பலர் கடவுளாக்கி வியாபாரம் செய்கிறார்கள் என நீண்ட உரை நிகழ்த்தினார்.

அவர் முடிக்கும் வரை காத்திருந்தேன்.

பின்னால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தை காட்டி... யார் இவர்? என கேட்டேன்.

நீங்க தான் ஸ்வாமிஜி என்றார்.

ஒரே ஒரு முறை என் உருவத்தை அச்சிட்டதால் இந்த பேப்பர் நான் ஆகும் பொழுது..பல முறை இறைவன் பிரவேசித்த உடல் பகவான் ஆகாதா ? என்றேன்..

 “பகவானே.....!” என்றார்...

Monday, October 7, 2013

ஆன்மீக பயணங்கள் ஓர் அறிவிப்பு

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்

இறையருள் நிறைந்த இடங்களுக்கு  பயணம் செய்வது ப்ரணவ பீடத்தில் வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு. இனி வரும் மாதங்களில் ஆன்மீக பயணமாக மட்டும் இல்லாமல் தியான நிகழ்வாகவும் நடத்த எண்ணி உள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதியில் திருவண்ணாமலை மற்றும் பர்வத மலை பயணம் செல்ல இருக்கிறோம். மேலும் ஜனவரி 2014ல் காசி யாத்ரையும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணங்களின் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.


டிசம்பர் 2013

அருணாச்சல தியான முகாம்

திருவண்ணாமலை திருத்தலத்தில் மூன்று நாட்கள் தியான முகாம் நடைபெற உள்ளது. இந்த திருப்பயணத்தில் எளிய தியான பயிற்சிகள், சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் ஆகியவை நடைபெறும். கிரிவலம் செல்லுதல் மற்றும் அருணாச்சல மலையில் உச்சியில் உள்ள அருணாச்சல பாத தரிசனம் ஆகியவையும் நிகழும். 

டிசம்பர் 25ஆம் தேதி துவங்கும் இப்பயணம் 27ஆம் தேதி முடிவடையும்.  

28ஆம் தேதி சனிக்கிழமை பர்வதமலை பயணம். 29ஆம் தேதி ஞாயிறு அன்று திருவண்ணாமலை திரும்புதல்.

அருணாச்சலை தியான முகாமில் கலந்து கொள்பவர்கள் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கலந்து கொள்ளலாம். அல்லது 29 ஆம் தேதிவரை பர்வதமலை பயணத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.

பர்வதமலை பயணம் மட்டும் 28,29ஆம் தேதிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பினும் அனுமதி உண்டு.

20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மிக செளகரியமான சூழ்நிலையில் தங்குமிடம், போக்குவரத்து வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்படும். 

டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்பவர்களுக்கே அனுமதி உண்டு.


தியான முகாமில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :

1. ப்ரணவ பீடத்தின் ஏதேனும் ஒரு ஆன்மீக பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். (ப்ராண வித்யா, மந்திர சாஸ்திரம் , யோக பயிற்சி)

2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

3. திருவாண்ணாமலை மலையேற்றம், பர்வதமலை ஏற்றம் ஆகியவை செய்ய  உடல் பலம் மற்றும் ஆரோக்கியம் அவசியம்.

-----------------------------------

காசி யாத்ரா 2014

ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 வரை ஆறு நாள் பயணமாக காசி யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

காசி யாத்ரா என்பது அலகாபாத் என்கிற திரிவேணி சங்கமம், காசி புண்ணிய பூமி மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடுவதை உள்ளடங்கியது.

ஆற்றல் பெற்ற இவ்விடங்களில் தன்வந்திரி ஹோமம் மற்றும் காசியில் மஹா மிருதியன்ஜெய ஹோமம் ஆகியவை நடைபெறும்.

முழுமையான மந்திர ஆற்றல் நிறைந்த இவ்விடங்களுக்கு சென்று ஸ்வாமி 
ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக அனுபவம் பெறலாம்.

25 டிசம்பர் 2013க்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும். 

காசி யத்ராவில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :

1. ப்ரணவ பீடத்தின் மந்திர சாஸ்திர பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அன்பர்களின் நலனுக்காக டிசம்பர் முதல் வாரம் மந்திர சாஸ்திர பயிற்சி கோவையில் நடைபெறும். அதில் கலந்து மந்திர தீட்சை பெற்று பிறகு ஜனவரில் காசி யாத்திரையில் கலந்துகொள்ளலாம்.

2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

3. ஜனவரியில் தை அமாவாசையை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அச்சமயம் அங்கே தட்பவெப்பம் மிக குளிர்ந்த சூழல் இருக்கும். பனியும், அதிக குளிரும் தாங்கும் பக்குவம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

--------------------------

மேற்கண்ட பயணங்களில் கலந்துகொள்பவர்கள் மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்யும் முறைகளையும், பயண கட்டணம் மற்றும் இதர தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.


ஆன்மீக பயணத்திற்கு தொடர்புடைய கட்டுரைகள்  





Wednesday, August 28, 2013

ப்ரணவ உற்சவம்

அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Thursday, July 18, 2013

குருபூர்ணிமா 2013

அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்


Wednesday, June 26, 2013

ஒரு யோகியின் பயணம்

அந்த யோகி விமானத்தின் உள்ளே சென்று தனது பயணச்சீட்டில் அச்சிட்டிருந்த ‘11B’ என்ற இருக்கையை தேடிக்கொண்டிருந்தார்.

மூன்று இருக்கைகள் கொண்ட ABC வரிசையில் இவருடையது நடுஇருக்கையாக அமைந்திருந்தது.



யோகியின் வலதுபக்கம் நெற்றிநிறைய திருமண் பூசியபடி ஒரு ஆத்திகர் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொன்னார்.

இடதுபக்கம் எந்த சலனமும் இல்லாமல் ஒருவர் அமந்திருந்தார். இடதுசாரியில் இருப்பவர்களுக்கு அனேகமாக இறை நம்பிக்கை இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை.

அவரிடமும் வணக்கம் சொல்லி யோகி அமர்ந்தார். அனைவரையும் வானில் சுமந்து பறந்தது ராக்‌ஷத பறவை.

சில நிமிடம் கரைந்திருக்கும், வலதுபக்கம் இருப்பவர் யோகியை பார்த்து...

“ஸ்வாமிஜி, இறைவனை பற்றி நான் நினைத்து ஆச்சரியப்படாத நாளே இல்லை..இறைவன் மிகப்பெரியவன் இல்லையா” என தன் ஏழு 

மணிநேர பயணத்திற்கு தேவையான பேச்சை துவங்கினார்.

சில நிமிடம் மெளனமாக கரைந்தது...

யோகி வலது பக்கம் இருந்த ஆத்திகரை நோக்கி கேட்டார், “ ஒரு புல்வெளியில் மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாம் ஒரே வகையான புல்லை சாப்பிட்டாலும் ஏன் அவைகள் சாணமிடும் பொழுது ஒரே போல இல்லாமல்  மாடு சாணியாகவும், குதிரை உருண்டையாகவும் ஆடு புழுக்கையாகவும் கழிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?”

