Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, May 13, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 11

வெறுமை. என்னை சுற்றி உள்ள பாலைவன சமவெளியில் மட்டுமல்ல. என் உள்ளேயும் வெறுமை. வாழ்வின் விளும்பில் நிற்கிறோம். உதவி செய்ய ஒரு சிறு எறும்பு கூட கண் முன் இல்லை.

ஆண்டவா என்னை காப்பாற்று என கதறலாம். ஆனால் அப்படி ப்ரார்த்தனை செய்து பழக்கமற்றவன். சுயநலமாக எதற்கும் இறைவனை வேண்டியது இல்லை. அதனால் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் காப்பாற்று என எப்படி வேண்டுவது? அப்படி கேட்டு செய்வதாக இருந்தால் அது என்ன இறைவன்? நான் இறை ஆற்றல் துணையில்லாமல் இங்கே வர முடியுமா? அப்படி இருக்க நான் வேண்டி தான் அவர் என்னை காக்க வேண்டுமா? இப்படி பல தர்க்கங்கள் ஏழுந்து பிறகு அடங்கி மனம் வெறுமையானது. இது தான் ஜென் நிலையோ? 

காரின் முன் புறம் ஏறி அமர்ந்துவிட்டேன். சுப்பாண்டி கற்களை எடுத்து தூர வீசி கொண்டிருந்தான். ராம தாசி செய்வது அறியாது எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கருப்பு சர்ப்பம் போல மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. முழுமையான இருள் கவிழ்ந்தது. மெல்லிய குளிர் உடலை துளைக்க துவங்கியது. கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு கார் டயரில் உடலை வெப்பத்திற்காக அணைத்து உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி. பார்க்க பரிதாபமாக இருந்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும், காரின் உள் கூரையில் இருக்கும் சிறிய விளக்கின் ஒளி மட்டுமே இருந்தது. வேறு சலனங்கள் இல்லை. 

“சாமீ...அங்க பாருங்க...” என்றான் சுப்பாண்டி.

தூரத்தில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது. சில நிமிடங்களில் அது பெரிதாக தெரிய துவங்கியது. அருகே வர வர அது பெரிய ட்ரக் என்பது புரிய துவங்கியது.

அந்த வண்டியின் வெளிச்சத்தை விட சுப்பாண்டியின் முகத்தில் வெளிச்சம் அதிகமாகியது. மிக அருகே வந்து அந்த வாகனம் நின்றது.

அர்ஜண்டினாவின் அதிக மின் அழுத்த கேபிள் இணைப்பு வழங்கும் மின்சார இலாகாவின் வாகனம். அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்து இராமதாசியுடன் ஸ்பானீஷித்தார்கள்.

பாலைவனத்தின் ஓரத்தில் மின்சார கோபுரம் அமைத்து வேலை செய்யும் பொழுது தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி சமவெளியின் நடுவே தெரிவதை கண்டு ஏதேனும் அதிசயம் இருக்கும் என நினைத்து 80 கி.மீ பயணித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததோ பிரபஞ்ச அதிசயமான நான், ராமதாசி பின்னே சுப்பாண்டியும்...!

அந்த வண்டியின் பின்னால் இந்த வண்டியை கட்டி இழுத்து செல்ல துவங்கினார்கள். பல கேள்விகளுடன் என்னை சுப்பாண்டி பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் கேட்கவில்லை. நானும் ஏதும் பேசும் நிலையில் இல்லை.

வண்டி எங்களை இழுத்துக்கொண்டு 40 கி.மீ சென்று இருக்கும். திடீரென முன் சென்ற வாகனம் சமிக்கை செய்து நின்றது. வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராம தாசி வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த, மின் இலாகா வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி எங்கள் அருகே வந்தார். அவர் பேசியதை மொழிபெயர்த்தார் ராமதாசி.

“மன்னிக்கவும், நீங்க எல்லாரும் சாப்பிடாமல் ரொம்ப நேரம் பாலைவனத்தில் இருந்திருப்பீங்க. சாப்பிடறீங்களா தண்ணி வேணுமானு கேக்காம உங்களை கூப்பிட்டு வந்துட்டோம். இந்தாங்க தண்ணீர் பாட்டில். நீங்க நல்ல பசியில் இருப்பீங்க. எங்க கிட்ட நல்ல மாமிசம் இருக்கும் உணவு எதுவும் இல்லை. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்கன்ன என்னிடம் வெஜிட்டபிள் சாண்ட்விச் இருக்கு. தரட்டுமா?”