“தெரியவில்லையே ஸ்வாமிஜி. இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் ஆத்திகர்.

“விஞ்ஞானத்தின் அடிப்படையே தெரியவில்லை உங்களுக்கு மெய்ஞானத்தின் தலைவனாக கடவுளை பற்றி கருத்து சொல்லுகிறீர்கள். கடவுளின் படைப்பையே உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே. எதை வைத்து கடவுள் பெரியவன் என சர்ட்டிபிக்கேட் கொடுக்க வந்தீர்கள்?”

எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்த வலதுசாரிக்காரர் விமானத்தில் கொடுக்கப்படும் புத்தகத்தை பிரித்து அதில் முகம் புதைத்தார்.

இந்த சம்பாஷணையை கேட்டபடி இருந்த இடதுசாரிக்காரர் “ம்க்கூம்...” என தொண்டையை கணைத்து யோகியின் முகம் பார்த்தார்.

பிறகு “ஐயா, எனக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை தெரியும். மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை ஒரே புல்லை சாப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றின் குடல் அமைப்பும் ஒன்றல்ல. அதனால் அவற்றின் மலக்குடலின் அமைப்புக்கு ஏற்ப அவை மலம் கழிக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்” என கூறி முகத்தை பெருமிதத்துடன் வைத்துக்கொண்டார்.

அவரை புன்புறுவலுடன் பார்த்த யோகி, “ வாழ்க்கையில் மலத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே திருப்தி அடைவதை விட்டுவிட்டு உயர்ந்த விஷயத்தை உணர முயலுங்கள். விஞ்ஞானம் எல்லைக்கு உட்பட்டது. மெய்ஞானம் எல்லையற்றது. மலத்தை விடுத்து உங்கள் பார்வையை மேம்படுத்தினால் இறைவனும் இருக்கிறார் என தெரியவரும்” என்றார்.

வலது சாரிகளும் இடது சாரிகளும் மெளமாக நடுநிலையாக அமர்ந்திருந்த யோகியின் பயணம் தொடர்ந்தது...

Wednesday, May 29, 2013

சுப்பாண்டி சின்ரோம்

அன்று வழக்கம் போல ஒரு தினமாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதில் ஒரு மாற்றம் வந்தது. காலையில் பணிகளை முடித்துவிட்டு வெளியே செல்ல கிளம்பும் நேரத்தில் பெரிய வாகனம் இரண்டு வாசலில் வந்து நின்றது. அஜானுபாகுவாக பல வெள்ளைக்காரர்களும் சில நம்மூர் ஆட்களும் இறங்கி வந்தனர்.

கருப்பு கோட்டு, கருப்பு கண்ணாடி அணிந்த இருவர் காதில் ஒரு கருவியையும், கோட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள மைக்கிலும் என் அடையாளங்களை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருக்கும் தெருவின் முனைகளை சிவப்பு-வெள்ளை பட்டைகளை கொண்டு அடைத்து போக்குவரத்தை மூடிவிட்டனர். சில நிமிடத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஒரு சில வெள்ளைக்காரர்கள்,  “என்னை நெருங்கி நாங்கள் உங்களுடன் பேச வேண்டும். சில மணிநேரம் ஒதுக்க முடியுமா?” எனக் கேட்டனர். என்னையும் மதித்து சிலர் கேட்கும் பொழுது தவிர்க்கவா முடியும்? சரி என்றேன்.

அவர்கள் சொன்ன விஷயங்களை டப்பிங் செய்து உங்களுக்காக தமிழில் இங்கே தருகிறேன்.நாங்கள் அமெரிக்காவின் மனோவியல் ஆய்வாளர்கள். கடந்த 2009ஆம் ஆண்டு நாங்கள் அனுப்பிய சாட்டிலைட்டில் எங்கள் ஆய்வுக்கான நபர் நீங்கள் என அது GPSல் சுட்டிக்காட்டுகிறது. எங்களின் ஆய்வுக்கு ஒத்துழையுங்கள், இது உலக மனோவியல் ஆராய்ச்சியில் மிகவும் புதிய தெளிவை உண்டு செய்யும். 

நம்மால் உலகுக்கு நன்மை நடக்கிறது என்றால் இல்லை என்று சொல்வோமா? உடனே சரி என்றேன். இதில் ஒரு அற்ப சந்தோஷமும் இருந்தது. போலியாக ஆன்மீகவாதிகள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், தங்களை இப்படி ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தி கருவிகளை கொண்டு ஞானம் அடைந்ததாக சொல்லி கல்லாக்கட்டுவார்கள். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என நினைத்து ஆய்வுக்கு சம்மதித்தேன்.

கையில் இருக்கும், பெட்டியை திறந்து அதில் உள்ள வயர்களை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டனர். என் தலை, மார்பு, கைகள் கழுத்து என பல இடங்களில் சிறிய க்ரீம் தடவி அதில் வயர்களை ஒட்டவைத்தனர்.

சில நிமிடங்கள் கரைந்தது. கருவிகளில் வரைபடங்கள் மேலும் கீழும் துள்ளிக்கொண்டே இருந்தது. வயதான டாக்டர் ஒருவர் என்னிடம் நெருங்கி வந்து தன் கண்ணாடியை கழற்றினார். சினிமாவில் வருவதை போல இனி 24 மணிநேரம் கழித்துதான் சொல்ல முடியும் என வசனம் பேசிவிடுவாரோ என யோசனையுடன் அவரை பார்த்தேன்.

நாங்க தேடி வந்த ஆள் நீங்க இல்லை. உங்களுக்கு எல்லாம் நார்மலா இருக்கு...என்றார். அப்பாடா இலவசமா செக் செஞ்சு நாம நார்மல்லு தெரிஞ்சுக்கிட்டமே என நிம்மதி அடைந்தேன்.

டாக்டர் என்னிடம் தொடர்ந்து பேச துவங்கினார். “நாங்க தேடி வந்தது ஒரு ஸ்பெஷல் பர்சன். அவர் ஐன்ஸ்டின், எடிசனுக்கு பிறகு அவங்களை விட ஐக்,.யூவில பெரிய நிலையில் இருப்பவர். எடிசன் ஐன்ஸ்டின் எல்லாம் எழுதும் பொழுது ஒரு வார்த்தையையோ அல்லது வரியையோ முண்ரன்பாடா எழுதுவாங்க. உதாரணமா , I am here - அப்படீங்கிறதை ereh ma I. அவங்க இப்படி திருப்பி எழுதறது கண்ணாடியில் காட்டி கூட படிக்க முடியாது. ஆனா நாங்க தேடி வந்த ஆள் யோசிக்கும் போதும், பேசும் போதும் இப்படி செய்வாருனு எங்க சாட்டிலைட் சொல்லுது. ஒரு வார்த்தையை நீங்க சொல்லும் போது அதற்கு சமமா ஒலிக்கும் வேறு ஒரு வார்த்தை அவரோட மனசுல வரும் அதையே அவர் ஞாபகம் வச்சுக்குவார்.  இவங்களோட ஐக்,யூல இருக்கிற குழந்தைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். இயல்பு குழந்தை போல இல்லையேனு  வருத்தப்படாமல் வளர்த்தா அவங்க பெரிய விஞ்ஞானியா வருவாங்க.”  

இவ்வாறு டாக்டர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே “அப்ப அந்த குழந்தைகளுக்கு ஹோம்ப்ளான் சாப்பிட கொடுக்கலாமா?” என கையில் ஒரு வீட்டின் வரைபடத்துடன் நின்று கொண்டிருந்தான் சுப்பாண்டி...!

இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. டாக்டர்கள் தேடிவந்தது என்னை இல்லை..! சுப்..சுப்..சுப்பாண்டியை..!

ஒரு நாள் நான் ஆங்கிலத்தில் ஆன்மீக கட்டுரை ஒன்றை டிக்டேட் செய்துகொண்டிருந்தேன். GOD என வரும் இடத்தில் எல்லாம் DOG என எழுதி இருந்தான். ஏன் இப்படி என கேட்க, பைரவரும் சாமி தானே என என்னை லாஜிக்கால் மடக்கினான். பல வேலைகளை எக்குத்தப்பாக செய்யும் பொழுது சரி அவன் முட்டாளாக இருப்பான் என நினைத்தால், அவனை ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு ஆய்வு செய்ய இவர்கள் வேறு கிளம்பி வந்து இருக்கிறார்கள். இவனை போய் ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து வந்திருக்காங்களே என பொறாமையும் ஒரு புறம் அதிகரித்தது.

“சாமி உடம்பு செரியில்லையா? ட்ராக்டர்கள் எல்லாம் வந்திருக்காங்களே?” என கேட்டுவிட்டு கையில் இருந்த பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து, “சாமி இதை சாப்பிடுங்க சரி ஆயிடும்” என்றான். என்ன என்பதை போல பார்த்தேன்.

“இது போப்பாண்டவர் கோவில் பஞ்சாமிர்தம்” என கொடுத்தான். டப்பாவில் பழனியாண்டவர் பஞ்சாமிர்தம் என எழுதி இருந்தது...!

ஓ இவன் டாக்டர்கள் சொல்லுவதை மறைந்திருந்து கேட்டுவிட்டு வேண்டுமென்றே இவர்களிடம் பெயர் வாங்கப்பார்க்கிறான் என யோசித்தேன். இருந்தாலும் இவன் ஐக்யூ மேல் ஒரு நம்பிக்கை வந்தது.

க்க்கும்...தொண்டையை கணைத்து, டாக்டர்கள் வந்த விஷயத்தை சொன்னேன்..சுப்பாண்டி உடனே சுறு சுறுப்பாகிவிட்டான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி போல தலையை ஒரு பக்கம் சாய்த்து புருவம் உயர்த்தி, இடுப்பில் கை வைத்து அமெரிக்கர்களை பார்த்து கேட்டான்...

“யாரை செய்கிறார் டெக்ஸ்டு, எதற்காக செய்ய வேண்டும் டெக்ஸ்டு. செயலுக்கு வந்தாயா வாத்து நட்டாயா...” என சுப்பாண்டி பேச பேச அவனுக்குள் இருந்த சந்திரமுகி வெளியே வந்தாள். இவன் தான் அந்த ஆராய்ச்சி பீஸு என எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

இவனின் இந்த மன பிரள்வை சுப்பாண்டி சின்ரோம் என பெயரிட்டிருக்கிறார்கள். சுப்பாண்டியை அமெரிக்காவிக்கு ஆய்வுக்காக கூட்டி செல்லப்போகிறார்கள். உங்களுக்கும் இப்படி ஏதேனும் இருந்தால் கூறவும். நீங்களும் இலவசமாக அமெரிக்கா செல்லலாம்.

அமெரிக்கா செல்லும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, “சாமி என்னை அமெரிக்க கூட்டிக்கிட்டு போறது ராணி முகர்ஜிக்கு தெரியுமா?” என கேட்டான். நான் குழப்பத்துடன் அந்த நடிகைக்கு எதுக்குடா நீ போறது தெரியனும்னு கேட்டேன்.

நடியையா? அவங்க தானே நம்ம நாட்டு ஜனாதிபதி என்றான் சுப்பாண்டி..!


-----------------------------------

வேதகால மனோவியலை (Vedic psychology) ஒரு தொடராக எழுதலாம் என இருக்கிறேன். கடினமான இந்த சரக்கை நகைச்சுவையால் எளிமையாக்கலாம் என எண்ணம். அதன் முன்னோட்டமே இந்த கட்டுரை.

Saturday, May 18, 2013

ப்ராணாயாமமும் ஜோதிடமும்

கடந்த ஞாயிறு அன்று திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஜோதிட ஐபெரும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் அடியேன் ஆற்றிய சிற்றுரையின் தொகுப்பு உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ராணாயாமம் என்ற தலைப்பில் ஜோதிட மாநாட்டில் ஆற்றிய உரை இதோ :


Sunday, April 7, 2013

பழைய பஞ்சாங்கம் 7-4-2013


சுப்பாண்டியார் - சுப்பாண்டி யார் ?

நமது வலைபக்கத்தை வாசிக்கும் பலருக்கு சுப்பாண்டியை நன்றாக அறிமுகம் உண்டு. நான் பல ஊர்களுக்கு பயணிக்கும் பொழுது சுப்பாண்டி கூட வந்திருக்காரா? என கேட்பதுண்டு. தொலைபேசியில் என்னுடன் பேசுபவர்கள் கூட பேச்சின்முடிவில் சுப்பாண்டியை கேட்டதாக சொல்லுங்க என்பார்கள். அவனுக்கு தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எழுதி அதற்கு ஆலோசனை வேண்டி பலர் கடிதம் எழுதுகிறார்கள். நான் ஒருவன் இங்கே இருப்பதையே சுப்பாண்டி மறைத்துவிடுகிறான். ஒரு சில வேளைகளில் இவன் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து எனக்கு பொறாமை கூட ஏற்படுவதுண்டு. இந்த சுப்பாண்டியை பலருக்கு அறிமுகம் செய்துவைத்ததே நான் தான். அவன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனான் தெரியுமா?


ஒரு நாள் பல்பொருள் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பணம் செலுத்தும் இடத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. நமக்குத்தான் பிறர் பிரச்சனையில் ஆர்வம் அதிகம் வருமே? உடனே சென்று கூட்டத்தை விலக்கிப்பார்த்தேன்.

அங்கே குழந்தை தனமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சுப்பாண்டி. இப்படி ஒரு அப்பாவியை அடித்திருக்கிறார்களே என நினைத்து, என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டேன்.