ஆ..வ்வ்வ்........பெருங்குரல் எடுத்து சுப்பாண்டி அழுக...நான் கைகளால் தொழுக... ராமதாசி உணவு பெற்றுக்கொண்டு வந்தார். பச்சை தண்ணீர் கேட்டால் கூட அதில் இரண்டு மாட்டு மாமிச துண்டுகளை இட்டு கொடுக்கும் அர்ஜண்டினாவில் , சைவ உணவு பார்ப்பதே அரிது. வெளி இடங்களில் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருக்க பாலைவனத்தில் அதுவும் வேறு ஒருவர் சைவ உணவை எங்களுக்கு அளிக்கிறார். இதை என்னவென்று சொல்ல ? 

காரில் இருந்த சிறிய விளக்கு 80 கி.மீட்டர் தூரம் தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்தாலும் யாராவது வந்து பார்க்க முயற்சிப்பார்களா? இது எப்படி சாத்தியமாயிற்று ? இப்படி பல கேள்விகள் மனதில்...

அன்றைக்கு அந்த ரொட்டியில் எங்கள் எழுதி இருந்தது...! வேறு என்ன சொல்லி கேள்வி அம்புகள் கொண்ட மனதை சமாதனம் செய்வது?

இப்படியாக நாங்கள் உயிர்த்தப்பி மீண்டும் முக்கிய சாலைக்கு வந்து அந்த மின்சார இலாக்கவினர் விடைபெற்றனர். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இது சாத்தியம் என சுப்பாண்டி என்னை இன்னும் கேட்கப்படாத கேள்வியாக கண்ணில் அந்த கேள்வியை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறான்.

மீண்டும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஜிபிஎஸ் துணையுடன் பயணம் தொடர்ந்தது...

(அன்பு பெருகும்)

Friday, May 9, 2014

வாழ்த்தும் அதன் பின்புலமும்

                                                       


இரு மனிதர்கள் சமூகத்தில் சந்திக்கும் பொழுது பரஸ்பரம் வாழ்த்து சொல்லுக்கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் இந்த வாழ்த்தின் பின்புலங்களை யாரும் ஆய்வு செய்வதில்லை. ஒரு சமூகமோ அல்லது இயக்கமோ பரஸ்பரம் தங்களுக்குள் கூறும் வாழ்த்து செய்திகள் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை பற்றியதாக இருக்கும் என்கிறது மனோதத்துவ ஆய்வு.

தற்காலத்தில் குட் மார்னிங் அல்லது குட் டே என உங்கள் மேல் அதிகாரிகளை பார்த்து நீங்கள் சொல்லுவது எனது நாளை கெடுத்துவிடாதே என்பதன் உள்கருத்தாகும். ஆனால் அதை நாம் வெளிப்படையாக சொல்ல முடியாதே? அது போல மதங்கள் சார்ந்தவர்களும் இயக்கங்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கு கிடைக்காததையும் தேவையானதையுமே பரஸ்பரம் வாழத்தாக பகிர்ந்து கொண்டார்கள்.

உதாரணமாக  நமக்கு தெரிந்த சில மதங்களையும் அதன் வாழ்த்துக்களையும் பார்ப்போம். பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதையே இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

கிருஸ்துவர்கள் “அசிர்வாதம்” (Bless you) என சொல்லுவதுண்டு. ஏசு கிருஸ்து தனது இறுதி நாளில் ஏன் என்னை கைவிட்டீர் என கேட்டதன் காரணமாகவும், அனைவரும் ஆண்டவரின் ஆசி உண்டு என்பதற்காகவும் இப்படி வாழ்த்துகிறார்கள். 

இஸ்லாம் உருவான சூழல் போர் மிகு சூழல் என்பதால் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என வாழ்த்திக்கொண்டார்கள்.

இந்திய மதங்களான சைவமும், வைணவமும்  தென்னிந்தியாவில் ஏற்படும் பொழுது பொருளாதார பின்னடைவு என்பது மக்களின் தன்மையில் இருந்ததால் ‘நாராயணா’ என்றும் ’சிவாய நம’ என்றும் கூறிக்கொண்டார்கள். இதற்கு எல்லா வளமும் பெற்றுக என அர்த்தம் உண்டு.