கடையில் ஒருவர் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பணம் வாங்குபவரிடம் சுப்பாண்டி கேட்டானாம்.., 

“ஏன் சார் காசு கொடுத்து தானே சிகரெட் வாங்கரீங்க? நல்ல சிகரெட் கொடுக்காம, கடைக்காரர் எப்படி உங்களை ஏமாத்தரார் பாருங்க” 

என அவன் சிகரெட் பெட்டியை காண்பிக்க, அதில் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என எழுதி இருந்தது. முகத்தை பெருமையாக வைத்துக்கொண்டு கடைக்காரரை பார்த்து, “உடம்பை கெடுக்காத சிகரெட்டா கொடுங்க” என கூறவும், நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

இத்தனை அறிவு கொண்ட ஆள் நம்முடன் இருக்கட்டும் என அவனை அழைத்துவந்தேன். அன்று பிடித்தது...!

-------------------------------

மனைவி எப்படி நிற்கனும்?

என்னிடம் ஆசிவாங்கும் தம்பதியினர் பெரும்பாலும் என் முன் கபடி ஆடுவதை பார்த்திருக்கிறேன். கணவனுக்கு எந்த பக்கம் மனைவி நின்று கொண்டு ஆசிவாங்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆசிவாங்க குனியும் பொழுதே சந்தேகம் வரும். பிறகு வலது இடது என கணவனும் மனைவியும் மாறி கபடிக்கு ஒப்பாக பாவனை செய்வார்கள். நம் சம்பரதாயத்தில் இறைவனின் ஆண் தன்மை வலது புறமும், பெண் தன்மை இடது புறமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது சிவன் சக்தியோ, பெருமாளும் தாயாருமோ என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் பல்வேறு கலாச்சரத்திலும் ஆண் பெண் தன்மை வலது இடதாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்மீக நிலை கொண்ட ஒரு இடத்தில் தம்பதிகளாக ஆசி வாங்கும் பொழுது ஆணின் வலது பக்கம் பெண் இருக்க வேண்டும். அதனால் தம்பதிகளின் பெண், ஆன்மீகவாதியின் பெண் தன்மைக்கும், தம்பதிகளின் ஆண் ஆன்மீகவாதியின் ஆண் தன்மைக்கும் வணக்கம் செய்வதை போல ஆகும்.

எனக்கு இத்தகைய வெளிச்சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஒருவன் பக்தியுடன் வணங்கினால் எப்படி இருந்தாலும் தவறில்லை என நினைப்பவன். ஆனால் தற்கால குடும்பங்களில் பெரியவர்கள் வழிகாட்டுவதற்கு இல்லை என்பதால் அனேக தம்பதியினர் என்னிடம் கேட்பார்கள். நானும் பொறுமையாக கூறுவேன். இருந்தாலும் அடுத்த முறை ஆசிவாங்க வரும் பொழுது அவர்களுக்கு குழப்பம் வந்துவிடும். மீண்டும் என்னிடம் கேட்ப்பார்கள். இப்படி குழப்பத்துடன் இருந்த தம்பதிகள் என்னிடம் அடிக்கடி கேட்க, நான் பொறுமை இழந்து சுப்புவை கைகாட்டி இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.

அடுத்த முறையிலிருந்து அவர்களிடம் குழப்பம் இல்லை...! நானும் ஆச்சரியத்துடன் எப்படி சுப்பு இவங்க குழப்பத்தை தீர்த்த? நானே தீர்க்க முடியாம இருந்தேனே என கேட்டேன். 

“வேற ஒன்னும் இல்லை சுவாமிஜி, கீப்  லெப்டு - மனைவி தான் எப்பவும் ரைட்டுனு சொன்னேன்” என்றான். எனக்கு இதில் ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு புரிஞ்சுதா?

-------------------------------

அரேபிய விமானம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாட்டிற்கு உண்டான விமான சேவையையே பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் விமான சேவை மிக குறைந்த கட்டணமாக இருக்கும். அல்லது அந்த நாட்டின் பிரத்யோகமாக குறைந்த கட்டண சேவையை தேர்ந்தெடுப்பதும் உண்டு. பெரும்பாலும் எனக்கான விமான சீட்டு வேறு ஒருவர் தான் எடுப்பார்கள். 

எனக்கு விருப்ப தேர்வு என இருக்காது. சமீபத்தில் எனது ஐரோப்பிய பயணத்திற்கு இதே போல மற்றொருவர் விமான சேவையை தேர்வு செய்தார். எதிஹாட் ஏர்வேஸ் என்ற விமான சேவை அது. துபாய் நகரை மையம் கொண்டு செயல்படும் நிறுவனம். முதன் முதலாக அரேபிய விமானத்தில் பயணம். 

நான் பயணம் செய்ய துவங்கும் முன் ப்ரார்த்தனையில் ஈடுபடுவது உண்டு. அதே போல இந்த விமானத்தில் அமர்ந்ததும் பெல்ட் அணிந்து கண்களை மூடி ப்ரார்த்தனை செய்ய துவங்கும் சமயம், ஸ்பீகரில் குரல் ஒலித்தது....! திருக்குரானிலிருந்து அற்புதமான வரிகள்..என் ப்ரார்த்தனைக்கு மிகவும் நெருக்கமான வரிகள் மெய்சிலிர்த்து போனேன்.

பெரும்பாலான விமான சேவைகள் ப்ரார்த்தனை செய்வதில்லை. இஸ்லாமிய விமான சேவை அனைத்திலும் இது போன்ற ப்ரார்த்தனைகள் இருப்பதாக அறிந்து மகிழ்ந்தேன். அனைத்து விமானங்களிலும் இச்சேவையை துவங்கலாம். சமயசார்பற்ற நாடுகள் அனைத்து சமய ப்ரார்த்தனையையும் செய்யலாம். இது ஒரு வேண்டுகோள்.

அது சரி அந்த திருக்குரான் ப்ரார்த்தனை என்ன என்று தானே கேட்க்கிறீர்கள்? எனக்கு தெரிந்த முறையில் மொழி பெயர்த்துள்ளேன்.

முழுமுதற்கடவுளின் பெயரால் அவரை வணங்குகிறேன். இறையருள் நம் அனைத்து பயணங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே இறையருள் திரும்பி வருவதற்கும் துணை நிற்கட்டும். 

இப்படி அனைத்து விமானங்களிலும் ப்ரார்த்தனை செய்ய துவங்கினால்., மத நம்பிக்கையும் ப்ரார்த்தனையில் நம்பிக்கையும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் ஒரு வழி உண்டு. அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே பஞ்சு வாங்கி காதில் வைத்துக்கொள்ளலாம்..!

---------------------------------------
ஜென்னிசம்

வானிலிருந்து இறங்கிய 
பனித்துளியால் புல் நிறம் மாறவில்லை 
மாறாக தலைசாய்த்து பணிந்தது...!

Monday, March 18, 2013

கும்பமேளா அனுபவங்கள் - பகுதி 2


கும்பமேளா தொடர் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. உண்மையை சொன்னால் எனக்கும் தான். கும்பமேளா தொடர் எழுத துவங்கும் முன் பிற தொடர் போல எழுதாமல் சற்று வித்தியாசமாக எழுத நினைத்தேன். 

வித்தியாசமாக என்றால் என்ன என விளக்குகிறேன். கும்பமேளாவை பற்றி ஆழ்ந்து யோசனை செய்துவிட்டு சங்கல்பத்துடன் தியானம் செய்வேன். ஆழ்நிலை தியானத்தில் இருந்து  வெளிவரும் பொழுது விரியும் காட்சியை எழுத்தாக பதிவு செய்வது.இதற்கு தியான முறை எழுத்து (Meditative Writings)  என பெயர்.

தியான முறையில் எழுதுவதால் என் கற்பனைக்கோ அல்லது எனது அறிவை அதில் செலுத்துவதோ கிடையாது. தியான காட்சியை பதிவு செய்வதால் சில நேரம் நான் கற்பனை செய்து எழுதுவதைவிட கும்ப மேளா தொடர் அருமையாக இருந்தது.கும்பமேளா தொடரில் வந்த காட்சிகள் உண்மையா? அதில் இருக்கும் சோமநாத், ஆதிநாத் எல்லோரும் நிஜமா? என கேட்டால் எனக்கு தெரியாது என்றே சொல்லுவேன். நான் கண்டதை உங்களுக்கு எழுதவில்லை, நான் தியானத்தில் கண்டதையே எழுதினேன்.

பலர் என்னுடன் கும்பமேளாவில் பங்குபெற வந்தவர்கள் சோமநாதரையும், ஆதிநாதரையும் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னிடமும் அவர்களின் முகவரியை விசாரித்தார்கள். நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என சிவவாக்கியர் என்பவர் சொன்னதை இவர்கள் மறந்துவிட்டனர். நமக்குள்ளே இருக்கும் நாதரை தானே தேடவேண்டும்? 

கும்பமேளா தொடரில் முக்கியமாக ஒரு விஷயம் விட்டுப்போனது. அது கும்பமேளா என்றால் என்ன என்ற கருத்துத்தான். இது ஒரு முரண்பாடான வேடிக்கை.

இத்தருணத்தை பயன்படுத்தி கும்பமேளா என்பதை விளக்கிவிடுகிறேன். கும்பமேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறும். அலஹாபாத், நாசிக், உஜ்ஜயனி, ஹரித்வார் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுவதால், ஒவ்வொரு நகரிலும் பன்னிரு வருடத்திற்கு ஒருமுறையே கும்பமேளா நடக்கும். அலஹாபாத் என்ற நகரில் நடக்கும் கும்பமேளா மஹாகும்பமேளா என அழைக்கப்படுகிறது. இந்த நகரில் கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகளின் இணைவு ஏற்படுவதால் முக்கியமான ஆன்மீக நகரமாகவும், கும்பமேளாவின் ஆரம்ப நகரமாகவும் கருதப்படுகிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா பூர்ண கும்பமேளா என அழைக்கப்படுகிறது. கிரக நிலையிலும், அன்மீக நிலையிலும் இத்தகைய கும்பமேளா 367 வருடங்களுக்கு ஒரு முறையே வரும் என கூறப்படுகிறது. என்ன தவம் செய்தேனோ பூர்ண கும்பமேளாவில் திளைத்திட என இன்றும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். 

முக்கியமாக பல விஷயங்களை அங்கே கண்டோம். ஒரு நாள் இடைவிடாத மழையால் நாங்கள் தங்கிய குடிலுக்குள் நீர் சூழ்ந்துவிட்டது. முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்க இருக்க இடம் இல்லாமல் பரிதவித்து கோபமும், ஆற்றமையுடன் வெளியே வந்து நின்றோம். ஆனால் எங்கள் அருகே இருந்த பிற குடிலில் வசிப்பவர்கள், சாப்பாடு தட்டில் கரண்டியை வைத்து தாளமிட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் புரியாமல் பார்க்க, “தினமும் கங்கைக்கு நாம் குளிக்க செல்லுவோம். ஆனால் இன்று கங்கையே எங்களை தேடி வந்துவிட்டாள்” என அவர்கள் சொல்லி கொண்டாடினார்கள். வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் கொண்டாட்டம் செய்யலாம் என்பதை அவர்களிடத்தில் கற்றுக்கொண்டோம். மேலும் எங்களின் கோப உணர்ச்சிக்காக வெட்கி தலைகுனிந்தோம்.

மேலும் பூர்ண கும்பமேளாவில் நடைபெற்ற சக்தி தரிசனம் மற்றும் பூர்ண யாகம் ஆகியவை மிக உன்னதமாக இருந்தது. அதில் பங்குபெற்ற சிலருக்கு நல்ல அனுபவம் கிடைக்கப்பெற்றது.



இப்படி அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவிதத்தில் என் கும்பமேளா அனுபவங்களின் வாயிலாக ஏற்பட்ட திருப்தி அடுத்த 366 வருடங்களுக்கு தாங்கும். பிறகு அடுத்த பூர்ண கும்பமேளாவில் எனது அனுபவங்களை பகிரும் வரை காத்திருங்கள். ஜஸ்ட் 366 வருடங்கள் தானே?

-ஓம் தத் சத்-

Thursday, March 14, 2013

கும்பமேளா அனுபவங்கள்


மஹாஉன்னதமான தருணங்களை இறையருள் என்றும் அளிக்கிறது. அதில் மிகவும் சில தருணங்களை இறையருள் மிக நெருக்கமாக உணரும்படி அமைக்கிறது. அத்தகைய தருணங்கள் பாறையில் செதுக்கிய சிற்பங்களை போல நம்மில் ஆழ்ந்து பதியும். சென்ற வருடம் ஒரு நன்னாளில் கும்பமேளா சென்றுவிட மனம் ஏங்கியது. 

 நீல அம்பு குறி இருக்கும் இடத்தில் எங்கள் குடில் இருந்தது.



எதற்காகவும் ஆசைப்படாமல் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து செல்லும் பணியாளாக இருந்த எனக்கு இவ்வாறு ஆசை உருவானது தவறுதான். பணியாளனின் வேலையை பாராட்டி கொடுக்குக்கப்படும் ஊதியத்துடன் கொடுக்கும் விடுப்பை போல இறையாற்றல் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது.

55 நாட்கள் நடைபெறும் மஹாகும்பமேளாவில் ஒரு மாதம் தங்கும் திட்டத்துடன் பயணமானேன்.கிருஷ்ண ஏகாதசி, மெளனி அமாவாசை, வஸந்தபஞ்சமி, ரத சப்தமி, பெளர்ணமி என முக்கியமான நீராடவேண்டிய நாட்களை மனதில் வைத்து கும்பமேளா சென்றோம்.

எங்களுக்கு அமைந்த குடிலும் அதன் சூழலும் உனதமாக இருந்தது. ஏகாந்த சூழலில் இடையறாது பஜனை கோஷங்கள் நிறைந்த பக்திமிகு சூழல் அமைந்தது. மெளனி அமாவாசை (தை அமாவாசை) தினத்தில் புனித நீராட பல மாணவர்கள் தமிழகத்திலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர். 


மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. 6 கோடிக்கு மேல் அன்று மட்டும் நீராடி சென்றார்கள் என அரசு கணக்கீடு சொல்லுகிறது. கலாச்சாரம் துவங்கி எப்படி வாழ்க்கையை பக்தி மயமாக செலுத்துவது வரை பல விஷயங்களை இப்பயணம் எனக்கும் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தது.