நமஸ்கார், நமஸ்தே என்பது வடமொழியில் கூறும் வாழ்த்துக்கள். இதற்கு உண்மைக்கு(ஆன்மாவுக்கு) வணக்கம் என அர்த்தம். செல்வ செழிப்பாலும் சுக போகத்தாலும் இந்தியா திளைத்த காலத்தில், உனக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டு அதை உணரு என வாழ்த்தினார்கள். வேத வரிகளான ருத்ரத்தில் கூட ‘நமஸ்து அஸ்து பகவன்” என ஆன்ம ரூபமாக இருக்கும் இறைவனை வணங்குகிறேன் என்ற வரிகள் உண்டு.

ஜெர்மனியின் நாஜிக்கள் ‘ஹெயில் ஹிட்லர்’ என தங்கள் தலைவர் பெயரை கூறிக் கொண்டார்கள். தங்கள் தலைவனை யாரும் வாழ்த்தவில்லை என்பதே இவர்களின் வாழ்த்தாக வெளிப்பட்டது. இந்த வாழ்த்தை தற்சமய ஜெர்மனியில் சொன்னால் 4 வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கும். அத்தனை சக்தி வாய்ந்த வாழ்த்து இது. 2 மில்லியன் மனிதர்களை காவு வாங்கிய வாழ்த்து. 

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரமத்தில் பரஸ்பரம் பார்க்கும் பொழுது “நித்யானந்தம்” என்பார்கள். அவர்களுக்கு நித்யமும் ஆனந்தம் கிடைத்ததா என தெரியவில்லை...!

இப்படியாக தங்களுக்கு இல்லாத ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமே வாழ்த்தாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. யாரையாவது பார்க்கும் பொழுது ஷம்போ மஹாதேவா என  வாழ்த்துவேன். இதற்கு மேலான இறை நிலைக்கு வணக்கம் என்று அர்த்தம்.  ஷம்போ என்பது வெற்று கூச்சல் அதற்கு அர்த்தம் இல்லை. பாமரத்தனமாக சொல்லவேண்டுமானால் இறைவனுக்கு ஓ போடு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படி சொல்வதனால் நமக்குள் ஏற்படும் ஸ்வாச மாற்றம் நமக்கு அறிவு தெளிவை ஏற்படுத்துகிறது. இது என் நம்பிக்கை மட்டுமே.

இந்த வாழ்த்து செய்த வேடிக்கையை கூறுகிறேன் கேளுங்கள். நான் வெளிநாடு செல்லும் நேரத்தில் எனது தொலைபேசியை தானியங்கி பதில் அளிக்கும் நிலையில் (auto voice reply) வைத்துவிட்டு செல்லுவேன். அப்பொழுது யாராவது அழைத்தால் “ஷம்போ மஹாதேவா நான் இந்த நாட்டுக்கு சென்று இருப்பதால் இரண்டு வாரம் கழித்து அழைக்கவும்” என குரல் ஒலிக்கும். அது நானே பேசி பதிவு செய்தது தான். 

இந்தியாவில் சிலருக்கு இந்த விஷயம் புதிது என்பதால் நான் ஊருக்கு வந்தவுடன் பேசும் பொழுது, “ நான் ரெண்டு வாரம் முன்னாடி கூப்பிடிருந்தேன், உங்க அஸிஸ்டெண்ட் மஹாதேவன் ஒருத்தர் தான் பேசினார்” என்பார்கள். அந்த நேரத்தில் எப்படி சமாளிப்பது என குழம்பிப்போவேன். நானும் எத்தனை நாள் தான் சிரிக்காத மாதிரியே நடிக்கிறது? :)

நீங்கள் கூறும் வாழ்த்துக்களை உணர்ந்து கூறுங்கள் என்பதற்கே இதை இங்கே பதிவு செய்கிறேன். இயந்திரத்தனமாக வாழ்த்துவதால் பயனில்லை. தேவையை வாழ்த்தாக வைப்பதைவிட இறை வணக்கத்தை வாழ்த்தாக வையுங்கள். மதம் கடந்து இயக்கங்கள் கடந்து இறைவனை வணங்கும் வாழ்த்தாக இது இருக்கட்டும்.

ஓம் தத் சத்

Monday, May 5, 2014

சென்னையில் ஹதயோக பயிற்சி

சென்னை வாழ் ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.