என்னுடன் அதிக நாட்கள் தங்கி இருக்க விருப்பம் கொண்டு பலர் வந்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புடன் என்னுடன் இருக்க வந்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்ததா என தெரியவில்லை. முக்கியமாக எனது வெளிநாட்டு மாணவர் வருவதற்கு முன்பே, “ சுவாமி உங்களுடன் இருபது நாள் தங்கி இருக்க வருகிறேன். இந்த நாட்களில் என்ன பாடங்கள் கற்றுத்தருவீர்கள்? தினமும் எத்தனை மணிக்கு பாடம் நடக்கும்?” என கேட்டார். நான் சிரித்துக்கொண்டே வாருங்கள் பின்பு திட்டமிடலாம் என சொன்னேன்.

அவர் வந்ததிலிருந்து பயிற்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் மிகவும் நோக்கமாக இருந்தார். நானோ காலை எழுந்து கங்கையில் குளித்து ப்ரார்த்தனை செய்துவிட்டு, அனைவருக்கும் சமைக்க துவங்கிவிடுவேன். உணவு சாப்பிட்டவுடன் உரையாடலும், ஓய்வுமாக இருக்கும். பிறகு மதியம் மீண்டும் குளியல், ப்ரார்த்தனை சமையல் பிறகு தூக்கம்.இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதை இவர்கள் ஏன் கும்பமேளாவில் வந்து செய்ய வேண்டும், இவர்கள் ஊரிலேயே செய்யலாமே என கேள்வி எழ ஆரம்பித்தது.அவரின் குழப்பமான முகத்தை நான் புன்னகையுடன் கடந்தேன்.

கும்பமேளாவில் இருந்து கிளம்பும் நாளில் அவர் பின்வருமாறு கூறினார், “ஸ்வாமி நான் பயிற்சிகளில் கற்பதை விட நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எந்த சூழலிலும்,எந்த காலநிலையிலும் எப்படி உள்நிலை சலனம் இல்லாமல் இருப்பது என்பதையும், உள்நிலைஆனந்தம் கெடாமல் அந்த ஆனந்தத்தை எப்படி அனைவருக்கும் அளிப்பது என்பதை கற்றேன்.” என கூறி சென்றார்.

அதற்காகத்தானே கும்பமேளா வந்தோம்?

(அனுபவம் தொடரும்) 

Saturday, January 26, 2013

கும்பமேளா 12


அற்புதமான காட்சியை கண்ட பரவசத்தில் இருந்தார் அப்பு. பல லட்சம் மக்களும் அப்புவாகவே இருக்க..எங்கும் அப்புவின் தோற்றம் தெரிய அனைத்தும் தாமாகவே இருக்கும் உணர்வை பெற்றார்.

தனது ஆனந்தத்தை வெளிப்படுத்த சோமநாதரை நோக்கி திரும்பினார் அப்பு. அங்கே சோமநாதர் இல்லாமல் அங்கும் அப்புவின் உருவமே தெரிந்தது. அனைத்தும் தானாகி அனைத்தும் அவனாகி நின்ற தருணம் அப்புவை ஆனந்தத்திற்கு அப்பால் செலுத்தியது.

சில ஷணங்களுக்கு பிறகு தன்னிலை திரும்பினார் அப்பு. கண்களில் கண்ணீர் பெருக சோமநாதரை விழுந்து வணங்கினார்.

மெல்ல சோமநாதரின் உருவம் மறைந்து பெரும் ஒளியாக காட்சியளித்தார். பூமியிலிருந்து வானம் வரை பெரும் பிரகாசமாக ஒளிப்பிளம்பாக சோமநாதர் மாறினார்.

அந்த ஒளி சிறிது சிறிதாக பெரிதாக அப்புவை சுற்றியும், அப்புவின் உள்ளும் பிரகாசிக்க ஒளிதுகள்களாக வெடித்து சிதறி அதனில் கலந்தான் அப்பு.

-------------------------------------

சூரியன் உதிக்கும் அதிகாலை நேரம்...

பரமானந்த அனுபவத்திற்கு பிறகு அப்புவிடம் அசைக்க முடியாத ஒரு உள்நிலை ஆனந்தம் ஓடியபடியே இருந்தது.

மஹா கும்பமேளா தன்னை பல்வேறு ஆன்மீக அனுபவங்களை ஏற்படுத்தியது என உணர்ந்தார் அப்பு. ஆனாலும் ஆதிநாதரை பார்க்காத கவலை எஞ்சி இருந்தது.

சோமநாதர் முன் சென்று, “குருவே உங்களுக்கு தெரியாத ஒன்றை நான் புதிதாக கேட்க முடியாது. பேரானந்த அனுபவங்களை அளித்த நீங்கள் எனக்கு ஆதிநாதரையும் காட்டி அருளுங்கள்” என கேட்டு அவரின் பாதங்களில் சரணடைந்தான்.

மெல்ல தன் பாதத்தை எடுத்து அப்புவின் மார்பில் வைத்தார் சோமநாதர்.

கூடாரத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரகாசமாக ஒளிரத்துவங்கியது. நீண்ட சங்கின் ஒலி கேட்க அங்கே பிரகாசமான ஒரு உருவம் தோன்றியது. கண்களால் காணமுடியாத பிரகாசமான ஒளி உருவை வணங்கினான் அப்பு.

மெல்ல ஒளி குறைந்து உருவமாக வெளிப்பட அங்கே அப்புவின் தோற்றத்தில் இருந்தார் ஆதிநாதர்...!

தலை மழிக்கப்பட்டு, காது மடல்களில் துளையிட்டு செப்பு வளையங்கள் அணிந்து கையில் வலம்புரி சங்குடன் இருந்தார்.  தன் உருவமாகவே இருந்த ஆதிநாதரை வியப்புடன் பார்த்தான் அப்பு.

“என் பிரிய அப்பு, எனக்கு உருவம் என்பது இல்லை. உன்னுள் இருக்கும் ஆவலை தீர்க்கவே இவ்வாறு உன் உருவில் காட்சி அளிக்கிறேன். உண்மையில் நான் எப்பொழுதும் எங்கும் உன்னுடனேயே இருக்கிறேன். ஆதிநாதனும், சோமநாதனும், அப்புவும் வேறுவேறு அல்ல. அனைத்தும் ஒன்றே..!” என கூறி...

இரண்டு அடிகள் நடந்து சோமநாதருடன் ஆதிநாதர் முழுமையாக கலந்தார்.
சோமநாதர் சில அடிகள் முன் வந்து அப்புவடன் கலந்தார்.

தன்னுள் அனைத்தும் ஒடுங்க இறைஒளி விளங்க பரமானந்தத்தில் திளைத்தார் அப்பு.

இறைவனும் குருவும் வேறுவேறல்ல என்பதையும், தானும் குருவும் வேறுவேறல்ல என்பதையும் உணர்ந்து எல்லைகள் இல்லா பேரானந்தத்தில் மூழ்கினார்

தன் உணர்வு பெரும் பொழுது சோமநாதர் தன் முன் அமர்ந்திருக்க, அவர் முன் அமர்ந்திருந்ததை உணர்ந்தார். அப்புவின் தலை மழிக்கப்பட்டு அவரின் காதுகளில் செப்பு வளையம் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று முதல் நாதப் பாரம்பரியத்தில் மற்றும் ஒரு நாத் மலர்ச்சி அடைந்தார்.

------------------------

சோமநாதர் மெல்ல நடந்து சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்கையும், ருத்திராட்ச மாலையையும் எடுத்தார். அவை ஒளியுடன் பிரகாசித்து துகள்களாக மாற்றி தன்னுள் ஐக்கியமாக்கினார்.

அதே நேரம் தாயாரின் வீட்டிலிருந்து அப்பு கிளம்பி சோமுவுடன் தன் வீடு நோக்கி பயணமானார்கள்.

--------------------

சோமநாதர் அப்புவின் உடலை மெல்ல தொட்டார். சோமநாதரின் தொடும் காரணத்தை உணர்ந்த அப்பு கண்களை மூடினார். இருவரும் அந்த மாநகருக்குள் இருக்கும் மலைக்கோவிலின் குகையில் இருந்தார்கள்.

சோமநாதரின் உதவியுடன் தன் உடலை பெற்றும் முழு உணர்வுக்கு திரும்பினார் அப்பு. அங்கே விட்டு சென்ற நிலையிலேயே உடல் இருந்தது. உடல் உணர்வு நிலைபெற்றாலும், சூட்சம உடலின் தோற்றமும் உணர்வும் மேலோங்கி இருந்தது.

சாதாரண ஜீவனாக சென்ற அப்பு ஜீவன் முக்தனாக சோமநாதருடன் திரும்பி வந்தான்.வீட்டில் இயல்பாக சென்று, தன் இருப்பையும் ஆன்மீக உயர் நிலையையும் வெளிப்படுத்தாமல் சாதாரண கணவனாகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும் வாழ்ந்து வருகிறான்.

சோமநாதர் என்ற சோமு வழக்கமான குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு சென்று, அதிக மார்க் எடுக்கும் போட்டியில் போராடி வருகிறார்.

(மேளா நிறைவு பெற்றது)

Tuesday, January 15, 2013

கும்பமேளா - 11


கும்பமேளா மைதானத்தின் மையத்தில் இருந்த அந்த கூடாரத்தின் உள்ளே அப்புவும், சோமநாதரும் அமர்ந்திருந்தனர்.

புனித ஸ்நானம் செய்துவிட்டு வந்து அமர்ந்திருந்த அப்பு ஒருவித பரவச நிலையில் இருந்தார். வந்து சில நாட்களாக இங்கே இருக்கிறோம் எந்த விதமான பசியோ களைப்போ ஏற்படவில்லை என்பதை உணர்ந்திருந்தார்.

இந்த எண்ணத்துடன் அப்பு சோமநாதரை பார்த்தார், “நமக்கு ஐந்து உடல் இருக்கு. சதை எலும்பு கொண்ட ஊண் உடல் காலத்திற்கும், இடத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனா மிச்ச நாலு உடம்பும் அப்படி இல்லை. நாம ஊண் உடலை விட்டுட்டு இங்கே வந்துட்டோம். அந்த உடம்புக்குத்தான் பசி, தூக்கம் எல்லாம் இருக்கும்” என்றார் குருஜி.

அப்புவால் நம்பமுடியவில்லை. அனைத்தும் உணர்வதை போலவும், உண்மை போலவும் இருக்க எனக்கு உடம்பு இல்லை என எப்படி நம்புவது என தெரியாமல் முழித்தார்.

அப்புவின் அருகே வந்த சோமநாதர், அப்புவின் இதய மையத்தை தொட்டார். கண்களில் கூடாரம் மறைந்து ஒரு மலைப்பாதை தெரிந்தது. அங்கே அப்புவின் உடல் தளர்வாக படுக்கவைக்கப்பட்டிருந்தது. அருகே சோமநாதர் அமர்ந்து அப்புவுக்கு அவரின் உடலை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் சிறிது இதய மையத்தை அழுத்தினார் சோமநாதர். அங்கே அப்புவின் தாயார் அவரின் வீட்டில் இருப்பதை கண்டான். அப்புவின் அம்மா அப்புவை பார்க்க புறப்பட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

மீண்டும் கூடாரத்தில் இருப்பதை உணர்ந்து அப்பு தன்னிலைக்கு திரும்பினான். 

“குருஜி, அம்மா என்னை பார்க்க புறப்பட்டு வரங்க. வீட்டுக்கு வந்து நான் இல்லைனு தெரிஞ்சா அவ்வளவு தான். பெரிய பிரச்சனை ஆயிடும். தயவு செய்து நாம திரும்பி போயிடலாமா?” என கேட்டான்.

“ஓ போகலாமே. அப்பு உங்களுக்கு அருள்நிறைந்த ஆதிநாத்தை தரிசிக்க வேண்டாமா?” என சோம்நாதர் கேட்க, இயலாமையால் தவித்தார் அப்பு.

சப்தமாக சிரித்த சோமநாதர், தன் கையில் வைத்திருந்த வலம்புரி சங்கை எடுத்து அப்புவின் தலைக்கு அருகே வைத்து பிறகு கீழே மணலில் குத்தி நிறுத்தினார். 

ருத்திராட்சத்தை எடுத்து தன் தலை அருகே வைத்து வலம்புரி சங்கின் மேல் வைத்தார். வலம்புரி சங்கின் பெரிய பகுதிக்கு மேலே முண்டாசு கட்டினது போல ருத்திராச மாலை இருந்தது. ஸ்ரீசக்ரத்தை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டார். 

அப்புவை அருகே அழைத்து அந்த ஸ்ரீசக்ரத்தை தொட சொன்னார்.அப்புவின் கண்களில் காட்சி விரிந்தது.  தன் அம்மாவின் வீட்டிற்குள் அப்பு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்புவின் தோளில் சோம்நாத் குருஜி அமர்ந்துகொண்டு கைகளை அப்புவின் தலையில் முண்டாசு போல கட்டிக்கொண்டு இருந்தார்.அப்புவையும் தன் பேரனையும் பார்த்த தாயார் சந்தோஷத்தில் மிதக்க அப்படியே காட்சி சுருங்கி மஹாகும்பமேளாவின் கூடாரத்தில் இருந்தார் அப்பு.

காட்சியில் பார்த்ததை நம்பமுடியாமல் சோமநாதரை நோக்கி, “ இது எல்லாம் உண்மையா? இல்லை மாய காட்சிகளா?” என கேட்டார்.

“அப்பு அனைத்தும் உண்மையே..நீ இங்கே இருப்பதும், உன் தாயுடன் இருப்பதும், மலைக்கோவிலில் உடலாக இருப்பதும் உண்மையே...எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்வோம். அனைத்து உயிர்த் தன்மைகளும் ஒன்றாக இருக்க அனைத்தும் நாமாக இருக்கக்கூடாதா?” என விளக்கிய சோமநாதர் அப்புவின் கைகளை பிடித்து மேலே எழும்பி கூடாரத்தை விட்டு விண்ணில் பறந்தார்.அப்பொழுது அப்பு முதன்முதலாக அதான் சூட்சம உடலில் இருப்பதை உணர்ந்தான்.


மேலே சில மீட்டர்கள் உயரத்தில் மிதந்த வண்ணம் மஹாகும்பமேளா நடக்கும் சங்கம் மைதானத்தை முழுவதும் பார்த்தார் அப்பு. அங்கே லட்சக்கனக்கான மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

சற்று உற்று பார்த்தான் லட்சக்கணக்கான மனிதர்கள் அனைவரும் அப்புவாகவே இருந்தார்கள்...! சோமநாதர் புன்னகைத்தார்.

(மேளா தொடரும்)

Friday, January 11, 2013

கும்பமேளா - 10

தியானம் செய்ய இடையூராக இருக்கிறது என மனிதர்கள் இல்லாத இடத்தை நோக்கி பல முறை சென்று இருக்கிறார் அப்பு. ஆனால் இங்கே லட்சக் கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தாலும் ஒரு வித தியான நிலை தொடர்வதை உணர முடிந்தது.

உணவு, உறக்கம் போன்ற உடல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் குறைந்து இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் குருஜி சோமுவுடன் கழிப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதுமாக சென்றது.

அன்று வழக்கத்தை விட இரண்டு பங்கு மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. குருஜியிடம் கேட்க அவரை நோக்கி திரும்பினான், அவனை சைகையால் அமர்த்திவிட்டு, “இன்று முக்கியமான குளியல் நாள் அதற்காகத்தான் மக்கள் கூட்டமாக போகறாங்க” என கூறினார் குருஜி.

தன் மனதில் உதித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருஜியின் தன்மை அப்புவுக்கு  பழக்கமாகி இருந்தது என்பதால் ஆச்சரியமாக இல்லை.

குருஜி தொடர்ந்தார், “ மஹா கும்பமேளா, சூரியன், சந்திரன் மற்றும் குரு கிரக இணைவால் வருவதாக சொன்னேன் இல்லையா? இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிணையும் நாட்கள் கும்பமேளாவின் மிக முக்கியமான நாட்களாகும். தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி ஆகிய நாட்களில் நடைபெறும் கும்பமேளா எல்லா நாளும் அற்புதமான நாட்கள் தான் என்றாலும், பெளர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி ஆகிய நாட்கள் மிக முக்கிய நாட்கள். அன்னைக்குத்தான் வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் குரு கிரங்கள் நெருங்கின தொடர்புல இருக்கும். அன்று ஸ்நானம் செஞ்சா 21 தலை முறைகள் முக்தி அடையும் என ஆதிநாத் ஆசிர்வதிச்சிருக்கார். அதனாலதான் பாருங்க மக்கள் எத்தனை பேரு கூட்டம் கூட்டமா வர்ராங்க..”

“ஓ இவ்வளவு விஷயம் இருக்கா  கும்பமேளாவில்?அப்ப நான் ஸ்நானம் செஞ்சுட்டு வரட்டுமா?” என்றார் அப்பு.

“இருங்க, நானும் உங்களோட வர்ரேன்” என சொல்லி அப்புவுடன் நடக்கத் துவங்கினார் குருஜி.

கூட்டத்தின் நடுவே பல்வேறு மனிதர்களையும், யோகிகளையும், ஞானிகளையும் கடந்து கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு ஒரு படகில் ஏறி சென்றார்கள்.

அங்கே மையத்தில் இறங்கி குளிக்கத் துவங்கினார்கள். அப்பு இடுப்புவரை நீர் ஓடிக் கொண்டிருந்தது. குருஜிக்கு கழுத்துவரை நீர் ஓடிக்கொண்டிருந்தது.

இடுப்பில் ஒரு துண்டுடன் அளவுக்கதிகமான குளிரில் உடல் வெடவெடக்க அப்பு ஸ்நானம் செய்துகொண்டு ப்ரார்த்தனை செய்தான்.

அப்புவை படகில் ஏறி உட்கார சொல்லிவிட்டு, குருஜி மட்டும் நீரில் நின்று இருந்தார். 

நீரின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அப்பு சோம்நாதரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்புவும் சோமுவின் அப்பா என்ற நிலையை கடந்திருந்தான்.

கண்களை மூடி மெல்ல நீரின் உள் சென்றார் குருஜி. சில வினாடிகள் சலனமே இல்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தார். அவர் கை உயர்த்தி பெரிய ருத்திராட்ச மாலையை அளித்தார்.

மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்தார். மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து ஸ்ரீசக்ரம் ஒன்றை கொடுத்தார். 

மூன்று முறை முங்கி எழுந்து ஒவ்வொரு பொருளையும் அப்புவிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு படகில் ஏறி அமர்ந்தார்.

ஆற்றலுடன் இருந்த மூன்று பொருட்களையும் பார்த்து குருஜியிடம்  “என்ன இதுவெல்லாம்?” என கேட்டான் அப்பு.

“முன்பு வேறு உடலில் இருக்கும் பொழுது என் யோக ஆற்றலை இதில் சேமித்து வைத்திருந்தேன். ஆதிநாதரிடம் இவை இருந்தது. அவரிடம் இருந்து இந்த உடலுடன் வாழ இதை மீண்டும் வாங்கினேன்” என்றார் குருஜி.

பல்வேறு கேள்விகளால் உந்தப்பட்டான் அப்பு.“இத்தனை நாள் யோக சக்தி இல்லாமலா இருந்தீர்கள்? இதிலிருந்து சேமித்து பிறகு பெற முடியுமா?”

“ஆம். முடியும். சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்.. நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள் ”

“ஓ..சரி. இந்த பொருட்களை எல்லாம் அளிக்க ஆதிநாதர் இப்பொழுது இங்கே வந்தாரா?”

“ஆதிநாதர் வர வேண்டியதில்லை. அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் வந்து செல்லும் பயணி இல்லை. மஹா கும்பமேளாவை நடத்தும் முதன்மையானவர் இல்லையா? ”

“என்னால் பார்க்க முடியவில்லையே?”

“மீனுக்கு நீரை பார்க்க முடியுமா அப்பு? அது அதிலேயே மூழ்கி இருக்கிறது. அதுபோல ஆதிநாதர் எப்பொழுதும் இங்கே சூட்சமமாக இருக்கிறார்”

தத்துவார்த்தமான பதிலால் திருப்தி அடையாத அப்பு தலைகவிழ்த்தான்.

“ஏன் அவசரம்? நீங்கள் கண்டிப்பாக ஆதிநாதரை ஸ்தூலமாக சந்திப்பீர்கள்” என்றார் குருஜி.

இவ்வாறு இவர்கள் மஹாகும்பமேளாவில் மஹா உன்னதமாக இருக்கும் நேரத்தில் அப்புவின் அம்மா அப்புவின் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்பு அங்கு செல்வதாக சொல்லிவிட்டு தானே வந்திருந்தான்?

(மேளா தொடரும்)